Sunday, August 2, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 4)

'முடிவேந்தர் மூவருக்கும்
உம் காப்பியம் உரியதாக!
அடிகளே, இயற்றியருளுக!'
வேண்டினர் சாத்தனார்.

இளங்கோவடிகளும்
தன் நூலின் வகைகள்
விளக்கியே கூறினர்.

கோவலன் கண்ணகி மணவிழாவாம்
மங்கலவாழ்த்துப் பாடல்; 1
அவர்தம் இல்லறப்பாங்கில்
மனையறம் படுத்த காதை; 2

நாட்டிய மாதவியின்
நடன அரங்கேற்று காதை; 3
மாலையழகின் மலைப்பில்
அந்திச் சிறப்பு காதை; 4

புகார் நகர்நிகழ்
இந்திரவிழாக் காதை; 5
மக்களனைவரும்
கடலாடிய காதை; 6

கோவலன் மாதவி
ஊடல் மடலவிழ் கானல்வரி; 7
வேனில் கா(ல)தல் தகிப்பில்
மாதவி தவித்த காதை; 8

கண்ணகி தன் தீய
கனாத்திறனுரைத்த காதை; 9
சோழவளம் கண்டுகளித்த
நாடு காண் காதை; 10
பாண்டிமண்டலம் ஏகிக்
காடு காண் காதை; 11
காட்டு வாழ்க்கை
போற்றி நிற்கும்
வேட்டுவ வரி; 12

இதழ்விரி பூமாலையணிந்த
கண்ணகியவள்
மதுரைப் புறத்தே இருந்த
புறஞ்சேரி இறுத்த காதை; 13
கிறங்கடிக்கும் முரசம்
முழங்கி நிற்கும் மதுரை
ஊர் காண் காதை; 14

சீரிய மாதரியிடம்
அடைக்கலம் கண்ட காதை; 15
கொல்லன் சூழ்ச்சியால்
விளைந்த நிகழ்ச்சிகள்..
கொலைக்களக் காதை; 16

ஆடிப்பாடி மகிழ்ந்த
ஆய்ச்சியர் தம் குரவை; 17
தூயமகள்
தீயசெய்தி கேட்டரற்றிய
துன்ப மாலை; 18
நண்பகல் பொழுதில்
காற்சிலம்பைக் கையிலேந்தி
ஊர் வலம் வந்துக்
காண்போரை நடுங்கவைத்த
ஊர் சூழ் வரி; 19

சீர்மிக்க பாண்டியனிடம்
நீதிகேட்டு வழக்குரைத்த காதை; 20
பாண்டியன் உயிர்துறந்தபின்
அவன் தேவியிடம் வஞ்சினமாலை; 21
மாரில் தீப்பிழம்பூட்டிய
அழல் படு காதை; 22

மதுரை மாதெய்வத்தின்
கட்டுரைக் காதை; 23
கோதையர் ஆடிப்பாடிய
குன்றக் குரவை; 24
தம்பதியர் வானவருடன்
விண்ணுலகெய்திய காட்சி; 25

செங்குட்டுவன்
கண்ணகி கோயிலுக்காய்க்
கல்லெடுத்த கால்கோள்; 26
கல்நீராட்டு நீர்ப்படை; 27
பத்தினிக் கோட்டத்தில்
கண்ணகி நடுகல்; 28
மூவேந்தருக்காய்ப்
பத்தினியவள் அருளிய
வாழ்த்து 29
வரம் தரு காதை; 30

ஐந்தாறு மொத்தம்
காதைகள் முப்பது;
இடையிடை உரைநடையுடன்
தொடர்நிலைச் செய்யுள்.

இவ்வாறாய்
இளங்கோவடிகள் அருளிய
காப்பியப் பகுப்புமுறை
அருகிருந்து கேட்டனர்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

சிலம்பு வரிகள் இங்கே...பதிகம் வரிகள் 61-90

பதிகம் இங்கே முற்றுப் பெறுகிறது. உரைபெறும் கட்டுரையும், அதையடுத்து , காதைகளும் தொடரும். இந்தியப் பயணம் இரண்டு மாதங்களுக்கு...முடியும்போதெல்லாம் தொடர முயலுகிறேன்...

17 comments:

RATHNESH said...

சிலம்பின் அமைப்பே வித்தியாசம் காட்டுகிறதே; எதனைப்பற்றி என்ன சொல்லப்பட இருக்கிறது என்கிற முழு முன்னுரையோடு!

ஒரு சந்தேகம்.

//'முடிவேந்தர் மூவருக்கும்
உம் காப்பியம் உரியதாக!//

சிலம்பு காலத்தில் பாண்டியன் தானே மூவேந்தன்? இல்லையா? அப்போது சேர சோழ மன்னர்கள் யார்?

