Friday, July 12, 2013

வார்த்தைகள்

 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
என்னைச் சுற்றிலும் வார்த்தைகள்.
 
 
என்னில் அவை வளர்கின்றன
இலைகளைப் போலவே.
 
 
உள்ளிருந்து
மெல்ல மெல்ல வளரும்
அந்த வார்த்தைகள்
வளர்வது நிறுத்தும்
என்று
எனக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால்,
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்.
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
அவற்றிடம் சற்றுக்
கவனத்துடனும்
எச்சரிக்கையுடனும்
இருந்தாக வேண்டும்.
 
 
அவை...
 
 
பலதரப்பட்ட
விஷயங்களாக
இருக்கக்கூடும்.
 

ஓடுகின்ற கால்கள்
சற்றே இளைப்பாறும்
அகன்ற வெளிகளாய்
இருக்கக்கூடும்.
 
 
உறைந்து நிற்கும்
கடல் அலைகளாய்க்
காட்சி தரக்கூடும்.

 
எரிசூட்டுக் காற்றின்
மிகப்பெரிய வீச்சாய்
வெடிக்கக்கூடும்.
 
 
உன்னுடைய
உயிர்த்தோழமையின் கழுத்தை
மனமுவந்து அறுக்கும்
கத்தியாய் இருக்கக்கூடும்.
 
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
ஆனாலும் அவை
மரத்தில் வளர்கின்ற
இலைகள் போல
என்மீது வளர்கின்றன.
 
 
மௌனத்திலிருந்தும்
உள்ளே எங்கேயோ
இனம்புரியாத ஆழத்திலிருந்தும்
முளைத்துக் கிளைத்து வளர்வதை
அவை
நிறுத்துவதாகத் தோன்றவில்லை.
 
 
ஆங்கில மூலம்: Words, Kamala Das
 
அதீதம் இதழில் வெளிவந்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்...

அதீதம் இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)