Friday, March 8, 2013

நான் அறிந்த சிலம்பு - 36

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 141 - 150


சிலம்பின் வரிகள் இங்கே: 151- 156
விழாவின் தொடக்கமும் முடிவும் முரசறைந்து அறிவித்தல்

விழாவின் தொடக்கமும்
என்று எப்போது என்ற விளக்கங்களை
வள்ளுவன் முரசறைந்து அறிவிப்பது வழக்கம்.

அம்மரபதன்படி
வச்சிரக்கோட்டத்து மங்கல முரசை,
அலங்காரம் செய்த கச்சினையணிந்த
யானையின் பிடரியில் ஏற்றி,
தூய வெண்மையான யானை நிற்கும்
இந்திரன் தோட்டத்துச் சென்று
அங்கிருந்தபடியே
விழாவின் தொடக்க நாளும்
முடியும் நாளும்
முரசறைந்து முறையே அறிவிக்கப்பட்டது.

கொடியேற்றம்

இப்பூமியில் இந்திரன் வந்து
தங்கிய இடம் என்ற பெருமை உடைத்து
கற்பகத்தரு நின்ற கோட்டம்;
அக்கோட்டத்துக்குச் சென்று
ஐராவதம் எழுதிய
மங்கல நெடுங்கொடியை
வானின் உயரத்துக்குப்
பறக்குமாறு ஏற்றினர்.

வீதியின் மங்கலத் தோற்றம்

பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தன
விழாவீதிகளில் இருந்த
பெரிய மாளிகைகளின் திண்ணைகள்.

மரகதமணிகள் வைரமணிகள் இழைத்திருந்த
பவளத்தூண்கள் நின்றிருந்தன
அத்திண்ணைகளில்.

கிம்புரி எனும் பூணுடன் கூடிய கொம்பையும்
முத்துச் சிப்பிகளைப் பிளந்து பெற்ற
ஒளிபொருந்திய முத்துக்களையும்
மங்கலம் பொருந்திய அழகிய ஓவியங்களையும்
மாலை வடிவில் வளைத்து அமைக்கப்பட்ட
மகரத் தோரணங்கள் அலங்கரித்தன
அம்மாளிகைகளின் வாயில் தோறும்.

மாசற்ற பசும்பொன்னால் ஆன
பூரண கும்பங்கள்,
பொலிந்து விளங்கும்
முளைப் பாலிகைகள்,
பாவை விளக்கு,
பசும்பொன்கொடி,
வெண்சாமரம்,
சுந்தரமான சுண்ணம் --
இவையனைத்தும் நெருக்கமாக
வீதியெங்கும் வைக்கப்பட்டு
இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன.
 

வல்லமை 03.09.12 இதழில் வெளிவந்தது.

Sunday, March 3, 2013

நான் அறிந்த சிலம்பு - 35

புகார்க்காண்டம் - 05, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 118 - 140
 
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 2

கூனர் குள்ளர் ஊமையர் செவிடர்
அழுகும் நிலையிலுள்ள
உடலையுடைய தொழுநோயாளர்
மூழ்கி எழுந்த நிலையிலேயே
உடற்பழுது இல்லாமல் நீங்கி
பார்ப்பதற்கு இனியவராய்க் காட்சியுற்று
ஊர்வலம் வரச் செய்யும்
பொய்கையைக் கொண்ட மன்றம்
இலஞ்சி மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

பிறரின் வஞ்சனையதன் காரணமாய்
அவரால் மருந்தூட்டப் பெற்று
மனதில் பித்து ஏறியவர்கள்,
நஞ்சினை உண்டு
நடுங்கவைக்கும் துயர் உற்றவர்கள்,
நெருப்பு நிகர்த்த நஞ்சுடைய
பாம்பின் கூரிய பற்கள்
நன்கு அழுந்தக் கடிப்பட்டவர்கள்,
முழி பிதுங்கிக் காணப்படும்
பேயினால் பிடிக்கப்பட்டுக்
கடுந்துன்பப் பட்டவர்கள் --

இவர் அனைவரும்
ஒருமுறை சுற்றி வந்து
தொழுது நின்|ற அளவிலேயே
அவர்தம் துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகும்பொருட்டு
ஒளிவீசும் நெடிய கல் நாட்டி நின்ற மன்றம்
நெடுங்கல் மன்றம் என்றே அழைக்கப்பட்டது.