//உரைபெறும் கட்டுரையும், அதையடுத்து , காதைகளும் தொடரும். இந்தியப் பயணம் இரண்டு மாதங்களுக்கு...முடியும்போதெல்லாம் தொடர முயலுகிறேன்...//

இது என்ன, ஆனந்த விகடனில் பிரிவோம் சந்திப்போம் கதையின் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் இடைவெளி விட்டது போல் மதுரைப் பயணம்?

வெல், சந்தோஷமாகப் போய் வாருங்கள். நீங்களாவது மதுரையை பத்திரமாக விட்டு வாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலர்,
நெஞ்சை உருக்கும் காவியம் சிலப்பதிகரம்.
படிக்கவே நா நடுங்கும்.
கண்ணகியை நினைக்க
கண்கள் கலங்கும்.

நீங்கள் அழகாகப் பட்டியலிட்டிருக்கும் விதமே
மீண்டும் சிலம்பைப் பார்த்த உணர்வு வருகிறது.
ரொம்ப நன்றி மலர்.

ஊருக்கு வந்ததும் பேசலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க வாங்க...

கோபிநாத் said...

ரைட்டு...எல்லோரும் வாங்க..வாங்கன்னு கூப்பிடுறாங்க...போயிட்டு வாங்க ;))

ஒரு டவுட்டு கதைன்னு தானே சொல்லுவோம்!? இது என்ன காதை!?

;)

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன்!வாங்கிக்கோங்க!!

ராமலக்ஷ்மி said...

பதிகம் அருமை. வாழ்த்துக்கள்.

சரி, ஊரிலிருந்து முடியும் போது தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

ரத்னேஷ்

இந்த மூவேந்தர குழ்ப்பம் பதிகம் உரைபெறும் கட்டுரை படிக்க ஆரம்பிக்கும் போது
எனக்கும் வந்தது. பின் கொஞ்சம் ஆராய்ச்சி செய்த போது புரிந்தது இது விஷயமாய் ஏகப்பட்ட குழ்ப்பம்.. சிலப்பதிகாரம் காலம் குறித்து, இளங்கோ அடிகள் காலம் குறித்தும ஏகப்பட்ட கருத்து ,,வேறுபாடுகள் ...சரி என்று அதை ஆராய்ச்சியாள்ரிடமே
விட்டு விட்டு என் வேலை இதுமட்டும் தான் என்று என் எல்லை சுருக்கிக் கொண்டேன்.

பாச மலர் / Paasa Malar said...

வல்லிமா ...உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த காப்பியம்தான் ..

உங்கள் தொலைபேசி எண் என் மின்னஞ்சல் முகவரிக்குத் (முகப்பு பக்கத்தில் உள்ளது) தெரியப்படுத்தவும்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கிருத்திகா ராமலக்ஷ்மி அருணா ...

பாச மலர் / Paasa Malar said...

....கோபி ..பிரிவுகள் காதைகள் என்று சொல்வார்கள் போலும் ...

ஜீவி said...

//காதைகள் முப்பது;
இடையிடை உரைநடையுடன்
தொடர்நிலைச் செய்யுள்.//

உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்..
பதிகம், அழகாக நிறைவு கண்டதா?..
தனித்தனி எண் குறிப்புகள் கொடுத்து அருமையாக சொல்லிவிட்டீர்கள்; திட்டமிட்ட உங்கள் காப்பிய வடிவமைப்பும், அடிகள் அருளியதை பின்பற்றி உங்கள் வரிகளில் சொல்லிச்செல்லும் பாங்கும்
மூலத்திலிருந்து விலகிவிடாமல் நன்கு இருக்கிறது.

இந்தியா வருவது, அதுவும் உங்கள் ஊருக்கு வருவது இன்னும் செளகரியம். ஏற்றுக் கொண்ட பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்..

அன்புடன்,
ஜீவி

குமரன் (Kumaran) said...

இரத்னேஷின் ஐயம் என்ன என்று புரியவில்லை. சிலப்பதிகாரம் மூன்று பகுதிகளைக் கொண்டது - புகார், மதுரை, வஞ்சி என்று மூன்று காண்டங்களைக் கொண்டது. சோழ நாட்டில் தொடங்கி, பாண்டிய நாட்டில் நகர்ந்து, சேர நாட்டில் நிறைவு பெறுகிறது கண்ணகியின் கதை. இப்படி மூன்று நாட்டிலும் கதை நடப்பதால் மூவேந்தர்களுக்கும் இந்த காப்பியம் உரியது என்று பதிகம் சொல்கிறது. இதில் பாண்டியனிடம் மட்டுமே நேரடியாக கண்ணகி பேசுகிறாள் - வழக்குரைக்கிறாள். மற்ற இருவரைப் பற்றியும் காப்பியம் பேசுகிறது.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி .....

பாச மலர் / Paasa Malar said...

நன்றி குமரன். இந்த நடைமுறை விளக்கம் சிறப்பாக உள்ளது..

காலம் said...

ம் வணக்கம் வாங்க?

ராமலக்ஷ்மி said...

தொடரக் காத்திருக்கிறோம்!

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பாசமலர்! அடுத்த பதிவு எப்போது?