Monday, May 14, 2012

நான் அறிந்த சிலம்பு – 19

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 114 - 120

சிலம்பின் வரிகள் இங்கே: 121 - 128

தலைக்கோல் அமைதி

பெரும்புகழ் வாய்ந்த மன்னரவர்
போரிட்டுப் பகைவர் வென்று,
அப்பகையரசர் புறமுதுகிட்டுத் தோற்றோட,
அவர்தம் வெண்கொற்றக் குடைக்காம்பதனை
எடுத்தாங்கு வருவர்.

அக்காம்பின் கணுக்கள் முழுதும்
நவமணிகள் இழைத்தே அலங்கரிப்பர்.
கணுக்களின் இடைப்பட்ட பகுதிகளில்
‘சாம்பூநதம்’ எனும் உயர்வகைத் தங்கத் தகட்டை
வலம்புரியாகவும் இடம்புரியாகவும்
வளைத்துக் கட்டி ஒரு கோல் என்றாக்குவர்.

உலகையே தன்
வெண்கொற்றக் குடையின் கீழ்
புரந்திருக்கும்
மன்னவன் அரண்மனையதனில்
அக்கோலினை வைத்து
இந்திரன் புதல்வன் சயந்தன் என
அக்கோலினை வரித்திட்டு
மந்திரங்கள் ஓதி
வந்தனைகள் செய்து
பூசித்தே வழிபடுவர்.
இதுவே தானது
‘தலைக்கோல்’ என்பது.

புண்ணிய நதிகளில்
பொற்குடங்களில் முகர்ந்து வந்த
நன்னீர் கொண்டே தலைக்கோலதனை
நீராட்டிய பின்பு
மாலைகளும் அணிவிப்பர்
முற்கூறிய ஆடலாசிரியன் முதலானோர்.

பொருந்தியதொரு நன்னாளில்
பொன்னால் செய்த ‘பூண்’ மற்றும்
‘முகபடாம்’ எனும் பட்டம்
இவ்விரண்டும் கொண்டிருக்கும்
பட்டத்து யானையின் பெரிய கையதனில்தான்
தலைக்கோலினை வாழ்த்தியே வழங்கிடுவர்.

மும்முரசுகளும் ஆர்த்து ஒலிக்க
அவற்றுடன் சேர்ந்து
இன்னும் பல வாத்தியங்களும் ஆர்ப்பரிக்க
அரசன் அவனும்
தம் ஐம்பெருங்குழுவினர் சூழ வரப்
பட்டத்து யானையது
வீதியில் நின்ற தேரினை வலம்வந்து
தலைக்கோல் அதனைக்
கவிஞனிடம் அளித்துவிடும்.

( ஐம்பெருங்குழுவினர் – அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் )

அனைவரும் ஒருமித்தே ஊர்வலம் வந்தபின்
தலைக்கோலதனை எதிர்முகமாக வைத்திடுவான்
கவிஞனவன் ஆடல் அரங்கதனில்.

மாதவியின் நாட்டியம்
அரங்கேறவிருந்த அரங்கினிலும்
செப்பிய முறைப்படி
தலைக்கோல் வைக்கப்பட்டது.

வல்லமை 07.05.12 இதழில் வெளிவந்தது.

3 comments:

ராமலக்ஷ்மி said...

தலைக்கோல் பற்றி அறியத் தந்தன வரிகள்.

ஜீவி said...

//மாதவியின் நாட்டியம்
அரங்கேறவிருந்த அரங்கினிலும்
செப்பிய முறைப்படி
தலைக்கோல் வைக்கப்பட்டது.//

தலைக்கோல் பற்றிச் சொல்லி இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதும் அழகாகத் தான் இருக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி....

நன்றி ஜிவி..அந்தக் கடைசி வரிகள் நானாகச் சேர்த்தவை..விளக்கம் முழுமையாக..