Tuesday, January 31, 2012

குறளின் குரல் - 41


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 64. அமைச்சு
குறள் எண்: 632

வன்கண் குடிகாத்தல் கற்றறி யாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

விளக்கம்:

அஞ்சாமல் துணிவுடன் செயல்படுதல், குடிமக்களைப் பேணிக்காத்தல், பலவகை அறநூல்களையும் கற்று அறிந்த அறிவு, செய்ய வேண்டிய செயல்கள் எவை என்ற தெளிவு, அச்செயலாற்றத்துக்கான முயற்சி - இவை ஐந்தும் மிகச் சிறப்புடனும் மாட்சிமையுடனும் பெற்று விளங்குவதே அமைச்சு.
 
வன்கண் - வீரத்தன்மை, துணிவு, பகைமை, பொறாமை
---------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 82


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று.


விளக்கம்:


வீட்டுக்கு விருந்தினராக வந்தவர் வெளியே இருக்க, சாவைத் தடுக்கும் மருந்தாகிய அமிழ்தமே என்றாலும், அவ்விருந்தினரை விட்டுவிட்டுத் தாம் மட்டும் தனித்து உண்பது விரும்பத்தக்கது அன்று.
-----------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 40. கல்வி
குறள் எண்: 399



தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்க் தார்.



தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்.



விளக்கம்:


தாம் கற்ற கல்வியால் இன்பம் காணப்பெற்றவர், தம்மைப் போலவே கல்வியால் இவ்வுலகமும் இன்புறுவது கண்டு, மகிழ்வுற்று, ஊக்கமடைந்து, மேலும் மேலும் கல்வி மீது காதல் கொண்டு இன்னும் அதிகமாய்க் கற்றிட விரும்புவார்கள்.

--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17. அழுக்காறாமை
குறள் எண்: 167



அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.



அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.



விளக்கம்:

செல்வத்தைத் திருமகள் இலக்குமி என்றும், வறுமையை அவள் அக்காள் மூதேவி என்றும் அடையாளம் காட்டி வருவது வழக்கமாகும். மனம் அறவழியில் நில்லாது கோணிப் போய்ப் பொறாமைப்படும் குணம் உள்ளவனிடம், தன் தமக்கையான மூதேவியைக் காட்டிவிட்டுத் தான் தங்காமல் திருமகள் இலக்குமி நீங்கி விடுவாள்.


அவ்வியம் - மனக்கோணல், அழுக்காறு, பொறாமை, வஞ்சகம்
தவ்வை - தமக்கை, மூதேவி, தாய்

-----------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 123. பொழுதுகண்டிரங்கல்
குறள் எண்: 1224



காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.



காதலர் இல் வழி மாலை, கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.



விளக்கம்:


காதல் துணைவர் அருகில் இல்லாத போது வருகின்ற இம்மாலைப்பொழுது, கொலைக்களத்தில் உயிர் மாய்க்க வரும் பகைவர் போல எனைக் கொல்ல வருகின்றது.
ஏதிலார் - பகைவர், அயலார், பரத்தையர்



-------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 85. புல்லறிவாண்மை
குறள் எண்: 844



வெண்மை யெனப்படுவ தியாதெனி நொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.



வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் எனும் செருக்கு.



விளக்கம்:


அறிவற்ற தன்மை என்பது எது என்றால், தம்மைத்தாமே சிறந்த அறிவுடையவர் என்று எண்ணி மதித்துக் கொண்டு மனச்செருக்கு அடைவதாகும்.


வெண்மை - அறிவின்மை, ஒளி, வெண்ணிறம், சூதுவாது இல்லாமை, தூய்மை, இளமை
ஒண்மை - நல்லறிவு, ஒழுங்கு, விளக்கம், இயற்கையழகு, நன்மை, மிகுதி




No comments: