Monday, May 7, 2012

நான் அறிந்த சிலம்பு - 18‏


புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

 நாட்டிய அரங்கின் அமைப்பு

சிலம்பின் வரிகள் இங்கே: 95 - 113

 நாடக நூலார் சொல்லிவைத்த
இயல்புகளினின்று மாறிடாது
நல்லதொரு நிலத்தைத்
தேர்ந்தே எடுத்தனர்
 நாட்டிய அரங்கத்துக்கென்றே.


புனிதம் வாய்ந்த பெருமலையாம்
பொதிகை மலைப்பக்கங்களில்
நீண்டு வளர்ந்திடும் மூங்கிலதனில்
ஒரு கணுவுக்கும் அடுத்க கணுவுக்கும்
இடைப்பட்டிருந்த ஒரு சாண்
 கொண்டேதான் வந்தனர்
அரங்கது அமைத்திட.


அரங்கமைப்பவன் உத்தமன்
தன் கைப்பெருவிரலில்
இருபத்து நான்கு வரும்படி அளந்து
அம்மூங்கில் வெட்டியே செய்தனன்
அரங்கமைக்கும் கோலினை.


(குறிப்பு: அளவை முறை:


அணு எட்டு = தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டு = இம்மி; இம்மி எட்டு = எள்ளு;
எள்ளு எட்டு = நெல்லு: நெல்லு எட்டு = ஒரு பெருவிரல்


உத்தமன் -  அதிகம் உயரம் இல்லாத, குறைவான உயரம் இல்லாத நடுத்தர உயரமான உத்தமனிடம் பெருவிரல் அளவு எடுக்கப்படும்.


பெருவிரல் இருபத்து நான்கு = ஒரு கோல்)
 

மூங்கிலின்
ஏழுகோல் அகலமும்
எட்டுக்கோல் நீளமும்
 ஒருகோல் உயரமுமாய்
அமைத்திட்டனர் அரங்கதனை.


உத்தரமாய் மேல்நிற்கும் பலகைக்கும்
தளமாய்க் கீழ்நிற்கும் பலகைக்கும்
இடையே இருந்த இடைவெளி
நான்கு கோல்.


அரங்கின்
உள் புக வெளிவரத்
தோதாய் இருந்தன
வாயில்கள் இரண்டு.


இங்ஙனம்
அழகுற அமைந்த அரங்கதன்
மேல்நிலை மாடத்தில்
வருணபூதங்கள் நால்வகை
சித்தரித்து வைத்தனர்
யாவரும் புகழும்படி.


(நால்வகை பூதங்கள்
வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன்)


ஆங்கிருந்த தூண்களின் நிழல்
அரங்கதன் கண்ணும்
அவையதன் கண்ணும்
வீழ்ந்திடா வண்ண்ம்
மாண்புறு நிலை விளக்குகளை
ஆங்காங்கே வைத்தனர்.


இழுத்திடும் போதினில்
ஒரு பக்கம் செல்லும்
ஒருமுக எழினியையும் (எழினி - திரை )
அரங்கின் பல பக்கங்களிலிருந்து
மேடைக்கு நடுவில்
பொருந்தும் வண்ணமாய்ப்
பொருமுக எழினியையும்
அவிழ்த்துத் தளர்த்துகையில்
மேலிருந்து கீழிறங்கி வரும்
கரந்துவரல் எழினியையும்
பாங்குறவே அமைத்தனர்.


ஓவிய வேலைப்பாடுகளுடன்
மேல் விதானக் கூரைதனை
ஒழுங்குறவே அமைத்தனர்.


புகழ்பெற்ற முத்துமாலை வகைகளாம்
தாமம் வளை மாலைகள்
அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.


புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன்
பொலிந்தே சிறந்தது நாட்டிய அரங்கது.

வல்லமை 30.04.12 இதழில் வெளிவந்தது.

4 comments:

ராமலக்ஷ்மி said...

நாட்டிய அரங்கினைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். அருமை மலர். தொடருங்கள்.

கோபிநாத் said...

அருமை அக்கா...அரங்கத்தின் அமைக்கும் அளவு சொல்லும் விதமே...அடடா போட வைக்கிறது ;-)

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி, கோபி, வலைஞன்

ஜீவி said...

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முறைமை இருந்தது வியக்க வைக்கிறது. எண் அளவைகள் இன்னொரு ஆச்சரியம். பண்டைய இலக்கியச் செல்வங்களின் தொடர்ச்சி எங்கேயோ அறுந்து போனது போலவான உணர்வு. அதையும் எடுத்துச் சொல்வாரில்லாத ஏக்கம்.

எந்தக் குறையும் இருந்திடக் கூடாதென்று ஒவ்வொரு செய்தியையும் தெளிந்து அறிந்து எங்களுக்குத் தெரியப்படுத்தும் உங்கள் ஈடுபாட்டிற்கு மிக்க நன்றி, பாசமலர்!