Wednesday, April 21, 2010

பாவேந்தருக்கு நினைவாஞ்சலி!








தமிழே!
தமிழால் வணங்குகின்றேன்!

பள்ளிப் பருவத்தில்
செய்யுள் பயிலுகையில்
இலக்கியத்தேனூட்டி
வளர்த்த ஆசிரியையைதான்
அத்தனை பாடல்களையும்
இயற்றியவர் என்றெண்ணி
வாய்பிளந்து பார்த்திருந்த பருவமது;

நின் தலைவனாம்
மீசைக்காரனின் முழக்கத்தினுக்கும்
அவன் அடியொற்றிய தாசனாம்
உன் வார்த்தைகட்கும்
அர்த்தங்கள் அறிய ஆரம்பிக்க....

எத்துணை துயரங்கள்
கடந்து வந்திருக்கிறோம்
என்றுணர்த்தித்
தமிழ்ச் சாட்டை சொடுக்கிச்
சரித்திரம் போதித்தவர்கள் நீங்கள்!

புரட்சி
வீரம்
விவேகம்
விடுதலை
தத்துவம்
குடும்பம்
பெண்..............

சமூகத்தின் பன்முகங்களில்
எதைத்தான் விட்டுவைத்தாய் நீ!

தமிழ்பால் தணியாத தாகம்
என்னுள்ளே தான் வளர்த்து
எளிய வார்த்தைகளில்
தெள்ளுதமிழ் அள்ளித்தந்து
தாலாட்டியவன் நீ!

இன்று யாம்
இன்னமும்
தமிழ்பேசி,
தமிழ்படித்துத்
தரணியில் உலவுகிறோம்..........

இதற்கெல்லாம்
இன்றியமையாக் காரணமாய்
இலங்குகின்ற
இலக்கியச் சோலையில்
அழியாத மரமாய்
வேரூன்றி நீ!

தமிழே!
நின் தமிழுக்குத்
தலைவணங்குகின்றேன்!
நின் தமிழால் வணங்குகின்றேன்!

தமிழே!
நானறிந்த தமிழ்கொண்டு
எண்ணமலர்கள் தூவி
நான் செய்கின்ற
அஞ்சலி ஏற்றிடு!
எம் தமிழ்
என்றென்றும் காத்திடு!

2 comments:

ராமலக்ஷ்மி said...

பாவேந்தருக்கு அருமையாக அஞ்சலி செய்து எங்களையும் இன்று நினைவு கூர்ந்திட வைத்திட்ட உங்களுக்கு நன்றிகள் பாசமலர்.

//இலக்கியத்தேனூட்டி
வளர்த்த ஆசிரியையைதான்
அத்தனை பாடல்களையும்
இயற்றியவர் என்றெண்ணி//

ரசித்தேன்:))!

கோபிநாத் said...

\\ ராமலக்ஷ்மி said...
பாவேந்தருக்கு அருமையாக அஞ்சலி செய்து எங்களையும் இன்று நினைவு கூர்ந்திட வைத்திட்ட உங்களுக்கு நன்றிகள் பாசமலர்.
\\

வழிமொழிக்கிறேன்.