Sunday, November 16, 2008

என்று புலரும் பொழுது?

பூக்களின் மடியில்
புலர்ந்த பொழுதுகள்
புலம்பெயர்ந்து போனதெங்கே?

புல்வெளித் தரையில்
பகிர்ந்த பொழுதுகள்
புதைந்துதான் போனதெங்கே?

கள்ளத் தோணியில்
கடல் தாண்டிப் போன
மாமன் தருவான்
நல்லதொரு செய்தி..

குண்டெய்தி அவன்
மாண்ட செய்தி
அறிந்திடாத மடமகள் மனதில்
மலையளவுக் கேள்விகள்
வந்து போயின சடுதி..

தலைவாரிப் பூச்சூட்டித்
தாயவள் அனுப்பிய செல்வமகள்
மணியோசை கேட்டு
வகுப்பில் நுழைவாளோ..
வெடியோசை கேட்டுக்
குழியில் பதுங்குவாளோ..

பயத்தின் சுவடுகள்
பாரமாய் அழுத்த
நினைவலைகள் ஓயுமுன்னே
பறந்துவந்து குடிசையில்
பாய்ந்த குண்டு
நெருப்பலைகள் வாரியிறைக்கக்
கருகி மடிந்தது தாயவள் தேகம்.

உருவாகும் முன்னே
உடைந்து சிதறியது
கனவுகளின் கோலம்.

மெல்ல அழிந்து வரும்
எம் இனமே!
திருத்தியெழுதிய தீர்வு கண்டு
உமை மீட்டிட இங்கு யாருண்டு?

6 comments:

ராமலக்ஷ்மி said...

//உருவாகும் முன்னே
உடைந்து சிதறியது
கனவுகளின் கோலம்.//

அதைக் கண் முன்னே காட்சியாகக் கொண்டு வந்து விட்டன தங்கள் வரிகள். "என்று புலரும் பொழுது?" என்றே எல்லோரும் விடியலை எதிர்பார்த்து...

நாகை சிவா said...

:((

சீக்கிரமே பொழுது விடியட்டும்.

வேண்டுவோமாக

கோபிநாத் said...

:-((

தமிழ் said...

/உருவாகும் முன்னே
உடைந்து சிதறியது
கனவுகளின் கோலம்.

மெல்ல அழிந்து வரும்
எம் இனமே!
திருத்தியெழுதிய தீர்வு கண்டு
உமை மீட்டிட இங்கு யாருண்டு? /

ஈரம் கொஞ்சம்
இதயங்களில் வாடியட்டும்
ஈழ மக்களின்
இன்னல்களும் மறையட்டும்

கிருத்திகா ஸ்ரீதர் said...

"மெல்ல அழிந்து வரும்
எம் இனமே!
திருத்தியெழுதிய தீர்வு கண்டு
உமை மீட்டிட இங்கு யாருண்டு? "

ம்ம்ம் நல்ல கேள்வி.. கிட்டத்தட்ட இதுபோன்றுதான் நாங்கள் சிறிது நேரம் முன்பு பேசிக்கொண்டிருந்தோம்...

பாச மலர் / Paasa Malar said...

ராமலக்ஷ்மி, சிவா, கோபி, திகழ்மிளிர், கிருத்திகா,,

நல்லதே நடக்கட்டும் சீக்கிரம் என்று நம்புவோமாக..