Saturday, March 27, 2010

குறளின் குரல் - 2

அதிகாரம்: 55. செங்கோன்மை

குறள் எண்: 545

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.


இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

விளக்கம்:

ஆடம்பரம் ஏதுமில்லை.
நடுவுநிலைமை தவறுவதில்லை.
செங்கோல் நெறியில் வழுவில்லை.
இங்ஙனம் இயல்பாய்
ஆட்சி செய்யும்
மன்னன் மட்டும் இருந்துவிட்டால்
பருவமழை பொய்க்காது;
விளைபொருட்கள் குன்றாது.

அதிகாரம்: 59. ஒற்றாடல்

குறள் எண்: 585

கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.


கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

விளக்கம்:

அடுத்தவர் ஐயுறாத
மாற்றுரு தரித்தவன்;
எவரேனும் அடையாளம்
அறிந்து கொண்டாலும்
அவர்முன் அஞ்சாநெஞ்சன்;
அகப்பட்டாலும்
துன்புறுத்தப்பட்டாலும்
அரசன் தவிர
வேறெவர்க்கும்
தம் ஒற்றுச் செய்தி
சொல்லாத வல்லவன் -
இவனே ஒற்றன்.

அதிகாரம்: 53. சுற்றந் தழால்

குறள் எண்: 523

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று.

விளக்கம்:

குளத்திற்குக் கரை போல்வர்
நம் வாழ்க்கைக்குச் சுற்றத்தார்.
அவரோடு மனங்கலந்து
வாழ்தல் வேண்டும்.
சுற்றம் இல்லா வாழ்வு
கரையில்லாத குளப்பரப்பில்
நிறைந்திருக்கும் நீர் போலப்
பயனற்றதொன்றாகும்.

அதிகாரம்: 71. குறிப்பறிதல்

குறள் எண்: 702

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.


ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.

விளக்கம்:

ஒருவர் உள்ளத்து
நினைப்பதைச் சற்றும்
ஐயுறாத வகையில்
உணர்ந்து கொள்பவன்
தெய்வத்துக்குச் சமமாவான்;
சரிவரக் குறிப்பறியும்
இவ்வாற்றல்
தெய்வீக ஆற்றலாகும்.

அதிகாரம்: 87. பகைமாட்சி

குறள் எண்: 864

நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.


நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

விளக்கம்:

நீங்காத சினத்தைக்
உடையவன்;
பிறரிடத்து
மறைக்க வேண்டிய
செய்திகளை
மறைக்கும்
மனவலிமை இல்லாதவன் -
இவ்விருவரின்
பகை வெல்வது
யார்க்கும் எளிது.

5 comments:

ராமலக்ஷ்மி said...

விளக்கங்கள் கவிதைகளாய்.. அருமை பாசமலர் அத்தனையும். தொடருங்கள்.

கோபிநாத் said...

கவிதை முயற்சியில் விளக்கம் அருமை...;)

குறளை எப்படி படிப்பது என்று தெரியமால் இருக்க நீங்க திரும்ப எளிதாக சொல்லியிருப்பதும் நன்று ;)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா திரும்ப எழுத ஆரம்பிச்சிட்டீன்ஹ்களா ரொம்ப சந்தோஷம், இப்பதான் வலைப்பக்கம் வாசிக்க வரமுடிந்தது. பின்னாடி இருந்து முன்னாடி போறேன்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ராமலக்ஷ்மி, கோபி, கிருத்திகா...நன்றி.

தமிழ் said...

கவிதை வடிவில் தந்து இருப்பது அருமை

வாழ்த்துகள்