தவக்கோலத்தில் மறைந்து திரியும்
தகாத தன்மையுடைய போலித்துறவிகள்,
கணவன் அறிந்திடாவண்ணம் மறைந்து
தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்
ஒழுக்கங்கெட்ட பெண்கள்,
தம் அரசனுக்கே உட்பகை
விளைவிக்க எண்ணும் அமைச்சர்கள்,
பிறர் மனைவியை விரும்புபவர்கள்,
பொய்சாட்சி சொல்பவர்கள்,
புறங்கூறித் திரிபவர்கள் --

"இவர்கள் யாவரும் நான் வீசும்
என் கைக்கயிற்றுக்குள் அகப்படுவர்"
என நாற்காததூரமும் கேட்கும்படிக்
கடுங்குரலில் எச்சரித்து,
அவரைத் தரையில் அறைந்து கொன்று உண்ணும்
பூதம் நின்ற மன்றம்
பூத சதுக்கம் என்றேதான் அழைக்கப்பட்டது.

அரசனவன் செங்கோல்
சற்றே தவறிடினும்
அறமது உரைக்கப்படும் அவைதனில்
நீதிநூல் நெறி வழுவ
ஒரு பக்கம் சார்ந்த தீர்ப்பு கூறப்படினும்
தன் நாவால் அத்தவறுகளை நவிலாது
தன் கண்களில் நீர் உகுத்து வருந்தியே
பாவை ஒருத்தி நின்று அழுகின்ற மன்றம்
பாவை மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

உண்மையான வாழ்வியல் நெறியை
உணர்ந்த சான்றோரால் போற்றப்படும்
ஐவகை மன்றங்களிலும் அரும்பலி இடப்பட்டது.
 
 
வல்லமை 27.08.12 இதழில் வெளிவந்தது.

Thursday, February 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 34

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 106 -117
 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 2

பொன்மணி வேலைகளில் சிறந்திருந்தாலும்
பொதுவாகப் பொன்வேலை நுண்ணியமாகச் செய்திடும்
சிறப்புமிக்க கம்மியரால் செய்யப்பட்டன அல்ல
அவ்வழகுப் பரிசில்கள்.

வச்சிரம், மகதம், அவந்தி
இந்நாட்டு அரசர்கள்
முன்னொரு காலத்தில் செய்திட்ட
உதவியதன் கைம்மாற்றாய்
'மயன்' எனும் தெய்வதச்சன்
தாம் செய்து அவ்வரசர்க்கு வழங்கியவை.

இங்ஙனம்
வெவ்வேறு நாடுகளில் வென்ற
திறைப்பொருட்களை ஒன்றாய்ச் சேர்த்து
உயர்ந்தோர் போற்றும் வண்ணம்
புகார்நகர் தன்னில் அமைக்கப்பட்ட
அழகிய மணடபம் தானது
'சித்திர மண்டபம்' எனும் பெயர் பெற்றது.
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 1

பிற பகுதிகளிலிருந்து
புகார் நகருக்கு வந்த புதிய மனிதர்கள்
தம் பொருட்கள் பொதிந்த மூட்டைகளில்
பெயர், அளவு, எடை இவற்றைக் குறித்த
குறியீட்டு எழுத்தினை இலச்சினையிட்டு
ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக்
குவியலாய்க் குவித்து வைத்திருந்தனர்
பண்டகசாலைகள் தம்மில்.
காவல் புரியவென்று எவருமில்லை
அப்பண்டகசாலைகளின் வாசல்களில்.
வலுவான தாழ்ப்பாள்களும்
நீக்கப்பெற்றிருந்தன கதவுகளில்.
பொருளுக்கு உரிமையானவரும் கூட
உடனில்லை காவலில்.

 
இருப்பினும் அவற்றைக் களவாட
எவரேனும் வரின் அவர்தம் தண்டனை என்ன?
களவாட நினைப்பவர் கழுத்து முறியுமளவு
கனமான பொதிகளை அவர் தலையில் ஏற்றி
ஊர் வலம் வரச் செய்து,
அப்பண்டத்தை அவரிடம் தராமல்
திரும்பப் பெற்றுக் கொள்வர்.

மனதாலே களவை நினைத்தாலே போதும்
நினைப்போரை தண்டனை
நடுநடுங்கச் செய்யும் அப்பண்டகசாலை
வெள்ளிமன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.
 
வல்லமை 20.08.12 இதழில் வெளிவந்தது.

