Tuesday, February 3, 2009

முரண்கள் பலவிதம் (1)

ஆங்கிலப் பேச்சில்
பிழையென்றால் வெட்கம்.
'டேமில் பேசவே தெரியாது'
சொல்வதற்குப் பெருமிதம்!

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.

கல்லூரிப்
பேச்சுப் போட்டியில்
'பெண்ணினத்துக்குத்
தீங்கிழைப்பவரைக்
கொளுத்துவோம்'
என்றவளும்
பின்னாளில் கொளுத்தினாள்..
சித்ரவதை செய்த
கணவனை அல்ல..
தன்னைத் தானே.

'தென்றலின் தொடுதலுக்கே
என் தேவதை நோவாள்
பூவை நுகர்ந்தாலே
பூமகள் துவண்டு போவாள்'
கவிதைக் கோலம்
வரைந்தான் கவிஞன்
கற்பனையின் உதவியோடு.
வீட்டுக்கு வந்ததும்
மனைவியின் உடலில்
இட்டான் கோலம்
சிகரெட்டின் உதவியோடு.

உயிருடன் உடல் எரிந்தால்
உணர்வுகள் மட்டு.
உயிர்த் தலைவியின்
உருவ பொம்மையை எரித்தால்
உடனுக்குடன் வைப்பார் குட்டு.

கையில்லாத ரவிக்கை
அணிந்த அழகுக் காரிகை,
இடித்துக் காட்டிய
அன்னையிடம்
'ஆபாசம் ஆடையில் இல்லை
பார்ப்பவர் மனதில் இருக்கிறது'
என்று சொல்லிவிட்டு
ஊர்வலத்தில் போனாள்
பெண்ணியம் பேசும் கூட்டத்தோடு
முதுகற்ற ரவிக்கையணிந்த
நடிகையின் சுவரொட்டி கிழிப்பதற்கு.

...(தொடர்ந்தாலும் தொடரும்)

24 comments:

மங்கை said...

தன்னை நியாயப் படுத்திக்கொள்ள முரண்கள் கைக்கு ரொம்ப இலகுவா வந்துடுது மலர்.. அது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும்...

hypocrisy = beliefs minus actions

:-))

நாகை சிவா said...

//கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.//

super..

I second Mangais coment

கோபிநாத் said...

ஒன்னொன்னும் தூள் ;)

\\...(தொடர்ந்தாலும் தொடரும்)\\

தொடர்ந்தாலும் வேண்டவே வேண்டாம் கண்டிப்பாக தொடருங்கள் ;)

தமிழ் said...

எதைவிடுப்பது
எனத் தெரியவில்லை
அத்தனையும் அருமை

/கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு./

இருந்தப்பொழுதும், என்
இதயத்தைத் தொட்ட வரி
இது தான்

ராமலக்ஷ்மி said...

திகழ்மிளிர் said...

//எதைவிடுப்பது
எனத் தெரியவில்லை
அத்தனையும் அருமை

/கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு./

இருந்தப்பொழுதும், என்
இதயத்தைத் தொட்ட வரி
இது தான்//

அப்படியே அட்சரம் பிசகாமல் வழிமொழிகிறேன்.

கவிதைக்கான படமும் வெகு பொருத்தம் பாசமலர்.

//...(தொடர்ந்தாலும் தொடரும்)//

தொடர வேண்டுகிறோம்.

Sanjai Gandhi said...

ஓவியம், கவிதை இரண்டுமே அழகோ அழகு. :)

அமுதா said...

அருமை.

pudugaithendral said...

என் பதிவில் உங்க பின்னூடத்தி்ற்கு
“உங்க கவிதைகளுக்காக வெயிட்டிங்னு” இப்பத்தான் பின்னூட்டம் போட்டேன்.

சந்தோஷமா இருக்கு. அருமையான வரிகள். ஒவ்வொன்றும் யதார்த்தமான உண்மை.

தொடருங்க ப்ளீஸ்

இப்னு ஹம்துன் said...

நாலு வருஷத்துக்கு முன்பு எழுதிய கவிதையை நினைவுக்கு கொணர்ந்தது உங்கள் கவிதை .நன்றி,

கிருத்திகா ஸ்ரீதர் said...

நச்சுன்னு இருக்கு மலர்... கண்டிப்பாகத் தொடருங்கள்

பாச மலர் / Paasa Malar said...

நமக்குள்ளேயே எத்தனை முரண்கள்..உண்மைதான் மங்கை..உங்கள் equation superb!

சிவா, நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி திகழ்மிளிர், ராமலக்ஷ்மி,கோபி,பொடியன்,கலா
கிருத்திகா, அமுதா..

இம்னு..

உங்கள் வரிகள் அருமை..வாழ்த்துகள்.

தமிழ் said...

தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழைத்துள்ளேன்.
மறக்காமல் இடுகை இட வேண்டுகிறேன்.
விபரங்களுக்கு இங்கே பாருங்கள்

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருக்கிறது முரண்கள்.கவிதைக்குப் பொய் அழகு என்பதிலும் முரணாகிப் போனது இந்த கவிதை. அருமை சகோதரி.

சொல்லரசன் said...

//ஆபாசம் ஆடையில் இல்லை
பார்ப்பவர் மனதில் இருக்கிறது'
என்று சொல்லிவிட்டு
ஊர்வலத்தில் போனாள்
பெண்ணியம் பேசும் கூட்டத்தோடு
முதுகற்ற ரவிக்கையணிந்த
நடிகையின் சுவரொட்டி கிழிப்பதற்கு.//

தற்போது இத்தகைய முரன்பாட்டிற்கு பெயர்தான் சுதந்திரம்

பாச மலர் / Paasa Malar said...

திகழ்மிளிர்,

அவசியம் பதிவிடுகிறேன்..கொஞ்சம் அவகாசம் தேவை.

பாச மலர் / Paasa Malar said...

ராதாகிருஷ்ணன்,
நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

சொல்லரசன்,

இதுதான் சுதந்திரம் என்ற நம்பிக்கை வருத்தத்துக்குரியதுதான்.

PNA Prasanna said...

Hi good website.
please refer my site and give your suggestions

http://pnaptamil.blogspot.com
http://pnapenglish.blogspot.com
http://pnappix.blogspot.com
http://pnaplinux.blogspot.com

ஜீவி said...

தனக்கென்றால் ஒன்று; இன்னொருத்தருக்கென்றால் இன்னொன்று
என்கிற தனி நியாயம் தான்
முரண்பாடுகளாய்
முகிழ்க்கின்றன என்று
நினைக்கிறேன்.

தொடர்ந்தாலும் என்ன...
நிச்சயம் தொடர வேண்டும்.

அன்புடன் அருணா said...

முரண்பாடுகள் இன்னும் எவ்வளவோ???கண்டிப்பாகத் தொடருங்கள்...நல்ல கருத்துக்கள்...
அன்புடன் அருணா

பாச மலர் / Paasa Malar said...

ப்ரசன்னா,

நன்றி..உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன் விரைவில்..

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் ஜீவி,

மாற்றுக் கருத்துகளும் மாற்றுக் கோணங்களும்தான் முரண்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி அருணா..