Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, February 8, 2012

பின்னோக்கி நகரும் நாட்கள்






சிம்னி விளக்கொளியில்
சிறுவரின் தேர்வுக்கான கல்வி
ஓயாமல் உழைத்த களைப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன
கணினி ஐபேட் இத்யாதிகள்


அம்மிக்கல் ஆட்டுரலில்
சிறப்புச் சமையல்
விசேடச் சலுகையில்
சிலாகிக்கின்றன
நாவின் சுவைமொட்டுகள்

பேட்டரி வானொலியில்
ஐயாக்கள் செய்திச்செவிமடுப்பு
தொடரின் ஓட்டத்துடன்
தொடர்ந்து ஓடிய
அம்மணிகள் பரிதவிப்பு

வறுமையின் வாசங்கள்
பழகிக் கொண்டு
மெல்லப் பின்னோக்கி 
நகர்ந்து செல்கின்றன
நம் நாட்கள்!

Wednesday, December 14, 2011

தாம்பத்யம் தகிடுதத்தம்

பல சமுதாயப் ப்ரச்னைகள் நமக்குச் சவாலாக இருப்பது கால காலமாகத் தொடர்ந்து வருவதுதான். அரசியல், ஊழல், மதம், இனம், பற்றாக்குறை, கல்வி, வேலைவாய்ப்பின்மை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பிறழ்ந்து காணப்படும் நிலையும் நாம் நன்கறிவோம். ஆனால், சமீப காலமாக இது போன்ற பிறழ்வுகள்  பல தம்பதிகள் வாழ்வில் கண்கூடாகப் பார்த்து வருகிறேம்.

நம் சொந்தம், நட்பு வட்டம், தெரிந்தவர்கள் வாயிலாகக் கேட்பது என்பது சமீப காலமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதாகும்.
 
  • பிள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்தா...அப்புறம் புருஷன் வீட்டுக்குப் போகவே மாட்டேங்கிறா..
  • என்னை என் புருசன் கூட அனுப்பிச்ச உயிரோடவே பாக்க முடியாது.உங்களுக்கு நான் உயிரோட இருக்கணும்னா என்னை அங்கே போகச் சொல்லாதீங்க..
  • என் காலில் நிக்க என்னால் முடியும்...எனக்கு அந்த ஆள் தயவு தேவையில்லை.
  • என்னை அடிக்கக் கை ஓங்கிட்டு வர்ற அந்த ஆளுகூட நா குப்பை கொட்ட மாட்டேன்..உங்களுக்கு நான் இங்க இருப்பது கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க..நான் ஹாஸ்டலுக்குப் போறேன்..
  • அவளுக்கு என்ன அவ்ள திமிரு..புள்ளய வேணா வச்சுக்கட்டும்...வேணுங்கிறப்போ போய் நா பாத்துக்கிறேன்...
  • என்னை விட அதிகம சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு...அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னா நா என் பிரண்ட் ரூமுக்கு போய்ருவேன்..

ப்ரச்னைகள் யாருக்குத்தான் இல்லை? அதை எதிர்கொள்கிற மனப்பான்மைதான் இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருவது போல் தோன்றுகிறது.


உண்மையான, தீவிரமான காரணங்களால் சகிப்புத்தன்மை இல்லாமல் பாதுகாப்பு கருதிப் பிரிதல் என்பது அவசியமான ஒன்றுதான்.

ஆனால் இன்று அன்றாட நிகழ்வுகளைக் கூடப் ப்ரச்னை என்று சொல்லி, என் பொம்மையை நீ உடைச்சிட்ட....உன் பொம்மையை நான் உடைக்காம விடமாட்டேன்..என்று குழந்தைத்தனமாக மனமுதிர்ச்சியில்லாமல் பிரிந்து வாழும் இவர்கள்....செய்வதறியாது திகைத்து நிற்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்....

