Monday, May 14, 2012

நான் அறிந்த சிலம்பு – 19

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 114 - 120

சிலம்பின் வரிகள் இங்கே: 121 - 128

தலைக்கோல் அமைதி

பெரும்புகழ் வாய்ந்த மன்னரவர்
போரிட்டுப் பகைவர் வென்று,
அப்பகையரசர் புறமுதுகிட்டுத் தோற்றோட,
அவர்தம் வெண்கொற்றக் குடைக்காம்பதனை
எடுத்தாங்கு வருவர்.

அக்காம்பின் கணுக்கள் முழுதும்
நவமணிகள் இழைத்தே அலங்கரிப்பர்.
கணுக்களின் இடைப்பட்ட பகுதிகளில்
‘சாம்பூநதம்’ எனும் உயர்வகைத் தங்கத் தகட்டை
வலம்புரியாகவும் இடம்புரியாகவும்
வளைத்துக் கட்டி ஒரு கோல் என்றாக்குவர்.

உலகையே தன்
வெண்கொற்றக் குடையின் கீழ்
புரந்திருக்கும்
மன்னவன் அரண்மனையதனில்
அக்கோலினை வைத்து
இந்திரன் புதல்வன் சயந்தன் என
அக்கோலினை வரித்திட்டு
மந்திரங்கள் ஓதி
வந்தனைகள் செய்து
பூசித்தே வழிபடுவர்.
இதுவே தானது
‘தலைக்கோல்’ என்பது.

புண்ணிய நதிகளில்
பொற்குடங்களில் முகர்ந்து வந்த
நன்னீர் கொண்டே தலைக்கோலதனை
நீராட்டிய பின்பு
மாலைகளும் அணிவிப்பர்
முற்கூறிய ஆடலாசிரியன் முதலானோர்.

பொருந்தியதொரு நன்னாளில்
பொன்னால் செய்த ‘பூண்’ மற்றும்
‘முகபடாம்’ எனும் பட்டம்
இவ்விரண்டும் கொண்டிருக்கும்
பட்டத்து யானையின் பெரிய கையதனில்தான்
தலைக்கோலினை வாழ்த்தியே வழங்கிடுவர்.

மும்முரசுகளும் ஆர்த்து ஒலிக்க
அவற்றுடன் சேர்ந்து
இன்னும் பல வாத்தியங்களும் ஆர்ப்பரிக்க
அரசன் அவனும்
தம் ஐம்பெருங்குழுவினர் சூழ வரப்
பட்டத்து யானையது
வீதியில் நின்ற தேரினை வலம்வந்து
தலைக்கோல் அதனைக்
கவிஞனிடம் அளித்துவிடும்.

( ஐம்பெருங்குழுவினர் – அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் )

அனைவரும் ஒருமித்தே ஊர்வலம் வந்தபின்
தலைக்கோலதனை எதிர்முகமாக வைத்திடுவான்
கவிஞனவன் ஆடல் அரங்கதனில்.

மாதவியின் நாட்டியம்
அரங்கேறவிருந்த அரங்கினிலும்
செப்பிய முறைப்படி
தலைக்கோல் வைக்கப்பட்டது.

வல்லமை 07.05.12 இதழில் வெளிவந்தது.

Monday, May 7, 2012

நான் அறிந்த சிலம்பு - 18‏


புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

 நாட்டிய அரங்கின் அமைப்பு

சிலம்பின் வரிகள் இங்கே: 95 - 113

 நாடக நூலார் சொல்லிவைத்த
இயல்புகளினின்று மாறிடாது
நல்லதொரு நிலத்தைத்
தேர்ந்தே எடுத்தனர்
 நாட்டிய அரங்கத்துக்கென்றே.


புனிதம் வாய்ந்த பெருமலையாம்
பொதிகை மலைப்பக்கங்களில்
நீண்டு வளர்ந்திடும் மூங்கிலதனில்
ஒரு கணுவுக்கும் அடுத்க கணுவுக்கும்
இடைப்பட்டிருந்த ஒரு சாண்
 கொண்டேதான் வந்தனர்
அரங்கது அமைத்திட.


அரங்கமைப்பவன் உத்தமன்
தன் கைப்பெருவிரலில்
இருபத்து நான்கு வரும்படி அளந்து
அம்மூங்கில் வெட்டியே செய்தனன்
அரங்கமைக்கும் கோலினை.


(குறிப்பு: அளவை முறை:


அணு எட்டு = தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டு = இம்மி; இம்மி எட்டு = எள்ளு;
எள்ளு எட்டு = நெல்லு: நெல்லு எட்டு = ஒரு பெருவிரல்


உத்தமன் -  அதிகம் உயரம் இல்லாத, குறைவான உயரம் இல்லாத நடுத்தர உயரமான உத்தமனிடம் பெருவிரல் அளவு எடுக்கப்படும்.


பெருவிரல் இருபத்து நான்கு = ஒரு கோல்)
 

மூங்கிலின்
ஏழுகோல் அகலமும்
எட்டுக்கோல் நீளமும்
 ஒருகோல் உயரமுமாய்
அமைத்திட்டனர் அரங்கதனை.


உத்தரமாய் மேல்நிற்கும் பலகைக்கும்
தளமாய்க் கீழ்நிற்கும் பலகைக்கும்
இடையே இருந்த இடைவெளி
நான்கு கோல்.


அரங்கின்
உள் புக வெளிவரத்
தோதாய் இருந்தன
வாயில்கள் இரண்டு.


இங்ஙனம்
அழகுற அமைந்த அரங்கதன்
மேல்நிலை மாடத்தில்
வருணபூதங்கள் நால்வகை
சித்தரித்து வைத்தனர்
யாவரும் புகழும்படி.


(நால்வகை பூதங்கள்
வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன்)


ஆங்கிருந்த தூண்களின் நிழல்
அரங்கதன் கண்ணும்
அவையதன் கண்ணும்
வீழ்ந்திடா வண்ண்ம்
மாண்புறு நிலை விளக்குகளை
ஆங்காங்கே வைத்தனர்.


இழுத்திடும் போதினில்
ஒரு பக்கம் செல்லும்
ஒருமுக எழினியையும் (எழினி - திரை )
அரங்கின் பல பக்கங்களிலிருந்து
மேடைக்கு நடுவில்
பொருந்தும் வண்ணமாய்ப்
பொருமுக எழினியையும்
அவிழ்த்துத் தளர்த்துகையில்
மேலிருந்து கீழிறங்கி வரும்
கரந்துவரல் எழினியையும்
பாங்குறவே அமைத்தனர்.


ஓவிய வேலைப்பாடுகளுடன்
மேல் விதானக் கூரைதனை
ஒழுங்குறவே அமைத்தனர்.


புகழ்பெற்ற முத்துமாலை வகைகளாம்
தாமம் வளை மாலைகள்
அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.


புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன்
பொலிந்தே சிறந்தது நாட்டிய அரங்கது.

வல்லமை 30.04.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, May 1, 2012

நான் அறிந்த சிலம்பு - 17

புகார்க்காண்டம் – 03.அரங்கேற்று காதை

யாழ்ப் புலவன் – சென்ற பகுதியின் தொடர்ச்சி

சிலம்பின் வரிகள் இங்கே 82 – 94:

உச்சத்தில் நிற்கும் தாரம்;
அதன் தாக்கத்தால்
இறுதியில் நின்ற கைக்கிளை முதலாய்
அனைத்து இசைகளும்
நூல் முறைக்கேற்பத் தத்தமக்குப்
பொருந்திய முறையான
திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.

(உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
வலமுறை: கைக்கிளை, துத்தம், குரல்
இடமுறை: தாரம், விளரி, இளி)

வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
கைக்கிளை படுமலைப் பாலையாய்
துத்தம் செவ்வழிப் பாலையாய்
குரல் அரும் பாலையாய்த் திரிந்தன.

இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
தாரம் கோடிப் பாலையாய்
விளரி விளரிப் பாலையாய்
இளி மேற்செம் பாலையாய்த் திரிந்தன.

இங்ஙனம்
படுமலைப் பாலை தொடங்கி
மேற்செம் பாலை இறுதியாகத் தொடர்கையில்
நீண்டு கிடக்கும் சுரங்களின் வரிசையுடைத்து
யாழதன் இசை.

ஆதியும் அந்தமுமாய்
நின்றிருக்கும் நரம்புகளைப்
பொருத்தமுறக் கொண்டிருப்பது
யாழதன் இசை.

அரும்பாலை முதலான
இடமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
யாழ் தன்னில்.

கோடிப்பாலை முதலான
வலமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
குழல் தன்னில்.

வலிவு மெலிவு சமம்
இம்மூவகை ஓசைகளின்
நரம்படைவு கெடாத
பண்ணீர்மை குன்றாத
முறையான இயக்கம்
எழுத்து எழுத்தாய்
இசையச் செய்திடவல்ல
யாழ் ஆசிரியன் தானும்…

(வலிவு – மேல் / உச்சம்; தாரம்
மெலிவு – கீழ் /மந்தம்
சமம் – சமன் / மத்திமம்)

ஆடல் ஆசான் தன்னொடு
இசையோன் தன்னொடு
முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு
குழலோன் தன்னொடு
யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்
நாட்டிய அரங்கதனில்.

வல்லமை 23.04.12 இதழில் வெளிவந்தது.