Monday, December 27, 2010

குறளின் குரல் - 17

பால்: பொருட்பால் இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 628

இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்.


இன்பம் விழையான்; 'இடும்பை இயல்பு' என்பான்
துன்பம் உறுதல் இலன்.

விளக்கம்:

இன்பத்தை விரும்பமாட்டான். வாழ்க்கையில் துன்பம் வருவது இயல்பு எனப் புரிந்து கொள்வான். இத்தகையவனைத் துன்பங்கள் ஒருபோதும்
துன்பப்படுத்துவது இல்லை.

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 29. கள்ளாமை
குறள் எண்: 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.


அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர், களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்.

விளக்கம்:

களவாடுவதைத் தவிரப் பிற நல்ல வழிகளைத் தெரிந்து கொள்ளாதவர், அளவில்லாத தீய செயல்களை, வரம்பு மீறிய செயல்களைச் செய்து
கெட்டழிவர்.

-------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம்.


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்-தேரின்,
அருளாதான் செய்யும் அறம்.

விளக்கம்:

அருள் இல்லாதவன் அறச்செயலைச் செய்தல் கூடும். ஆனால் அச்செயலை ஆராய்ந்து பார்த்தால், அது தெளிந்த ஞானமில்லாதவன் உண்மைப் பொருளைக் கண்டறிந்ததற்கு ஒப்பாகும்.

-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 581

ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.


ஒற்றும் உரை சான்ற நூலும், இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

விளக்கம்:

ஒற்று, புகழமைந்த அறநூல் - இவ்விரண்டையும் அரசன் தன் இரு கண்களெனக் கொள்ள வேண்டும். (புறக்கண்களால் காண முடியாதவற்றை
இவையிரண்டும் புலப்படுத்தும் என்பதால் இவற்றைக் கண் எனக் கொள்ள வேண்டும்.)

----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 432

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.


இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

விளக்கம்:

செலவு செய்ய வேண்டிய இடத்திலும் செலவு செய்யாத கருமித்தனம், பெருமைதராத மான உணர்வு, தகுதியற்ற மகிழ்ச்சி - இவை எந்தவொரு
தலைவனுக்கும் கேடு தரும் குற்றங்களாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 30. வாய்மை
குறள் எண்: 295

மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

விளக்கம்:

ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்துமாறு வாய்மையுள்ள சொற்களையே பேசுவானேயானால், அவன் தவமும் தானமும் செய்பவர்களை விட மேலான சிறப்புடையவனாவான்.

1 comment:

ஜீவி said...

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி
-- கவியரசர்

இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!