எல்லா வகையிலும் எதார்த்தவாதிகள், So what? என்று பேசும் தன்மை, பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லம் அல்லது கண்டிப்பு, நீயா நானா என்கிற அகங்காரம், தனியாக வாழும் பலரை முன்மாதிரியாகக் கொள்ளுதல் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் காதல் திருமணம் புரிந்தவர்கள்..பல நாள் பேசிப் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற பெயர் வேறு...மாமியார் மாமனார் இல்லாத் தனிக்குடித்தனம் செய்பவர்களுக்கும் ப்ரச்னைதான்...வரதட்சணைத் தொல்லை போன்ற காரணங்கள் கூட இல்லை..


திருமண வாழ்வுக்கு ஆதாரமான, அடித்தளமான சகிப்புத்தன்மை, புரிந்து கொள்ளுதல், நட்பு உணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான காதல் உணர்வு இல்லாமல் போனது....இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...


சமீபத்துத் தமிழகப் பயணத்தின் போது திருமணமான தம்பதிகளை வாழ்த்தலாம் என்று அவர்களைப் பற்றி விசாரித்த போது,  விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்,  தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட அதிர்ச்சியாக இருந்தது...நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வழியில் பார்த்தாலும் இந்த ரீதியில் ஏதாவது ஒரு கதை...

பயமாய் இருக்கிறது!!

Monday, May 23, 2011

அவரும் இவரும்


நம் எதிர்பார்ப்பு:
2+2 = 4

அவர் சொன்னார்:
3+2 = 5

இவர் சொல்கிறார்:
2+3 = 5

அவர் குடும்பம்
அசல் ஆலமரம்
விழுதுகளாய் வியாபித்து
விண்ணளவு வளர்ந்து
நீள அகலம்
உயரம் ஆழம்
முடியுமட்டும் அளந்து
ஆர்ப்பரித்தது...

இவர் தோழி நட்பு
போன்சாய் ஆலமரம்
வரவேற்பறையில்
படு சமர்த்தாய்த்
தொட்டிக்குள் அமர்ந்து
எண்பது அடி பலத்தை
எட்டங்குலத்துள் அடக்கி
ஆர்ப்பரிக்கும்...

இருவரிடத்தும்
சமமாய்ச் சீரழியும்
சமச்சீர் கல்வி..

புதிய கோட்டையா
பழைய கோட்டையா
கோட்டைக்கான சர்ச்சையில்
கோட்டைவிடப்படும்
ஆக்கப்பூர்வ திட்டங்கள்..

அவர் எதுகை
இவர் மோனை

அவர் ஏணி என்பார்
இவர் கோணி என்பார்

கட்சி
கொள்கை
மக்கள்

அவருக்கும்
இவருக்கும்
விளையாட்டு பொம்மை...

நாம் மட்டும்
என்றும் மாறாத
சகிப்புத்தன்மையுடன்..

அவரையும் சகிப்போம்
இவரையும் சகிப்போம்...

ஐந்து வருடம்
கழித்து..
இன்னமும்
சகிப்போம்!

Thursday, March 10, 2011

கண்ணாடிப்பெட்டியும் கலிஃபோர்னியாவும் காத்திருத்தலும்


ஆச்சு...ராமநாதன் போய்ச் சேர்ந்து சரியா இருபத்து நாலு மணி நேரம் முடியப் போகிறது...இறுதிக்காரியங்கள் முடிந்திருக்க வேண்டிய நிலையில் கலிஃபோர்னியாவிலிருந்து வரவேண்டிய மூத்த மகன் கண்ணனுக்காய்க் காத்திருக்கிறார்கள்...

மதுரை மையப்பகுதிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமான ஐயர் பங்களா பகுதியில் இருந்தது ராமநாதன் வீடு..ஒரு மகன் கலிஃபோர்னியாவில், இரண்டாவது மகன் பெங்களூரில், மூன்றாவது பெண் சென்னையில்...
இவ்வீட்டில் ராமநாதனும், அவர் மனைவி பரிமளாவும் மட்டுமே வாசம்...

பெரிய தோட்டம்...அதை மொத்தமாக அடைத்துப் போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தல்..வீட்டுக்கு வெளியே அகலமான தெரு என்பதால் நல்ல வேளையாக உட்காரும் இடத்துக்குப்பஞ்சமில்லை...

முருகனும், அவன் மனைவியும் எல்லாவேலைகளையும் முன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்..முருகன் பரிமளாவுக்குத் தம்பிமுறை ...கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த அவர்களைத் தங்களுக்குத் துணைக்காக மதுரைக்கு வரவழைத்துக்கொண்டார்கள். அவர்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

சட்டென்று ஒரு நாள் இரவு வந்த நெஞ்சுவலியில் தூக்கத்திலேயே போய்விட்டார் ராமநாதன்..முதல் சில மணி நேரங்கள் குளிப்பாட்டுதல், சங்கு சவுண்டிக்கு ஆள் சொல்லுதல், கண்ணாடிப்பெட்டி ஏற்பாடு, ஆர்ப்பட்டமான அழுகை என்று ஆரம்பித்தது..தொடர்ந்தது...

*********

ராஜா..அப்பா போய்ட்டாருடா...பெங்களூரிலிருந்து வந்துவிட்டது இரண்டாவது மகன் ராஜேஷ் குடும்பம்...அவனும் வாய்பொத்தி அழுது, அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்லி அடுத்தடுத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.

இந்தா இருக்கு பெங்களூரு..இவன் வரவே இவ்வளவு நேரமாகிவிட்டதே...கண்ணன் எப்போ வரப்போறானோ...

ஃபிளைட் ஏறிட்டானாம்...மாறி மாறி வரணுமில்லியா...லாங் ஜர்னி....நாளைக்குச் சாயந்திரம் வருவானாம்...

போன மாசம் என் நண்பன் செத்தப்போ அவன் மகன் துபாய்லருந்துதான்ன்னு நெனக்கிறேன் ..அவன் உடனே வந்துட்டானே...

துபாய் பக்கம்யா...இது ரொம்பத் தூரம்...பெருசாச் சொல்றியே..அதுவும் சரியான கிழமைல இங்க செத்திருக்கணும்..அவனுக்கு லீவு நாளாப்பாத்துச் சாகணும்..இல்லேன்னா வர்றது கஷ்டம்.. என் பெரியம்மா இறந்தப்போ, சவூதிலருந்து அவங்க பையனால வர முடியல...பாஸ்போர்ட் புதுப்பிச்சு வந்திருக்கு...இவங்க புதன்கிழமை செத்துட்டாங்க...வியாழன் வெள்ளி லீவு...அவன் வரவும் ரெண்டு நாளாச்சு..

வெளிநாட்டச் சொல்றீங்களே...இந்தாருக்கு டில்லி நம்ம நாட்லயே....பிரகாஷ் அவங்க அப்பா சாவுக்கு வந்தப்ப ஃபிளைட் ஸ்ட்ரைக் அது இதுன்னு மும்பைல வந்து மாட்டிட்டு இங்க வரவே ரெண்டாவது நாளாயிடுச்சே...

இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்ல முடியாது...அவங்க அவங்க நேரம் காலம்..

***********

பூமா, ராமநாதன் மகளும் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்...அழுகை, ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பின் அவள் கணவன் அவளை ஜாடை செய்து வெளியே அழைத்தான்..

பூமா...அப்பா, அம்மாவை இங்க தங்க வைக்க முடியாது...பக்கத்துல நல்ல ஹோட்டல் விசாரி..அவங்களைப்போய்த் தங்க வச்சுட்டு வந்துர்றேன்..கடைசி நேரம் அவங்க வந்தாப்போதும்...

சரி..முருகன் மாமாவைக் கேட்டு ஏற்பாடு பண்ணிக்கோங்க..

அவனுக்கு மதுரை ஒன்றும் தெரியாத ஊரில்லை..இருந்தாலும் மனைவியிடம் சொன்னால், அவள் வீட்டுச் செலவாகிவிடும் அல்லவா!

***************

ஏ...காப்பி குடுப்பா...சர்க்கரை போடாதே...காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே வந்தார் உறவினர் ஒருவர்..கன்னியப்பன் கேட்டரிங் சர்வீசாரை வரவழைத்து வந்திருந்தவர்களுக்குத் தாகசாந்தி செய்வித்தார்கள்..

எப்போதும் காப்பி, உணவு வேளைகளில் சித்ரான்னம், சப்பாத்தி, கறி, இட்லி, சட்னி, சாம்பார் என்று ஒரு பக்கம் வந்தவர் பசி ஆறிக்கொண்டிருந்தது..

என்னங்க...இந்தக் கேட்டரிங் சர்வீஸ் நம்பர் வாங்கி வச்சுக்கோங்க...நாளைப்பின்ன நமக்கு உபயோகப்படும்...ஒரு மருமகளின் பொறுப்பான கவலை..அவள் கவலை அவளுக்குத்தானே தெரியும்...வயதான மாமனார், மாமியார் அவர்கள் பொறுப்பில் இருக்க, மூத்தார் குடும்பம் சிங்கப்பூரில்...


**************

யப்பப்பா...இழவு வீட்டில் இத்தனை வேலைகள் இருக்கிறதா...பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது கார்த்திக் மனம்...ராமநாதனுக்குத் தூரத்து சொந்தம்..கார்த்திக் ஓர் இந்தக்கால இளசு ...வேலையில்லாப் பட்டதாரி..

பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு எல்லார் வீட்லயுமா ஒரு முருகன் இருக்க முடியும்..

கண்ணாடிப்பெட்டி, சங்கு, சவுண்டி, கேட்டரிங், பந்தல், விளக்கு, மின்சாரம் போனால் கண்ணாடிப்பெட்டி இயங்க ஜெனரேட்டர், வருவோர் போவோர் முறை செய்ய ஜவுளி வாங்கப் போய் வர ஆட்டோ ஏற்பாடு, பட்டாசு, போஸ்டர், மேளம், ஒயிலாட்டம், ஒப்பாரி ஏற்பாடு, இறுதி ஊர்வல ஏற்பாடு, மயான ஏற்பாடு...இன்னும் இன்னும்...

போனில் நண்பனிடம் பேசினான் கார்த்திக்...டே மச்சி...கல்யாண வீடு மாதிரியே சாவு வீட்டில் கூட எவ்ள வேலைடா...பேசாம நாம இதுக்காக ஒரு காண்டிராக்டிங் சர்வீஸ் ஆரம்பிச்சுரலாம்...சேவை செஞ்ச புண்ணியமும் சேரும்...வேலை கிடச்ச மாதிரியும் இருக்கும்..
மச்சி..சிரிக்காதடா..சீரியஸாச் சொல்றேன்..

**********

உலகக் கோப்பை கிரிக்கெட் பிரியர்கள் வேறு..அவ்வப்போது போனில் ஸ்கோர் கேட்டார்கள் ஆரம்பத்தில்..பின் மெதுவாக ராஜேஷிடம் சொல்லி டிவியைத் தோட்டத்துப் பக்கம் கொண்டுவரச்செய்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள்...நடுநடுவில் கூட்டணிக் களேபரத்துக் குளறுபடிச் செய்திகள் வேறு...அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற அலசல்கள், உரசல்கள் வேறு..

அய்யோ...கோபி, மகாவுக்கு ராமேஸ்வரத்தில் கல்யாணம் ஆச்சோ இல்லியோ தெரியலியே...ஒரே கலாட்டாவா இருந்துச்சு...ஒரு மனைவி அங்கலாய்க்க..

கணவன் அப்பாவியாய்ச் சொன்னான்........போன் போட்டுக் கேட்க வேண்டியதுதானே..

அய்யோ..அய்யோ...இது நாதஸ்வரம் சீரியல் கோபி, மகா...உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது..

ரொம்ப அவசியம்...

ஆமா எவனோ எவனோடயோ ஆடறான்...இந்தியா கூட இல்ல...உங்களுக்கு மட்டும் சாவு வீட்லயும் கிரிக்கெட்டும், அரசியலும் கேக்குதோ...ஒரு நிமிஷம் சானல் மாத்தி வச்சா என்ன குறஞ்சா போய்டுவீங்க...

************

வீட்டுக்குள்ள இருக்க முடியல...என்னதான் ஐஸ் பொட்டின்னாலும் சரியா வராது போலிருக்கு...ஏதோ வாசனை வர மாதிரி இருக்கு..இந்தக் கண்ணன் எப்போதான் வரப்போறானோ..

பிள்ளைகள் தனியா விட்டுட்டு வந்திருக்கேன்....

ஆபிசில் ஆடிட் நடக்குது...லீவு போட முடியாது..
பெரியப்பா பிள்ளை கல்யாணத்துக்குப் போகணும்..

காரியத்தவாது பத்து பதினைஞ்சு நாள்னு நீட்டிட்டுப் போகாம உடனே சட்டுப் புட்டுன்னு முடிச்சா நல்லாருக்கும்..அதுக்கு வேற லீவு போட்டுட்டு இவ்ள தூரம் வர முடியாது...

சான்ஸே இல்ல..காரியத்துக்குத்தும் சேத்துதான் இங்க உக்காந்தாச்சே...காரியத்துக்கு வேற எங்க வர்றது..

இப்படி அவரவர் வேலை அவரவர்க்கு...

************
இரண்டாம் நாள் இரவு வந்து சேர்ந்தான் கலிஃபோர்னியாக் கண்ணன்...

ஆமா...அவன் மட்டும் வந்திருக்கான்..பொண்டாட்டி பிள்ளைகளைக் காணோம்...

பிள்ளைகளுக்குப் பரீட்சை...அவளுக்கு லீவு கிடைக்கலியாம்..போன மாசம்தான் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டுப் போயிருக்கா...

*************

ஒரு வழியாக ராமநாதன் இறந்து ஐம்பத்தைந்து மணிநேரங்கள் கடந்த நிலையில் இறுதிக்காரியங்கள் நடந்தேறின. நெஞ்சு வலியால் ஒரு முறை செத்த அவர், சூழ்நிலைகளால் மீண்டும் மீண்டும் சாகடிக்கப்பட்டார்.

கண்ணன் கிளம்பும்போது அம்மா சொன்னாள்: நான்லாம் செத்தா உடனே எல்லாத்தையும் முடிச்சுடுங்கடா....அவங்க அவங்க சவுகரியத்துக்குப் பதினோராம் நாள் காரியத்துக்கு வந்தால் போதும்....யாருக்கும் கஷ்டம் வேணாம்..

Monday, February 28, 2011

தேர்தல் தேர்வு

கொள்கை மறந்த
கொள்ளை
கூட்டுச்சதி மறந்த
கூட்டணிச்சதி...

மக்கள்நலம் மறந்த
பணநலம்
நியாய அநியாயம் மறந்த
லஞ்சலாவண்யம்...

இனப்படுகொலை மறந்த
மனப்படுகொலை
மொழிமாண்பு மறந்த
மாண்புமிகுக்கள்.....

நாளைய, நேற்றைய தவறுகள் மறந்த
இன்றைய நேசமணிகள்
கழகக் கலகங்களை மறந்த
கண்மணிகள்...

உடன்பட மறந்த
உடன்பிறப்புகள்
இரக்கம் மறந்த
இரத்தத்தின் இரத்தங்கள்...

தேர்தல் களங்களில்
தேர்வுகள் ஆரம்பம்!

வெற்றி பெற்றதும்
ஆட்சியமைப்பு!
கூட்டணி தேராவிட்டால்
ஆட்சிக்கலைப்பு!
குதிரைபேரத்தில் குளிர்காய்ந்து
மீண்டும் கைகோர்ப்பு!

தேர்தல் களங்களில்
தேர்வுகள் ஆரம்பம்!

இக்கழகமோ...
அக்கழகமோ...
அமோகமாய் வெற்றிதான்!

இதற்கு அது பரவாயில்லை!
அதற்கு இது பரவாயில்லை!
பாழாய்ப்போன நம்பிக்கையில்
மறுபடியும் மறுபடியும்
மறுதேர்வு எழுதினாலும்
பொதுமக்களுக்கு மட்டும்
பாரம்பரியத் தோல்விதான்!

Monday, January 24, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்


'பொன்னியின் செல்வன்' கனவுகள்

பலரின் நீண்ட நாள் கனவு 'பொன்னியின் செல்வன்' நிகழ்வுகளைத் திரையில் காண வேண்டுமென்பது. மக்கள் தொலைக்காட்சியும் இதற்கான நடிகர் தேர்வுக்கான அறிவுப்புகளை அளித்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரும் இப்படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. சங்கர் இயக்குவதாக ஒரு செய்தி சொல்ல, மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

கமல், ரஜினி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்காகவே காத்திருக்கின்ற பலருள் நானும் ஒருத்தி. பலரின் கனவு கைகூடி வரும் வேளையில், சில பயங்களும் எழாமல் இல்லை. நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அன்றிலிருந்து ஜெமினி, எம்.ஜி.ஆர், கமல் மற்றும் பலரும் செய்ய நினைத்துக் கைவிட்ட முயற்சி, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், தொழில்நுட்பரீதியாக பலவகை முன்னேற்றங்கள் உள்ள இக்கால கட்டத்தில் எளிதாகவே இருக்கும்.

பாத்திரங்களின் தேர்வு, காட்சி திரைக்கதை அமைப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் சவாலாய் அமையப் போகும் இப்பணி. அவரவர் தனிப்பட்ட கருத்தை, பாணியைத் திணிக்காமல் புத்தக அழகு சற்றும் குறையாமல் கால அவகாசம் சரிவர எடுத்துக் கொண்டு செய்வார்களேயானால்...என்னை போன்ற பலரின் கனவுகள் அழகாய் மெய்ப்பட வாய்ப்புண்டு.

நீயா நானா....இது தகுமா தகுமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும் இவர்கள் திருந்துகின்ற வழியாய்த் தெரியவில்லை. நல்ல நல்ல செய்திகளைத் தரும் நிகழ்ச்சிகள் கூட மூன்றாம் தரத்துக்கு இறங்கிப் போகின்ற கொடுமை.....தாங்கவில்லை.

நீயா நானா...நல்லதொரு நிகழ்ச்சி(இனிமேல் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை.)  பிரபலமாவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும், சுவாரசியம்(?!) சேர்ப்பதற்கும் சில காட்சிகளைத் திட்டமிட்டு, ஒத்திகையுடன் சித்தரித்து அரங்கேற்றுவதாகக் கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் அதையெல்லாம் மீறி ஆக்கப்பூர்வமான வாக்குவாதங்கள் வாயிலாக நல்ல செய்திகளையும் பல நேரங்களில் நமக்குத் தந்துள்ளது இந்நிகழ்ச்சி.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கணவன் - மனைவி விவாதம் என்ற பெயரில் அடித்த கூத்தை என்ன வார்த்தைகளால் விமர்சிப்பது என்றே புரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாது, கர்னாடக சங்கீதம் ரசிக்கத் தெரியாது, சமையலை ரசித்துச் சப்பிடத் தெரியாது...என்று வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட பாங்கு, போனால் போகிறதென்று மன்னிப்பும் கேட்டு...அடா அடா .....

இவர்களால் எப்படி இது முடிகிறது? இவர்கள் பெற்றோர், உறவினர், பிள்ளைகள், சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதர்கள் என்று அனைவரும் பார்ப்பார்கள் என்ற உணர்வு கொஞ்சம் கூட இன்றி....நாராசம்!

இவர்கள்  பெற்றெடுத்த பிள்ளைகளை எங்ஙனம் வழிநடத்தப் போகிறார்கள்?

Monday, February 11, 2008

அவன் இவன் என்ற ஏக வசனம்

"டேய்..டெண்டுல்கர் 44 அடிச்சிருக்காண்டா.."

"விஜய் சூப்பரா நடிச்சிருக்காண்டா.."

"நமீதா நல்லா ஆடிருக்காடா.."

ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்ற போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவர் மகள் "இந்த சத்யராஜ் படமே வேஸ்ட்...ஏம்ப்பா இவன் படத்தைப் போடுறீங்க.."அவள் அப்பா தேமே என்று சானல் மாற்றினார்.

செய்திகள் வந்தது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். "இந்தம்மா வந்துருச்சா...ஏதாவது கலைஞர் பத்திப் பேசும் இப்போ..இவளுக்கு வேறு என்ன வேலை?" என்றாள் அக்குழந்தை.

