Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, September 11, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

மீண்டும் மீண்டும் சிவகாசி விபத்துகள்

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் தான் பட்டாசு ஒலி ஒளி வேடிக்கையை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆபத்தும் விபத்தும் எந்தத் துறையிலும் உண்டுதான் என்றாலும், வருடம் தவறாமல் நிகழும் சிவகாசி விபத்துகள் மனதைப் பிசைகின்றன.

கல்வியைப் பற்றிய புரிந்துணர்வு

நீயா நானா வழங்கி வரும் தரமான விவாதங்களில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்றுமே என்னைக் கவர்ந்தவை. சமீபத்திய விவாதம் ஒன்றில் ஒரு மாணவன் கூறியது: எங்களுக்குப் பெற்றோர் சுதந்திரம் கொடுக்கிறார்கள் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வதில்...ஒன்று இஞ்சினீயருக்குப் படி..அல்லது டாக்டருக்குப் படி..
.
நகைச்சுவை படச் சொன்னாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பிரிவுகளைத் தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் அல்லது வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளின் விருப்பத்தை அடக்கிவைத்துவிடுகின்றனர். இந்த இரண்டு துறைகளைத் தவிர மற்ற படிப்புகள் எல்லாம் நன்கு மதிப்பெண் வாங்காதவர்களுக்கு என்ற பரவலான எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமல்லாமல் சமூக எண்ணமாகவே ஆகிவிட்டது.

எந்தப் பிரிவிலும் நன்கு படித்து, அத்துறையில் உச்சத்தை அடைய முடியும் என்பது புரியாமலே போகிறது.

கல்வி பற்றிய புரிந்துணர்வு...விழிப்புணர்வு நாம் காண இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டும்?!

சில வாழ்வியல் எதார்த்தங்களுக்காய், உளவியல் எதார்த்தங்களும் உண்மையான ஆசைகளும், இயல்புகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

இந்தியா வந்திருந்த போது, உறவுக்கார இளைஞனைச் சந்திக்க நேர்ந்தது. பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

அவனுடைய எதிர்பார்ப்பு: ஒரு டிகிரி இருந்தால் போதும் - குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிகொடுக்க, படித்த பெண் வேண்டும்தான்...ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் பெண் வேண்டாம்..வீட்டைக் கவனிக்க முடியாமல் போகும். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் நானும் தம்பியும் ரொம்பக் கஷடப்பட்டிருக்கிறோம்.

இதையே பெண்ணும் எதிர்பார்த்தால் என்ன செய்வாய்? என்ற கேள்விக்கு அவன் தந்த பதில்: வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க நான் ரெடி. என்னால் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ஹவுஸ் ஹஸ்பெண்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யாராவது ரெடியாக இருப்பார்களா?

கேள்வி சரியானதுதான்..பதில் சொல்லத்தான் தெரியவில்லை...

இன்னும் தேடப்படும் நட்புகள்...


முகப்புத்தகத்தின் மூலம் பல முகங்களைத் தேடிப்பிடித்து விடுகின்றோம் என்றாலும், தேடுதலுக்கு அகப்படாத பல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் சிறியது என்று சொல்கின்ற போதே இச்சிறிய உலகத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற சில நட்புகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகின்றதே என்ற ஆதங்கமும் மிகுதியாக இருக்கிறது.

Monday, April 2, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

இரண்டு திரைப்படங்கள்:

காதலில் சொதப்புவது எப்படி? தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறதே என்று யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்துக்கு
மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆணாக ஆணும், பெண்ணாகப் பெண்ணும் யோசிப்பதில் உள்ள சிக்கல்கள், ஈகோப் ப்ரச்னைகளால் வரும் பிரிவுகள், மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒன்றும் விசேஷமாக இல்லை..அப்படி ஆக்கிக் கொள்வதுதான் விசேஷம் என்ற படிப்பினை..நன்றாக இருக்கிறது.

மூணு 3: ஒய் திஸ் கொலவெறி கொலவெறி?

இளையராஜா, சூர்யா, ரோஜர் ஃபெடரர்

இந்த மூன்று பேருக்கும் பொதுவான ஒரு சிறப்பு இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம். இவர்களால் கவரப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால், இவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. என்றும் இளமையான இளையராஜா பாடல்கள், ரோஜர் விளையாடும் தளங்களில் விசிறிகளின் ஆரவாரம், சூர்யாவின் திரைமுகம் மட்டுமல்ல..  'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி...என்னுடைய இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி நிற்கின்றது. 'அய்யய்யோ...எனக்கு இவரைப் பிடிக்கவே பிடிக்காது' என்று யாருமே சொல்லிவிட மாட்டார்கள் என்றொரு எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதாவும் இந்தப் பட்டியலில் இருந்தார்..ஆனால் அவரைப் பிடிக்காது என்னும் சிலரைச் சந்திக்க நேர்ந்தது..

ஒரு தகப்பனா இப்படி?

சமீபத்திய செய்தி ஒன்று...தேர்வில் மதிப்பெண்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவாக வாங்கிய தன் மகளை, கோவில் வாசல் ஒன்றில் தட்டேந்திப் பிச்சையெடுக்கவைத்தாராம் ஓர் அப்பா...என்னவென்று சொல்வது?

ஆசிரியைகளின் அட்டூழியம்

கொஞ்ச காலம் முன், எல்.கே.ஜி குழந்தையிடம் பாலியல் தொந்தரவுகள் செய்த இரண்டு ஆசிரியைகளைப் பற்றிய செய்திகள்..

கடந்த 2 வாரங்களுக்கு முன், ப்ளஸ் டூ மாணவனிடம் தகாத உறவுகொண்டு, 21 வயதானபின் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் 37 வய்து ஆசிரியை...ஓடிப் போன இவர்களைத் தேடிப்பிடித்த மாணவன் அப்பா...

வக்கிரங்கள் ஆசிரியைகளிடமா? இவர்களை என்ன செய்தால் தகும்?

Wednesday, March 28, 2012

வெள்ளைச் சூரியன்

பார்த்துப் பார்த்து,
கேட்டுக் கேட்டு,
நுகர்ந்து நுகர்ந்து,
ஸ்பரிசித்து ஸ்பரிசித்து,
சுவைத்துச் சுவைத்து,
சலித்துக் களைத்து
இளைப்பாறத்துடிக்கும்
புலன்கள் போலவே

தீச்சிவப்பாய் எரிந்து
தங்கத்தகடாய்த் தகதகத்து
இளஞ்சிவப்பில் மினுமினுத்துக்
களைத்துப்போனதொரு மாலை
வெள்ளைச் சூரியன்.

புனரமைப்பு தேவைப்படுகிறது.
புலன்களுக்கும்
சூரியக்கோளுக்கும்.


(கத்தார் - சவூதி நெடுஞ்சாலைப் பயணமொன்றில் மறைந்துவிடத் துடித்த சூரியனை கார் கதவின் கண்ணாடி கூடத் திறக்க நேரமின்றி எடுத்த புகைப்படம்...)

Sunday, February 26, 2012

ரியாத்தில் நேற்று சுழல் மணற்காற்று

வித்தியாசமான, சட் சட்டென்று நாளுக்கு நாள் மாறும் காலநிலையையும், அதனால் ஏற்படும் புறத்தோற்றமும் ரியாத்தில் வசிப்பவர்களுக்குப் பழகிப்போன ஒன்று.

இரண்டு வருடம் முன்பு இது போல பகல் 11 மணி செம்படலமாய் விளங்கியது.
நேற்று காலநிலை அறிவிப்பில் மழை என்று குறிப்பிட்டிருந்தார்கள். காலை நேரத்தில் மழைக்கான அறிகுறியே இன்றி நல்ல வெய்யிலுடன் திகழ்ந்த சூழல் மாலை 4 மணி அளவில் எப்படி மாறியிருக்கிறது!

இப்படித் தொடங்கியது மாலை 3.30 மணியளவில்..




இறுதி நிலையில் இப்படி மாறியது...





செங்காற்று மணற்படலமாய் மாலை 4 மணியளவில்...









2 வருடங்களுக்கு முன்



காணொளித் தொகுப்பு



காணொளித் தொகுப்பு - 2  வருடங்களுக்கு முன்


முகப்புத்தகத்தில் படங்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி...

Mr. Ace Espiritu
Mr. Billu Roxz
Mr.Ernie Manuel Salvador Gaesin
Mr. Rajagiri Gazzaali
Mr. Imthiyas
Mr. Vetrivel

Wednesday, August 24, 2011

தங்க நிமிடங்கள்



காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்

குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்

உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்

வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....

சுகமோ சுகம்
இதமோ இதம்

குற்றாலச் சாரலில்
நனையும் தங்க நிமிடங்கள்..

Tuesday, March 15, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்

சுனாமியாஞ்சலி

அலை அழகு
அமைதி அழகு
மாறும் நிறம் அழகு
உதிக்கும் சூரியன் அழகு
மறையும் சூரியன் அழகு
வேக நடை அழகு
மெது ஓட்டம் அழகு
மணல் கோபுரம் அழகு
தளும்பும் மீன்படகு அழகு.

ஆனால்
சுனாமி...சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.

சீறும் சுனாமியே
சீக்கிரம் அமைதியாகுக!

அணு உலைகள் வெடிப்பு
உலகுக்கு அபாய எச்சரிப்பு..

இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்..

பொன்னியின் செல்வன்

அவ்வப்போது அறிவிப்புகள் மாறி மாறி வந்தாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு தகவல். விஜய், அனுஷ்கா, ஆரியா மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா குந்தவை, விஜய் ஜோடி என்கிறார்கள். அப்படியானால் விஜய்தான் வந்தியத்தேவன்...மிளிர்வார் என்றுதான் நினைக்கிறேன்..அனுஷ்கா வேடத்துக்குப் பொருத்தம்தான்..பாத்திரத்தில் எவ்வளவு தூரம் ஜொலிப்பார்?! குந்தவையின் குறும்பு வருமா? மிடுக்கு வருமா? கம்பீரம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

விஷால், விக்ரம் பேச்சையே காணோம் இப்போது..


மகேஷ் பாபு, ஆதித்த கரிகாலன்...சூர்யா ராஜராஜ சோழன் என்றால்..ஆரியா யார்?

நந்தினி வேடம் யாருக்கு?

எப்போது படம் வரும் எப்போது பார்ப்போம் என்றிருக்கிறது..

வரும்...ஆனா வராது....

மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலங்களில் நிலவி வரும் சூழல், சவூதி அரேபியாவிலும் சூடு பிடிக்கக்கூடும் என்ற நிலையில்..மார்ச் 11 கிளர்ச்சி மற்றும் ஊர்வலங்கள் எதிர்பார்க்கப்பட்டன....கண்டிப்பாக இங்கேயும் ப்ரசனை வரும் என்றும், அமைதியை விரும்பும் நாடு என்பதால் அப்படி ஏதும் வராது என்றும் எதிர்பார்க்கப்பட்டது..மார்ச் 11 அமைதியாகவே போனது..

சவூதி இளவரசர் அல் வாலித் சொன்னது போல் இது 'tempest in a tea cup' ... 'Saudi is Saudi ..it is no Egypt, no Tunisia, no Libya'...அமைதி இப்போதைக்கு நிச்சயம்...

எது எப்படியோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

சின்னதாய் ஓர் இந்தியப் பயணம்

மார்ச் 16-30 இந்தியப்பயணம்...மிகவும் குறுகிய காலம்..பரபரவென்று பறந்து கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவிக்கப் போகிறேன்..

Thursday, March 10, 2011

கண்ணாடிப்பெட்டியும் கலிஃபோர்னியாவும் காத்திருத்தலும்


ஆச்சு...ராமநாதன் போய்ச் சேர்ந்து சரியா இருபத்து நாலு மணி நேரம் முடியப் போகிறது...இறுதிக்காரியங்கள் முடிந்திருக்க வேண்டிய நிலையில் கலிஃபோர்னியாவிலிருந்து வரவேண்டிய மூத்த மகன் கண்ணனுக்காய்க் காத்திருக்கிறார்கள்...

மதுரை மையப்பகுதிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமான ஐயர் பங்களா பகுதியில் இருந்தது ராமநாதன் வீடு..ஒரு மகன் கலிஃபோர்னியாவில், இரண்டாவது மகன் பெங்களூரில், மூன்றாவது பெண் சென்னையில்...
இவ்வீட்டில் ராமநாதனும், அவர் மனைவி பரிமளாவும் மட்டுமே வாசம்...

பெரிய தோட்டம்...அதை மொத்தமாக அடைத்துப் போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தல்..வீட்டுக்கு வெளியே அகலமான தெரு என்பதால் நல்ல வேளையாக உட்காரும் இடத்துக்குப்பஞ்சமில்லை...

முருகனும், அவன் மனைவியும் எல்லாவேலைகளையும் முன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்..முருகன் பரிமளாவுக்குத் தம்பிமுறை ...கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த அவர்களைத் தங்களுக்குத் துணைக்காக மதுரைக்கு வரவழைத்துக்கொண்டார்கள். அவர்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

சட்டென்று ஒரு நாள் இரவு வந்த நெஞ்சுவலியில் தூக்கத்திலேயே போய்விட்டார் ராமநாதன்..முதல் சில மணி நேரங்கள் குளிப்பாட்டுதல், சங்கு சவுண்டிக்கு ஆள் சொல்லுதல், கண்ணாடிப்பெட்டி ஏற்பாடு, ஆர்ப்பட்டமான அழுகை என்று ஆரம்பித்தது..தொடர்ந்தது...

*********

ராஜா..அப்பா போய்ட்டாருடா...பெங்களூரிலிருந்து வந்துவிட்டது இரண்டாவது மகன் ராஜேஷ் குடும்பம்...அவனும் வாய்பொத்தி அழுது, அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்லி அடுத்தடுத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.

இந்தா இருக்கு பெங்களூரு..இவன் வரவே இவ்வளவு நேரமாகிவிட்டதே...கண்ணன் எப்போ வரப்போறானோ...

ஃபிளைட் ஏறிட்டானாம்...மாறி மாறி வரணுமில்லியா...லாங் ஜர்னி....நாளைக்குச் சாயந்திரம் வருவானாம்...

போன மாசம் என் நண்பன் செத்தப்போ அவன் மகன் துபாய்லருந்துதான்ன்னு நெனக்கிறேன் ..அவன் உடனே வந்துட்டானே...

துபாய் பக்கம்யா...இது ரொம்பத் தூரம்...பெருசாச் சொல்றியே..அதுவும் சரியான கிழமைல இங்க செத்திருக்கணும்..அவனுக்கு லீவு நாளாப்பாத்துச் சாகணும்..இல்லேன்னா வர்றது கஷ்டம்.. என் பெரியம்மா இறந்தப்போ, சவூதிலருந்து அவங்க பையனால வர முடியல...பாஸ்போர்ட் புதுப்பிச்சு வந்திருக்கு...இவங்க புதன்கிழமை செத்துட்டாங்க...வியாழன் வெள்ளி லீவு...அவன் வரவும் ரெண்டு நாளாச்சு..

வெளிநாட்டச் சொல்றீங்களே...இந்தாருக்கு டில்லி நம்ம நாட்லயே....பிரகாஷ் அவங்க அப்பா சாவுக்கு வந்தப்ப ஃபிளைட் ஸ்ட்ரைக் அது இதுன்னு மும்பைல வந்து மாட்டிட்டு இங்க வரவே ரெண்டாவது நாளாயிடுச்சே...

இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்ல முடியாது...அவங்க அவங்க நேரம் காலம்..

***********

பூமா, ராமநாதன் மகளும் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்...அழுகை, ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பின் அவள் கணவன் அவளை ஜாடை செய்து வெளியே அழைத்தான்..

பூமா...அப்பா, அம்மாவை இங்க தங்க வைக்க முடியாது...பக்கத்துல நல்ல ஹோட்டல் விசாரி..அவங்களைப்போய்த் தங்க வச்சுட்டு வந்துர்றேன்..கடைசி நேரம் அவங்க வந்தாப்போதும்...

சரி..முருகன் மாமாவைக் கேட்டு ஏற்பாடு பண்ணிக்கோங்க..

அவனுக்கு மதுரை ஒன்றும் தெரியாத ஊரில்லை..இருந்தாலும் மனைவியிடம் சொன்னால், அவள் வீட்டுச் செலவாகிவிடும் அல்லவா!

***************

ஏ...காப்பி குடுப்பா...சர்க்கரை போடாதே...காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே வந்தார் உறவினர் ஒருவர்..கன்னியப்பன் கேட்டரிங் சர்வீசாரை வரவழைத்து வந்திருந்தவர்களுக்குத் தாகசாந்தி செய்வித்தார்கள்..

எப்போதும் காப்பி, உணவு வேளைகளில் சித்ரான்னம், சப்பாத்தி, கறி, இட்லி, சட்னி, சாம்பார் என்று ஒரு பக்கம் வந்தவர் பசி ஆறிக்கொண்டிருந்தது..

என்னங்க...இந்தக் கேட்டரிங் சர்வீஸ் நம்பர் வாங்கி வச்சுக்கோங்க...நாளைப்பின்ன நமக்கு உபயோகப்படும்...ஒரு மருமகளின் பொறுப்பான கவலை..அவள் கவலை அவளுக்குத்தானே தெரியும்...வயதான மாமனார், மாமியார் அவர்கள் பொறுப்பில் இருக்க, மூத்தார் குடும்பம் சிங்கப்பூரில்...


**************

யப்பப்பா...இழவு வீட்டில் இத்தனை வேலைகள் இருக்கிறதா...பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது கார்த்திக் மனம்...ராமநாதனுக்குத் தூரத்து சொந்தம்..கார்த்திக் ஓர் இந்தக்கால இளசு ...வேலையில்லாப் பட்டதாரி..

பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு எல்லார் வீட்லயுமா ஒரு முருகன் இருக்க முடியும்..

கண்ணாடிப்பெட்டி, சங்கு, சவுண்டி, கேட்டரிங், பந்தல், விளக்கு, மின்சாரம் போனால் கண்ணாடிப்பெட்டி இயங்க ஜெனரேட்டர், வருவோர் போவோர் முறை செய்ய ஜவுளி வாங்கப் போய் வர ஆட்டோ ஏற்பாடு, பட்டாசு, போஸ்டர், மேளம், ஒயிலாட்டம், ஒப்பாரி ஏற்பாடு, இறுதி ஊர்வல ஏற்பாடு, மயான ஏற்பாடு...இன்னும் இன்னும்...

போனில் நண்பனிடம் பேசினான் கார்த்திக்...டே மச்சி...கல்யாண வீடு மாதிரியே சாவு வீட்டில் கூட எவ்ள வேலைடா...பேசாம நாம இதுக்காக ஒரு காண்டிராக்டிங் சர்வீஸ் ஆரம்பிச்சுரலாம்...சேவை செஞ்ச புண்ணியமும் சேரும்...வேலை கிடச்ச மாதிரியும் இருக்கும்..
மச்சி..சிரிக்காதடா..சீரியஸாச் சொல்றேன்..

**********

உலகக் கோப்பை கிரிக்கெட் பிரியர்கள் வேறு..அவ்வப்போது போனில் ஸ்கோர் கேட்டார்கள் ஆரம்பத்தில்..பின் மெதுவாக ராஜேஷிடம் சொல்லி டிவியைத் தோட்டத்துப் பக்கம் கொண்டுவரச்செய்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள்...நடுநடுவில் கூட்டணிக் களேபரத்துக் குளறுபடிச் செய்திகள் வேறு...அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற அலசல்கள், உரசல்கள் வேறு..

அய்யோ...கோபி, மகாவுக்கு ராமேஸ்வரத்தில் கல்யாணம் ஆச்சோ இல்லியோ தெரியலியே...ஒரே கலாட்டாவா இருந்துச்சு...ஒரு மனைவி அங்கலாய்க்க..

கணவன் அப்பாவியாய்ச் சொன்னான்........போன் போட்டுக் கேட்க வேண்டியதுதானே..

அய்யோ..அய்யோ...இது நாதஸ்வரம் சீரியல் கோபி, மகா...உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது..

ரொம்ப அவசியம்...

ஆமா எவனோ எவனோடயோ ஆடறான்...இந்தியா கூட இல்ல...உங்களுக்கு மட்டும் சாவு வீட்லயும் கிரிக்கெட்டும், அரசியலும் கேக்குதோ...ஒரு நிமிஷம் சானல் மாத்தி வச்சா என்ன குறஞ்சா போய்டுவீங்க...

************

வீட்டுக்குள்ள இருக்க முடியல...என்னதான் ஐஸ் பொட்டின்னாலும் சரியா வராது போலிருக்கு...ஏதோ வாசனை வர மாதிரி இருக்கு..இந்தக் கண்ணன் எப்போதான் வரப்போறானோ..

பிள்ளைகள் தனியா விட்டுட்டு வந்திருக்கேன்....

ஆபிசில் ஆடிட் நடக்குது...லீவு போட முடியாது..
பெரியப்பா பிள்ளை கல்யாணத்துக்குப் போகணும்..

காரியத்தவாது பத்து பதினைஞ்சு நாள்னு நீட்டிட்டுப் போகாம உடனே சட்டுப் புட்டுன்னு முடிச்சா நல்லாருக்கும்..அதுக்கு வேற லீவு போட்டுட்டு இவ்ள தூரம் வர முடியாது...

சான்ஸே இல்ல..காரியத்துக்குத்தும் சேத்துதான் இங்க உக்காந்தாச்சே...காரியத்துக்கு வேற எங்க வர்றது..

இப்படி அவரவர் வேலை அவரவர்க்கு...

************
இரண்டாம் நாள் இரவு வந்து சேர்ந்தான் கலிஃபோர்னியாக் கண்ணன்...

ஆமா...அவன் மட்டும் வந்திருக்கான்..பொண்டாட்டி பிள்ளைகளைக் காணோம்...

பிள்ளைகளுக்குப் பரீட்சை...அவளுக்கு லீவு கிடைக்கலியாம்..போன மாசம்தான் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டுப் போயிருக்கா...

*************

ஒரு வழியாக ராமநாதன் இறந்து ஐம்பத்தைந்து மணிநேரங்கள் கடந்த நிலையில் இறுதிக்காரியங்கள் நடந்தேறின. நெஞ்சு வலியால் ஒரு முறை செத்த அவர், சூழ்நிலைகளால் மீண்டும் மீண்டும் சாகடிக்கப்பட்டார்.

கண்ணன் கிளம்பும்போது அம்மா சொன்னாள்: நான்லாம் செத்தா உடனே எல்லாத்தையும் முடிச்சுடுங்கடா....அவங்க அவங்க சவுகரியத்துக்குப் பதினோராம் நாள் காரியத்துக்கு வந்தால் போதும்....யாருக்கும் கஷ்டம் வேணாம்..

Monday, January 24, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்


'பொன்னியின் செல்வன்' கனவுகள்

பலரின் நீண்ட நாள் கனவு 'பொன்னியின் செல்வன்' நிகழ்வுகளைத் திரையில் காண வேண்டுமென்பது. மக்கள் தொலைக்காட்சியும் இதற்கான நடிகர் தேர்வுக்கான அறிவுப்புகளை அளித்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரும் இப்படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. சங்கர் இயக்குவதாக ஒரு செய்தி சொல்ல, மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

கமல், ரஜினி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்காகவே காத்திருக்கின்ற பலருள் நானும் ஒருத்தி. பலரின் கனவு கைகூடி வரும் வேளையில், சில பயங்களும் எழாமல் இல்லை. நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அன்றிலிருந்து ஜெமினி, எம்.ஜி.ஆர், கமல் மற்றும் பலரும் செய்ய நினைத்துக் கைவிட்ட முயற்சி, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், தொழில்நுட்பரீதியாக பலவகை முன்னேற்றங்கள் உள்ள இக்கால கட்டத்தில் எளிதாகவே இருக்கும்.

பாத்திரங்களின் தேர்வு, காட்சி திரைக்கதை அமைப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் சவாலாய் அமையப் போகும் இப்பணி. அவரவர் தனிப்பட்ட கருத்தை, பாணியைத் திணிக்காமல் புத்தக அழகு சற்றும் குறையாமல் கால அவகாசம் சரிவர எடுத்துக் கொண்டு செய்வார்களேயானால்...என்னை போன்ற பலரின் கனவுகள் அழகாய் மெய்ப்பட வாய்ப்புண்டு.

நீயா நானா....இது தகுமா தகுமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும் இவர்கள் திருந்துகின்ற வழியாய்த் தெரியவில்லை. நல்ல நல்ல செய்திகளைத் தரும் நிகழ்ச்சிகள் கூட மூன்றாம் தரத்துக்கு இறங்கிப் போகின்ற கொடுமை.....தாங்கவில்லை.

நீயா நானா...நல்லதொரு நிகழ்ச்சி(இனிமேல் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை.)  பிரபலமாவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும், சுவாரசியம்(?!) சேர்ப்பதற்கும் சில காட்சிகளைத் திட்டமிட்டு, ஒத்திகையுடன் சித்தரித்து அரங்கேற்றுவதாகக் கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் அதையெல்லாம் மீறி ஆக்கப்பூர்வமான வாக்குவாதங்கள் வாயிலாக நல்ல செய்திகளையும் பல நேரங்களில் நமக்குத் தந்துள்ளது இந்நிகழ்ச்சி.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கணவன் - மனைவி விவாதம் என்ற பெயரில் அடித்த கூத்தை என்ன வார்த்தைகளால் விமர்சிப்பது என்றே புரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாது, கர்னாடக சங்கீதம் ரசிக்கத் தெரியாது, சமையலை ரசித்துச் சப்பிடத் தெரியாது...என்று வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட பாங்கு, போனால் போகிறதென்று மன்னிப்பும் கேட்டு...அடா அடா .....

இவர்களால் எப்படி இது முடிகிறது? இவர்கள் பெற்றோர், உறவினர், பிள்ளைகள், சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதர்கள் என்று அனைவரும் பார்ப்பார்கள் என்ற உணர்வு கொஞ்சம் கூட இன்றி....நாராசம்!

இவர்கள்  பெற்றெடுத்த பிள்ளைகளை எங்ஙனம் வழிநடத்தப் போகிறார்கள்?

Monday, May 3, 2010

ஆலங்கட்டி மழை ரியாத்துக்கு வந்தாச்சா...

மதியம் சுமார் 2 மணியிருக்கும்..திடீரென்று சன்னல் வழியே பார்க்கும்போது, குளிர்கால சாயந்திரம் 5 மணி போல் ஒரே கும்மிருட்டு.....யோசித்துக் கொண்டிருக்கும்போதே....

மழையின் சத்தம்..காற்றின் பிளிறல்..கூடவே...டங் டங் என்று உலோகச் சத்தம்...சட்டென்று புரிந்தது...ஆஹா...இது ஆலங்கட்டி மழையாச்சே....நான் ஓரிரு முறை இந்த வளைகுடாப் பகுதியில் இதைப் பார்த்திருந்தலும்..என் மகள் பார்த்திருக்கவில்லை...பயந்த அவளை ஒரு வழியாகச் சமாதனப்படுத்தி இறங்கிப்போய்க் கீழே பார்த்தால் ஒரே வெள்ளம்
ஓடிக் கொண்டிருக்கிறது சாலையில்...

தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டிகள்....

அடடா...வித்தியாசமான சிலீர் அனுபவம்.....

ஆனாலும் எத்தனை எத்தனை பேர் இங்கே இதனால் கஷ்டப்பட்டார்களோ
தெரியவில்லை...

மழைக்கு முன் வந்த காற்று..
செம்மணல் மண்டலம்....
புகைப்படக்கருவி வழியே...



(மேலே உள்ள புகைப்படங்கள்: நண்பர் விஜயக்குமார் எடுத்தவை..)

(கீழ்க்காணும் புகைப்படங்கள் என் கணவர் அலுவலகத்திலிருந்தபடி வெளித்தோற்றத்தை எடுத்தவை)

Friday, January 29, 2010

வசெந்தம் - பொங்கல் / புத்தாண்டு விழா

சனவரி மாதம் 15 ம் நாள் வெள்ளியன்று 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' - துவக்கவிழா, பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா இனிதே நடைபெற்றது. வார இறுதியான ஒவ்வொரு வியாழன் மாலை முதல் நள்ளிரவு வரை மகிழகம் ஒன்றில் சுமார் 50 பேர் தவறாமல் சந்தித்துக் களிப்பது கடந்த நான்கு ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாரமும் நிகழும் இந்தச் சந்திப்பை, எங்களுக்கும் இன்னும் பலருக்கும் பயனுள்ள வகையில் மாற்றும் எண்ணம் அனவருக்கும் ஏற்பட 'வசெந்தம்' மலர்ந்தது.

ஒவ்வொரு முறையும் அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழும் நாங்கள், இந்த முறை வழக்கமான நண்பர்கள் மட்டுமல்லாமல் பல புது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினோம். உறியடித்தல், கபடி விளையாட்டு, கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு, தமிழ்ச் சொல் விளையாட்டு,சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி, பட்டி மன்றம், கிராமிய நடனம், பொங்கல் பண்டிகையின் சிறப்பை விளக்கும் நாடகம் என்று மிகவும் இனிதே நடந்தேறியது இவ்விழா.

சங்கத்தின் சமுதாயப் பணி குழுமத்தின் சார்பில், பொங்கல் நாளில், கோயம்புத்தூர் ஆசிரமம் ஒன்றில் மரக்கன்றுகள் நடும் பணியும் இனிதே நிறைவேற்றப்பட்டது. 2010 ஆண்டில் 2010 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்...என்ற உறுதியும் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தத்தில் இந்தத் தினம் மறக்க முடியாத முத்திரை பதித்து நிற்கிறது.

உறியடித்தல்

குழந்தைகள் விளையாட்டு

கபடி விளையாட்டு

கோலப்போட்டி
பட்டிமன்றம்

கிராமிய நடனம்
பொங்கல் நாடகம்

Wednesday, June 24, 2009

32 கேள்விகள் 32 பதில்கள்

32 கேள்விகள் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த கோமதிக்கு நன்றி.

எனது பதில்கள்:

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜாதகப் பெயர் 'ஹே'யில் தான் வந்ததாம்..தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக மலர்ச்செல்வி என்று வைத்தார்கள் என் அப்பாவும் தாத்தாவும்.

மிகவும் பிடிக்கும். அதிலும் சுருக்கமாக 'மலர்' மிகவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அய்யோ..தொலைக்காட்சி, சினிமாக் காட்சிகளுக்காய் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி அழுவதுண்டு....கடைசியா Federer சமீபத்திய போட்டியில் ஜெயித்த போது, அவர் அழுத அழுகையில் எனக்கும் அழுகை வந்துவிட்டது..

உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளுக்காய் நான் அழுவது மிக அபூர்வம்...
அந்த வகையில் ஊரிலிருந்து ரியாத் திரும்பி வரும்போது கடைசியாகக் கொஞ்சமாக அழுதேன் என்று நினைக்கிறேன்.


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

நல்ல காய் போட்டு செய்த எந்த வகைக் குழம்பும் மிகவும் பிடிக்கும்..மற்றபடி வழக்கமான சாதம், பொரியல் எதுவாக இருந்தாலும் சரி..

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக வைத்துக் கொள்வேன்.


6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்க மிகவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்கள் பழகும் விதம். அதற்கு ஏற்றாற் போல் பழக வேண்டும் என்பதற்காக..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம்: எளிதில் அனைவரிடமும் பழகுவது;
பிடிக்காத விஷயம்: சோம்பேறித்தனம், கோபம்.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம்: எந்தப் ப்ரச்னையையும் எளிதாக ஏற்றுக் கொண்டு, எதையும் சமாளிக்கும் பக்குவம்+தைரியம், தோழமையுணர்வு.

பிடிக்காத விஷயம்: சின்ன மற்றும் பெரிய விஷயங்களுக்குத் திட்டமிடாத தன்மை.

10. யார் பக்கத்திலே இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

மறைந்துவிட்ட என் அப்பா...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அட..எனக்குப் பிடித்த கத்தரிப்பூ வண்ணம்...


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

K Tv யில் காக்கிச்சட்டை படத்தில் கமல்...


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பேனா என்றால் கத்தரிப்பூ வண்ணம்....மை என்றால் கருப்பு அல்லது பச்சை.

14. பிடித்த மணம்?

மல்லிகைப்பூமணம், ஜாதிப்பூமணம், மண்வாசனை, விபூதி வாசனை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிருத்திகா - இன்னும் நேரில் பார்த்ததில்லை..பதிவுகளில்தான் அறிமுகம்...ஓரிரு முறை மட்டுமே chat பண்ணியுள்ளோம்..இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் பழகிய தோழி போன்ற ஓர் உணர்வு. என்னுடன் ஒத்துப் போகின்ற ஒற்றுமைகள் பிடித்த விஷயம்...இன்னும் கொஞ்சம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை என்பதால்..அவரை அழைக்கப் போகிறேன்.

செல்வி ஷங்கர் - நம்ம சீனா சார் மனைவிதான். நேரில் சந்தித்தபோதும் சரி, எழுத்துகளில் சந்தித்த போதும் சரி, வியக்க வைக்கும் விஷயங்கள், கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இவரிடம் உண்டு...இவரைப் பற்றியும் இன்னும் சற்று அதிகமாக அறிந்து கொள்ள ஆசை..

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

நிலாக்குட்டி பற்றிய எல்லாப் பதிவுகளும்..கோமதி எழுதுவதிலிருந்து கொஞ்சமும் கூடாமல் குறையாமல் இருக்கும் நிலாவின் செயல்கள்...கோமதியின் விவரிப்புத் திறமை பாராட்டுக்குரியது...

17. பிடித்த விளையாட்டு?

உட்கார்ந்து விளையாடுவதில் ரம்மி, பல்லாங்குழி...ஓடி விளையாடுவதைப் பார்க்கப் பிடிக்கும்..குறிப்பாக டென்னிஸ் பார்க்கப் பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

புத்தகம் படிக்கும் நேரம் பார்வைக் கோளாறுக்கான கண்ணாடி, சவுதி வெயிலுக்குக் கறுப்புக் கண்ணாடி.


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மனதுக்குப் பாரமான முடிவுகள் இருக்கவே கூடாது...இலகுவான கதை..அழுத்தமான காட்சிகள் சில...பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்க வேண்டும்...

20. கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் 'தசாவதாரம்' (ஊரில்தான்..ரியாத்தில் ஏதுங்க திரையரங்கம்)
சிடி யில் 'யாவரும் நலம்'.


21. பிடித்த பருவ காலம் எது?

வசந்தம்...

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்போதைக்கு 'அடோன்' தமிழ் இலக்கணம்..என் பெண்ணுக்கு இலக்கணம் கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
நிறைய இருக்கிறது கைவசம்...நேரம் முழுமையாகக் கிடைக்க இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்...

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் பெண்தான் அவ்வப்போது மாற்றுவாள்..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: மென்மையான எந்த ஒரு பாடலும்
பிடிக்காதது: அதிரடியான எதுவும்..

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

எகிப்து, கென்யா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் எழுதுவது.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தர்ப்பவாத நடிப்பு.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

அயல்நாடுகளில் ..எகிப்து...நம் நாட்டில் ஜெய்ப்பூர்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னில் சில குணங்களை மற்றும் தவிர்த்து நான் நானாகவே இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி என்று ஒன்றுமே கிடையாது.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

பலவகை அனுபவங்கள் ஏந்திய அழகான அட்சய பாத்திரம்...

Sunday, May 24, 2009

சிரித்தோம் சிந்தித்தோம்


ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கடந்த ஏப்ரல் 30ந் தேதி, ரியாத் இந்திய பெண்கள் பன்னாட்டுப் பள்ளியில் நடந்த 'சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி மிக அருமையாக நடந்தேறியது. பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் சொற்பொழிவை அடுத்து, ரோபோ ஷங்கர், ஈரோடு மகேஷ், ஜெகன் ஆகியோரின் பல்சுவை நிகழ்ச்சி சரியான விருந்து....நகைச்சுவை
மருந்தும்தான்...

நிகழ்ச்சி முடிந்ததும் நகைச்சுவைக் கலைஞர்கள் இந்தியா திரும்பினர். திரு. பெரியார்தாசன் அவர்கள் மேலும் இரண்டு வாரம் இங்கே தங்கியிருந்தார். இரண்டு வாரமும் சற்றும் ஓயாமல், சளைக்காமல் அடுத்தடுத்துப் பலவித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக ரியாத், தமாம் மற்றும் ஜெத்தாவில் பள்ளி மாணவர்களின் சுய முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பாடங்கள் குறித்த திட்டமிடல், மனதை ஒருமுகப்படுத்துதல், படிக்க வேண்டிய சூழல் முதலிய தலைப்புகளில் அவர் கொடுத்த குறிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஒரு பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்ற நிலை மாறி அன்றாடம் ஒரு பள்ளி விஜயம் என்றாகிப் போனது. சவுதி அரேபிய மாணவ சமுதாயம் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

சாதாரணமாக மனிதர்களைத் தாக்கக்கூடிய மனப்பிறழ்வுகள் பற்றிய அவரின் மனோதத்துவத்துறை சார்ந்த சொற்பொழிவுகளும் சரி, இனிய வாழ்க்கைக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகளும் சரி...மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டேயிருந்தன.

ரியாத் எழுத்துக்கூடம் சார்பாக நிகழ்ந்த கவியரங்கத்தில் வெளிப்பட்ட அவரின் கவிதை முகம் பலரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தியது. புதுக்கவிதை, மரபுக்கவிதை எல்லாவற்றிலும் புலமை வாய்ந்தவர் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் நமக்காக வகுத்திருக்கும் வாழ்க்கை நெறிகளில் இருந்து விலகி வேறுவழி செல்வதன் மூலம் எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறோம் என்று அவர் கோடிட்டுக் காட்டியது...நல்மனம் பெறும் குறிப்புகள் தந்தது...என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தனிப்பட்ட முறையில் மனவியல் குறித்த ப்ரச்சனைகளுக்காக சிலருக்கும் சிகிச்சை அளித்தார். அதன் பலனாய் அவர்கள் இன்று நலம் கண்டு முன்னேறி வருவதாகவும் தெரிய வந்தது.

தூய தமிழ், சென்னைத் தமிழ், ஆங்கிலம் என்ற அனைத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் அவருடைய பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்தது.

தன்முனைப்புப் பயிற்சியாளர், பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை உளவியல் பேராசிரியர்(ஓய்வு), 25 ஆண்டுகளாக மனவியல் பயிற்சியாளர், 20 ஆண்டுகளாக மனவியல் சிகிச்சையாளர், பல்வேறு துறைகளில் பல புத்தகங்கள் எழுதியவர், இலக்கியவாதி, சர்வதேச கருத்தரங்குகளில் மனவியல் சிகிச்சை பற்றிய கட்டுரைகள் வழங்கியவர், 'கருத்தம்மா' புகழ் திரைப்பட நடிகர் ..இவ்வாறாயப் பல்முகங்கள் கொண்டவரின் அனைத்துத் துறைத் திறமைகளையும் கண்கூடாகக் காணமுடிந்தது.

எப்பேர்ப்பட்ட எளிமையான மாமனிதர் என்ற வியப்பிலிருந்து இங்கே நான் மட்டுமல்ல, இன்னும் பல நண்பர்களும் விடுபடவேயில்லை.

Tuesday, March 10, 2009

ரியாத்தில் மணற்புயல்




இன்று காலை சுமார் 11 மணியளவிலேயே அறிவிப்பு வந்தது..மிக வேகமானதொரு மணற்புயல் ரியாத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக...
ஏதோ ஏப்பை சாப்பைப் புயல் என்று நினைத்திருந்தேன் முதலில்... ஆனால் அடேங்கப்பா...உங்க வீட்டு எங்க வீட்டு மணல் இல்லீங்க...எங்கும் எதிலும் மணல் மூட்டம்....ஊரே அடர்த்தியான கருஞ்சிவப்பு நிறத்தில் இரவு நேரம் மாதிரியாகிவிட்டது நண்பகல் 12 மணி...மாலைவரை தொடர்ந்தது இந்நிலை..இன்னும் கூட காற்றின் வீரியம் குறையவில்லை..
நான் இங்கிருந்த பத்து வருடங்களில் இந்த அளவுக்கு ஒரு மணற்புயலைக் கண்டதில்லை...வித்தியாசமான அனுபவம்தான்..