Monday, January 28, 2013

நான் அறிந்த சிலம்பு - 33

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே:  89 - 90
 


சிலம்பின் வரிகள் இங்கே:  91 - 105

 
மண்டபத்தில் பலி இடம் - பகுதி 1

தமிழகத்து மருங்கில்
சேரரும் பாண்டியரும்
தம் ஆணைக்கு அடங்கிய நிலையில்,
மேற்கும் தெற்குமாகிய இருதிசைகளிலும்
தம்மை எதிர்த்தே போர்புரியும் மன்னர்
எவருமில்லாத காரணத்தால்
போர்த்தினவும் செருக்கும் நிறைந்தவன்
கரிகால் சோழன்.

அவன் தானும்
புண்ணிய திசையெனப் பெரியவர் போற்றிடும்
வடக்கு திசையது சென்று
அங்கேயாவது பகை பெற வேண்டி
போர்புரிய ஆசைகொண்டே
வாளுடன் குடையும் முரசும்
முன்னே சென்றிட
'எம் வலிமிக்க தோள்கள்
வடதிசையிலாவது பகைவரைப் பெறுக"
என்று தெய்வத்திடம் வழிபட்டேதான்
ஒரு நன்னாள் அதனில் புறப்பட்டனன்.


அங்கே நின்றிட்ட இமயமலை
அவனைத் தடுத்தேதான் நின்றிட்டது.
"குறைந்திடாத என் ஊக்கமதனுக்குத்
தடை விதித்திட்டதே இம்மலை"
எனச் சினந்தனன் கரிகாலன்.


இமையாத கண்கொண்ட தேவர் வாழும்
அவ்விமயமதன் உச்சி தன்னில்
பொறித்து வைத்தனன்
தம் புலிச்சின்னம் அதை.


இமயத்துக்கு அப்பாலும் சென்றிட எண்ணியவன்
எண்ணமதைக் கைவிட்டே
சோழநாடு திரும்பினன்.

(கரிகாலன் சாத்தன் எனும் தெய்வம் தனக்குத் தந்த செண்டு என்னும் படைக்கலத்தால் இமயத்தை அடித்துத் திரித்து அதனையே புலி போலப் பொருத்தினான் என்றொரு வழக்குண்டு.)

திரும்பிய வழியில் திறைகள் பலதந்து
அயல்மன்னர் பகைமன்னர் நட்புமன்னர்
பலரும் மகிழ்ந்தனர்.

கடலை அரணாக உடைய
பகையும் நட்பும் இல்லா அயல்மன்னன்
வச்சிரநாட்டு வேந்தன் தந்தது
முத்துப்பந்தல்;
வாட்போர் வல்லவன்
மகதநாட்டு மன்னன்
போர் புரிந்து தோற்றுத் தந்தது
பட்டி மண்டபம்.
மனம் உவந்த நல் நண்பனாகிய
அவந்தி நாட்டு வேந்தன் தந்தது
அழகிய மிகவும் உயர்ந்த
வேலைப்பாடுகளுடனான
தோரண வாயில்.

பொன்னாலும் மணியாலும்
புனையப்பட்டுப் பொலிந்தன
இப்பரிசில்கள் மூன்றும்.
 
 
வல்லமை 13.08.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, January 2, 2013

நான் அறிந்த சிலம்பு - 32

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 76 - 88
 
பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப்பலி கொடுத்தல்

மருவூர்ப்பாக்கத்தின் வீரமிகு மறவரும்
பட்டினப்பாக்கத்தின் படைக்கல வீரரும்
பெரிய பலிபீடமதன் முன்சென்று
"வீரமிக்க எம் மன்னர் தமக்கு
உற்ற துன்பம் ஒழித்திடுக"
என் வேண்டியே நின்றனர்.

"பூதத்துக்குத் தம்மைப்
பலிதானம் புரிந்தவர்
வலிமையின் எல்லையாக விளங்குவர்"
எனச் சூளுரைத்தனர்.

கல்வீசும் கவண்வீரர் சிலரும்
கருந்தோல் கவசம் அணிந்து
வேல்தாங்கிய வீரர் பலரும்
குழுமி நின்றனர் ஆங்கே.
ஆரவாரத்துடன் போர்க்களமதில்
வெற்றிகள் பல கண்ட அவர்
தத்தம் தோள்களைத் தட்டியே
ஆர்ப்பரித்து நின்றனர்.

கண்டவர் அஞ்சும் வண்ணம்
நுனி சிவந்த
சுடுகொள்ளி நிகர்த்த பார்வையுடன்,
"வெற்றி வேந்தன்
வெற்றியென்றும் கொள்க"
என்றே முழங்கித்
தமது கருந்தலையைத்
தம் கைகளாலேயே
நன்மை பொருந்த
வெட்டித்தான் வைத்தனர்
பலிபீடம்தன்னில்.

