Friday, April 18, 2008

உலகப் பொறி

விடம் பூசிய அமுதம்
விரலசைத்து அழைக்கப்
பொறியின் இரை தேடி
இரையாகிற எலி.
மரண பயமற்றுச்
சிறை பயமுற்று
விடமுண்டு மரிக்கும்.
பொறியில் சிக்கியே
சடுதியில் மரணிக்கும்.

முலாம் பூசிய
முகவரி தேடி
முகவரி தொலைத்து
வழி தவறி
வலி பெருக்கிச்
சுயநலத் தேடலில்
சுயம் தொலைத்து
பெற்றது இழந்து
இழந்தது பெற்று..




கண்டு கேட்டு
உண்டு ரசித்து
மயங்கி மயக்கி
உருகி உருக்கி
உய்யும் பொருட்டு
உழன்று சுழன்று

உலகப் பொறியில்
உருளும் மனித மனம்
இரை தேடி இரையாகி
மரண பயமுற்றுச்
சிறை பயமற்று
விடமுண்டும் வாழும்.
பொறியில் சிக்கியே
அனுதினம் மனரணம்
மரணிக்கும் வரை
அகமகிழ்ந்து ஏற்கும்.

13 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

//உலகப் பொறியில்
உருளும் மனித மனம்
இரை தேடி இரையாகி//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்க மலர், ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை...
+++++
இரையாகும் வரை
இறைதேடலிருந்தால்
பொறியிதென்று
மனதறியுமோ
+++++++ வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

இறை தேடலும் ஒரு பொறிதானே கிருத்திகா..

மங்கை said...

//முலாம் பூசிய
முகவரி தேடி
முகவரி தொலைத்து
வழி தவறி
வலி பெருக்கிச்
சுயநலத் தேடலில்
சுயம் தொலைத்து///

ஹ்ம்ம்..சுயத்தை இழப்பவர்களில் தான் எத்தனை விதம் மலர்..காரணங்கள் தான் எத்தனை..ஹூம்ம்ம்


சுயத்தை இழந்ததனால் காலாவதியான விஷயங்கள் ஏராளம் இல்லையா...


இதையெல்லாம் சொன்னால்..ம்ம்ம் வேண்டாம்...

நல்லாருக்குப்பா..

கோபிநாத் said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு அக்கா ;))

வார்த்தை நடையில் கலக்கியிருக்கிங்க...வாழ்த்துக்கள் ;)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//முலாம் பூசிய
முகவரி தேடி
முகவரி தொலைத்து//


இந்த வரிகள் நன்று!

தாங்கள் சொல்லவந்த விடயமும் நன்று!!

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

புகழன் said...

கரடு முரடான சொற்களுக்கிடையிலும் கருத்தை நிறுத்தும் வரிகளாய் “உலகப் பொறி”

வாழ்த்துக்கள் பாசமலர்
இப்படிக்கு புகழன்

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் மங்கை..சுயத்தின் இழப்பு எவ்வளவு பெரியது/வலியது

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி, ஜோதிபாரதி

பாச மலர் / Paasa Malar said...

கரடு முரடான வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது இதில்..

நன்றி புகழன்.

இரண்டாம் சொக்கன்...! said...

//சுயநலத் தேடலில்
சுயம் தொலைத்து
பெற்றது இழந்து
இழந்தது பெற்று..//


வ்வ்வாவ்...தத்துவம் தத்துவம்...

இப்பல்லாம் நறுக்குதெறிச்ச மாதிரி எழுதறீங்க...உயரங்கள் காத்திருக்கின்றன...

வாழ்த்துகள்....

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சொக்கரே..அனுபவங்கள் சில நேரம் தத்துவங்கள் பகர்கின்றன..

ஜீவி said...

பெற்றது இழந்து
பிரிதொன்று பெற்று
வேறொன்றிற்காக
அதனையும் இழந்து...
--இப்படியே போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை ஓட்டத்தில் வலிகளே வாழ்க்கையாகிப் போனபின் புதுப்புது
வலிகளுக்கு எப்போதும் குறைச்சலில்லை தான்.
சிறுசிறு வார்த்தைகளில் நிறைய பொருளைப் பொதித்து வைத்துள்ளீர்கள்.
நிறைய எழுத வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி.