Monday, May 3, 2010

குறளின் குரல் - 6

அதிகாரம் - 21. தீவினையச்சம் குறள் எண் - 206

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல் வேண்டா தான்.

தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்!

விளக்கம்:

எறிந்த பந்து போலத் தீமை மீண்டும் செய்தவனையே வந்து சேரும்.
துன்பம் / தீவினை தனக்கு வரக்கூடாது, தன்னை வருத்தக்கூடாது என்று விரும்புபவன் அத்தீவினைகளைப் பிறரிடமும் செய்யாதிருக்க வேண்டும்.
---------

அதிகாரம் - 19. புறங்கூறாமை
குறள் எண் - 181

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

விளக்கம்:

ஒருவன் எந்தவொரு அறமும் செய்யாமல் இருந்தாலும், அவன் பிறரைப் பற்றிப் புறம் கூறாதவனாக இருக்கிறான் என்பது இனியதாகும்.

(புறங்கூறாமை மற்ற அறங்களைத் தானாகவே வரவழைக்கும்.)
-------------

அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை

குறள் எண்: 570

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

கல்லார்ப் பிணிக்கும், கடுங்கோல்; அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
விளக்கம்:

கற்கவேண்டியவற்றைக் கற்காது, எப்போதும் தனக்குத் துணையாக மூடர்களையே சேர்த்துக் கொள்வது கொடுங்கோல் ஆட்சியது;
இந்த ஆட்சி அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு எதுவும் இல்லை.
-------------------

அதிகாரம்: 51. தெரிந்து தெளிதல்
குறள் எண்: 501

அறம்பொரு ளின்ப முயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.


அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்.

விளக்கம்:

ஒருவன் மீது நம்பிக்கை வைக்கும்போது நான்கு இயல்புகளின் அடிப்படையில் ஆராய வேண்டும்.

அறம் தவறாமல் நடப்பவனா, பொருள் மீது பற்றுள்ளவனா, இன்பத்தில் ஆசைமிக்கவனா, உயிருக்கு அஞ்சுபவனா என ஆராய்தல் வேண்டும்.

இவற்றால் மனம் பிறழாமல் இருப்பவனே நம்பத்தகுந்தவன்.
------------------

அதிகாரம்:11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 105

உதவி வரைத்தன் றுதவி யுதவி
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி வரைத்து அன்று, உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்:

ஓர் உதவியின் மேன்மை அந்த உதவியின் அளவைப் பொறுத்தது அன்று.

அது உதவி செய்யப்பட்டவரின் தன்மையை, சிறப்பைப் (சால்பைப்) பொறுத்ததாகும்.

(உதவியைப் பெற்றுக்கொண்டவரின் சிறப்பால் உதவியே பெருமைப்படும்.)
-------------

2 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

எப்போதும் போலவே தங்கள் குரள் பதிவுகள் பிரமிப்பைத்தருகிறது மலர். வாழ்த்துக்கள் தொடர்ந்து செய்யுங்கள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கிருத்திகா