உயிர்ப்பலி கொண்ட அவ்வேளை
இடிமுழக்கமென ஒலித்தது
நாளங்காடிப் பூதத்தின் குரலது
நாற்றிசை மருங்கிலும்.

பலிபீடத்தில் வெட்டி வைக்கப்பட்ட
தலையற்ற உடல்கள்
வாயினால் உரைக்க இயலாமையால்
தம் தோளில் பூண்டிருந்த
மயிர்கள் நீக்கப்படாத முரசதை அறைந்து
"பலி தந்திட்டோம்; ஏற்றிடுக"
என்றே முழங்கிய ஆரவார ஒலிகளுடன்
முரசின் ஒலியும் சேர்ந்தே ஒலித்தது.
 

வல்லமை 06.08.12 இதழில் வெளிவந்தது.

Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Monday, December 10, 2012

நான் அறிந்த சிலம்பு - 31

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

நாள் அங்காடி பூதத்தை மறக்குல மகளிர் வழிபடுதல்

சிலம்பின் வரிகள் இங்கே: 60-75

இருபெரு வேந்தர்
போர் செய்யும் முனைப்பில்
வந்து தங்கும் பாசறைகளுக்கு
இடைப்பட்ட நிலத்தில் இருக்கும்
இருவர்க்கும் பொதுவாக அமைந்த
போர்க்களம் அது போல
மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம்
இடையேயுள்ள நிலப்பரப்பில்தான் இருந்ததுவே
நாள் அங்காடி எனும் கடைத்தெரு.

நெருக்கமாய் நெருங்கி வளர்ந்திருந்த
சோலையதன் மரங்களின் அடிகளைத்
தூணாகக் கொண்டேதான்
அமைக்கப்பட்டிருந்தன கடைகள்.


அக்கடைகளில்தாம் பொருட்களை
விலை பேசி விற்போர் குரலும்
விலை கொடுத்து வாங்குவோர் குரலும்
ஒலித்துக்கொண்டேயிருந்தது
தொய்வின்றித் தொடர்ச்சியாக.
 
முன்னொரு முறை
முசுகுந்தன் என்ற சோழவேந்தன் தானும்
அசுரவதம் செய்ய உதவினன் இந்திரனுக்கு.
அச்செயல்தனைப் பாராட்டும் முகமாய்
புகார் நகரையும் அரசனையும்
காப்பதற்கென்றே வலிமைமிக்க
பூதமொன்றைப் பரிசளித்தனன்
இந்திரன் முசுகுந்த மன்னனுக்கு.

அப்பூதம் தானும்
காவிரிப்பூம்பட்டினத்தின்
நாளங்காடி மருங்கில்
தங்கியே நின்று தக்க காவல் புரிந்தது.

இந்திர விழாவின் தொடக்கத்தில்
அப்பூததுக்குப் பலிகள் இட்டு
வணங்கி வருவது மரபு.
அம்மரபின் அடியொற்றியே
நிகழ்ந்தன பூசைகள் நாளங்காடிதன்னில்.

சித்திரை மாதத்தில்
சித்திரை நட்சத்திரத்தில்
நிறைந்த முழுமதி நாளன்று
நாளங்காடி மருங்கே
திரண்டு வந்தனர் மறக்குல மகளிர்.

"வெற்றிவேல் ஏந்திய முசுகுந்த மன்னனுக்கு
உற்ற துயர் ஒழித்திடுவாயாக"
என்றேதான் வேண்டி இந்திரன் ஆணைப்படி
புகார் நகரக் காவல்பூதத்தின்
கோயில் வாசல் பலிபீடத்தில்
அவரை துவரை புழுங்கிய பண்டங்கள்
எள்ளுருண்டைய் கறிச்சோறு
இவற்றுடன்
பூக்கள் நறும்புகை பொங்கல்
படைத்தேதான் வழிபட்டனர்.

பின் தெய்வம் ஏறி
துணங்கைக்கூத்தராகி, குரவைக்கூத்தராகி
ஆடி மகிழ்ந்து
"எம்பெருநில மன்னவன் அவன்
காத்தருளும் இருநிலமும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
மழையும் வளமும் சுரந்திடுக"
என வாழ்த்துப் பாடியே
அழகிய கோலம்பூண்ட மறக்குல மகளிர்
வல்லமையுடன் ஆரவார ஓசையுடன்
முழங்கியே விழாவது கொண்டாடினர்.
 

வல்லமை 30.07.12 இதழில் வெளிவந்தது.