Tuesday, January 31, 2012

குறளின் குரல் - 40


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 107

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம் கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

விளக்கம்:

தம் கடுந்துன்பத்தைப் போக்கியவரின் நட்பை, ஏழு பிறப்பிற்கும் மறவாது நல்லோர் நினைத்துக் கொள்வர். துயர் துடைத்தவரின் நட்பினை நன்றியுடன் நினைத்து மகிழ்வதற்குக் கால எல்லையே கிடையாது.

எழுமை -  ஏழு வகைப் பிறப்பு, ஏழு முறை கொள்ளும் பிறப்பு, ஏழ் வகை, உயர்ச்சி
விழுமம் - துன்பம், தூய்மை, சிறப்பு
-- --------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 951



இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு.



இற் பிறந்தார்கண் அல்லது இல்லை-இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.



விளக்கம்:


நற்குடியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே எண்ணம், சொல், செயல் - இவற்றில் நடுநிலைமையும், நாணமும் ஒருங்கே இயல்பாக நிறைந்து விளங்கும். மற்றவர்களிடம் இக்குணநலன்கள் ஒன்றுசேர அமைவதில்லை. 


செப்பம் - நடுநிலை, சீர்திருத்தம், பாதுகாப்பு, செவ்விய வழி, தெரு, நெஞ்சு, மனநிறைவு, ஆயத்தம்
நாணம் - மானம், அறிவு, வெட்கம், கூச்சம்

----------------------------




பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1113



முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


முறி மேனி, முத்தம் முறுவல், வெறி நாற்றம்,
வேல் உண்கண்; வேய்த்தோளவட்கு.
விளக்கம்:

மூங்கில் போன்ற தோள்கள் உடைய என் காதலி, தளிர் மேனி, முத்துச் சிரிப்பு, மயக்கமூட்டும் நறுமணம், மைதீட்டிய வேல் விழிகள்,  - இவை அனைத்தும் அமையப்பெற்றவள்.

முறி - தளிர், பாதி, பத்திரம், துண்டு, துணி, இலை, சேர், அறை, மூலையிடம், சூலைநோய் வகை, வெங்கலம்
முத்தம் - முத்து, உதடு, உதடுகளால் தொடுதல், பிள்ளைத்தமிழ்ப்பருவங்களுள் ஒன்று, மருத நிலம், செடிவகை, முற்றம், கோரைக்கிழங்கு
வெறி - மயக்கம், குடி மயக்கம், மதம், சினம், கலக்கம், வெறியாட்டு, கள், வட்டம், மணம், பேய், மூர்க்கத்தனம், நோய், ஆடு, பேதைமை,     அச்சம், தெய்வம்
உண்கண் - மைதீட்டிய கண்
நாற்றம் - மணம், கள், தோற்றம், தொடர்பு
வேய் - மூங்கில், புனர்பூச நாள், மூடுதல் செயல், ஒற்றன்
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 332



கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.



கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ்செல்வம்;
போக்கும், அது விளிந்தற்று.



விளக்கம்:


ஒருவரிடத்துப் பெரிய அளவில் செல்வம் வந்து சேர்வது என்பது, கூத்து அரங்கேறுகின்ற அவையில் கூட்டம் சிறிது சிறிதாக வந்து ஒன்று கூடுவது போன்றதாகும்.


அச்செல்வம் ஒருவரைவிட்டு நீங்குதலும், கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.


நம்மிடம் இருக்கும் செல்வம், எப்போதும் நம்மிடத்தே இருக்கும் என்று எண்ணிக்கொள்வது தவறு; செல்வம் நிலைக்கும் தன்மை உடையதன்று; எந்த நேரத்திலும் நம்மைவிட்டுப் போய்விடக்கூடிய ஒன்றாகும்.


குழாம் - கூட்டம், சபை
விளிந்து - அழிந்து, குறைந்து, இறந்து, கழிந்து, ஓய்ந்து, சினந்து, நாணமடைந்து, அவமானமடைந்து, வருத்தமடைந்து

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 19. புறங்கூறாமை
குறள் எண்: 184



கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.



கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் நின்று பின் நோக்காச் சொல்.



விளக்கம்:


ஒருவர் கண் முன்னால் உள்ள போது, கண்ணோட்டம் இல்லாமல், அவரைப் பற்றிய குற்றம் குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; அவர் நேரில் இல்லாத போது பின்விளைவுகள் கருதாது, பின் அவர் முகத்தை எதிர்கொள்ள இயலாது போகும் அளவுக்கு அவரைப் பற்றிக் குறைகள் குற்றங்கள் கூறும் சொற்களைப் பேசுதல் கூடாது.

------------------------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 52. தெரிந்து வினையாடல்
குறள் எண்: 512



வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை.



வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.



விளக்கம்:

பொருள் தேடித்தரும் வழிகளை முன்னிலும் அதிகமாகப் பெருக்கி, அதன் முலம் செயலாற்றுவதற்கான அதிக வளத்தை ஏற்படுத்தி, செயலாற்றும் வேளையில் வரக்கூடிய தடைகளைச் சரிவர ஆராய்ந்து, அவற்றை நீக்க வல்லவனே நன்கு செயலாற்றும் திறமையுடையவன்.

அரசன் இத்தகையவர்களைப் பணிக்கு நியமிக்க வேண்டும் என்று கூறும் முகமாக இத்திருக்குறள் அமைந்துள்ளது. பணியில் நாம் அமர்த்தும் ஒருவர்க்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது.
படுத்து - பெருகச்செய்து, மேன்மையடைந்து, உண்டாகி, தோன்றி, பூத்து, மொய்த்து, அகப்பட்டு, பெய்து, அழித்து, மறைந்து, உடன்பட்டு, ஒத்து



No comments: