Tuesday, October 9, 2012

குறளின் குரல் - 59

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 959


நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.


விளக்கம்:

நிலத்தின் இயல்பை, அந்த மண்ணில் விளைந்த பயிர்கள் காட்டி விடும். அதுபோலவே, நற்குடியில் பிறந்த ஒருவரின் இயல்புகளை அவர்கள் பேசும் சொற்களே காட்டி விடும்.
-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 599


பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


பரியது கூர்ங் கோட்டது ஆயினும், யானை
வெரூஉம் புலி தாக்குறின்.


விளக்கம்:


விலங்குகளில் அதிகம் பருமனானதும், கூர்மையான தந்தங்களையும் உடையது யானை. இருப்பினும் அதற்குப் போதுமான அளவு ஊக்கம் இருப்பதில்லை.
எனவே, அதனினும் உருவத்தில் சிறிய, ஆனால் ஊக்கத்தில் பெரிய புலி தாக்குமானால், ஊக்கமற்ற காரணத்தால் யானை அஞ்சி நடுங்கும்.
பிற வலிமைகளைப் பெற்றிருந்தாலும், ஊக்கமின்மையால் ஓர் அரசர், ஊக்கமுடைய பிற அரசர்க்கு அஞ்சுவர்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 894


கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.


விளக்கம்:

ஆற்றலில் சிறந்தவர்க்கு, அதிக ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய எண்ணக் கூடும்.

அது தம் அழிவு காலத்தைத் தாமே வலிந்து கையசைத்து வரவேற்று அழைப்பதற்கு ஒப்பாகும்.

ஆற்றலில் சிறந்தவர்க்குத் துன்பம் விளைவிக்க எண்ணுவது, தமக்குத் தாமே துன்பத்தை வரவழைக்கக்கூடியதாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99


இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.



இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது.



விளக்கம்:


பிறர் தம்மிடம் இன்சொல் பேசும் போது அது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று உணர்பவர்கள், பிறரிடத்து இன்சொல்லைப் பேசாமல் வன்சொல் பேசுவது எதற்காகவோ?
---------------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 835


ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.


ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு.


விளக்கம்:

தன்னிச்சையாக, ஒருமுகச் சிந்தனையோடு செயல்படுவான் அறிவுத்திறன் அற்ற பேதை; அவன் எக்காலத்திலும் துன்பம் என்னும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். தன் செயல்களின் மூலமே தன் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன் அவன்.

1 comment:

ராமலக்ஷ்மி said...

நல்ல விளக்கங்கள். தொடருங்கள் மலர்.