கலைஞர் பேசிக் கொண்டிருக்க.."அய்யோ இவன் வந்துட்டானா.." என்றது மறுபடியும். நண்பருக்கு வந்ததே கோபம். "பெரியவங்களை அப்படி மரியதையில்லாமப் பேசக் கூடாது" என்றார்.

அப்போது யோசித்தேன்..இதே தவறுகளை நானும் செய்து வந்திருக்கிறேன். இன்னும் செய்தும் வருகிறேன். சில நேரங்களில் இதற்காக என்னைத் திருத்திய என் பெற்றோர், என் கணவர், இன்னும் பலரும் இது போல் பேசுகிறோம்.

முக்கிய பிரமுகர்களைக் குறிப்பிட்டுப் பேசும் போது இது இயல்பாகிப் போகிறது நம்மில் பலருக்கு. நம் மனதுக்குப் பிடிக்காதவர்களை மட்டுமல்ல..நம் மனதுக்கும் மிகவும் பிடித்தவர்களையும், வயதில் பெரியவர்களையும் இப்படி ஏக வசனத்தில்தான் அழைத்து வருகிறோம்.

சில சமயம் என் மகளை இதற்காகத் திருத்தும் நான், இன்னும் இப்படித்தான் பேசுகிறேன். இந்த விஷயத்தில் எழுதும் போது இருக்கும் மரியாதைப் பண்பாடு பேசும் போது இல்லாமல் போய்விடுகிறது.

சொற்குற்றம், பொருட்குற்றம் செய்தால் பரவாயில்லை என்று கவிஞர்களுக்கு ஒரு விதிவிலக்கு (Poetic License) உள்ளது போல் இது வி.ஐ.பி. விளிப்பில் விதிவிலக்குதான்.

தெரிந்தே செய்யும் தவறுகளுள் இதுவும் ஒன்று.

இப்படி விளிக்காத விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.

Wednesday, January 9, 2008

எது கலாசாரம்?

சமீபத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சில கலவரங்களில் முடிந்தன. சில நிகழ்வுகள் சில கேள்விகள் கேட்க வைத்தன. இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்பதற்குச் சரியான விளக்கமோ, அளவுகோலோ தனியாக விதிக்க முடியாத நிலைமைதான்.அவரவர்க்கு எது சௌகரியமோ,எது பிடிக்குமோ அதுவே கலாசாரம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கம் சொன்னாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது இதன் விளக்கம்.

கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக..

சில ஆண்கள்: கேளிக்கைகள் என்ற பெயரில் அத்துமீறல் என்பது எங்கள் கலாசாரம்.

சில பெண்கள்: யாரை எப்படிப் பாதித்தாலும் சரி, நாங்களே பாதிப்புக்குள்ளானாலும் சரி..
எங்கள் விருப்பத்திற்கேற்ப, விருந்துக்கேற்ப ஆடை அணிந்து கலாசாரம் காப்போம்.

சில பெற்றோர்: புது வருடக் கேளிக்கைக்குப் போக வேண்டும் என்று மகள்/மகன் சொன்னால் அனுப்பி வைப்பதும்,அசம்பாவிதம் நடக்கும் போது விடுதி நிர்வாகத்தை மட்டுமே சாடுவதும் எங்கள் கலாசாரம்.

சில வாரிசுகள்: விருந்துக்குப் போவதற்குக் கணக்கில்லாமல் பொய் சொல்லிச் சென்று அப்பாவிப் பெற்றோரை முட்டாளாக்குவது எங்கள் கலாசாரம்.

சில மனைவிகள்: கணவனே கண்கண்ட தெய்வம்..அவர்கள் கூப்பிட்டால் விருந்து என்றாலும் மருந்து என்றாலும் சரியென்று சொல்வதுதான் எங்கள் கலாசாரம்.

சில கணவன்கள்: கோவிலோ, திரையரங்கோ.. எங்கே போனாலும் பெண்களுக்குப் ப்ரச்னைதான்..அதற்குப் பயந்து விருந்துகளைப் புறக்கணிக்க முடியுமா? எதற்கும் துணிந்து நிற்பதுதான் எங்கள் கலாசாரம்.

மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்: மக்கள் கூட்டம் புத்தாண்டிற்கு அலை மோதியது. அவர்களுக்காகவே நடைசாத்தாமல் தொடர்ந்து திறந்து வைத்திருந்து காலம் காலமாகப் பாவித்து வந்த நடைமுறைகளைச் சற்றே மீறியது எங்கள் கலாசாரம். தேவைப்படின் இந்தச் சேவை கூட்ட நாட்கள் அனைத்திலும் தொடரும். ஏன், 24 மணி நேர தரிசனத்துக்கும், ஷிப்ட் முறையில் பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். காசு பண்ணுவதற்காக அல்ல. கலாசாரம் காப்பதற்காக!!!

இன்னும் சில கோவில்கள்: வழக்கமாகச் செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல் காசு கொடுத்தால் கடவுள் தரிசனம் என்று புதுமையிலும் புதுமை செய்து, சிறப்பு வழிபாடுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்வது எங்கள் புதிய கலாசாரம்.

சில பக்தர்கள்: காசும் காலமும் விரயம் செய்தாவது புத்தாண்டில் கடவுள் தரிசனத்தில் புண்ணியம் தேடுவது எங்கள் கலாசாரம். தமிழ்ப்புத்தாண்டு, சைனீஸ் புத்தாண்டு எல்லாமே சமமாகப் பாவித்துக் கொண்டாடுவது இன்னும் புண்ணியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்..காலத்தினால், அவரவர் வசதிக்காய் மாறுவதுதான், மாற்றப்படுவதுதான் கலாசாரம். அடுத்தவர்களையோ ஏன் தங்களையே பாதிக்காத கலாசாரத்தைப் பின்பற்றுவது பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

(பி.கு: கலாசாரம்? கலாச்சாரம்? எது சரியென்று ஒரு விவாதம் வந்து கலாசாரம் என்று சில நண்பர்கள் திருத்தினார்கள். எது சரியென்று சரிவர விளக்கம் யாரேனும் தருவீர்களா?)

Wednesday, November 28, 2007

கண்ணியம் காப்பாய் பெண்ணியமே

"அச்சம், மடம், நாணம் எல்லாம் மிச்சம் மீதி ஏதுமின்றி
எச்சில் போலத் துப்பிப் போடடி....."

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏதோவொரு தொடரின் (புதுமைப்பெண்கள்?) பாடல் இப்படிப் ஒலிக்கிறது..

பெண் விடுதலை, பெண்ணியம் என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம்...பள்ளி போகாத நிலை, பால்ய விவாகம், சதி,விதவையாகி வீட்டில் முடக்கம், பெற்றோர் காட்டும் ஆண் பெண் குழந்தை பாரபட்சம், முதலிய கொடுமைகள் காலம் காலமாகப்பெண்களுக்கெதிராக நடைபெற்று வந்தன. அதெல்லாம் மாறி இன்றைய நிலையில் குறிப்பிடும் அளவு முன்னேறி இருக்கிறோம்.

சமுதாயத்தில் பெண்கள் நிலையைப் பொருளாதார அடிப்படையில் 3 விதமாகப் பிரிக்கலாம்..இதில் மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள்,மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள், அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்...இதில் 3 ஆவது ரகத்தைத் தவிர(அவர்களுக்குத்தான்
விடிவு காலம் என்று வருமோ தெரியவில்லை) மற்ற பெண்கள் எல்லாம் அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலும் விடுபட்டவர்கள்தான்...விதிவிலக்குகளும் உண்டு..ஆனால் விழுக்காடு குறைவுதான்..

பெற்றோரால், கூடப் பிறந்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, பின் கணவன் வீட்டாரால் புரிந்து கொள்ளப்பட்டு...இப்படிப் போகிறது பயணம்..ஆணுக்கும் இப்படித்தான்..ஆனால் சமுதாய மற்றும் உடற்கூறு அமைப்புகளால் ஆணுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டு
அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. பெண்களும் தங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? உலகத்தரத்தில் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் நம் இந்தியாவின் பெருமை என்னவாகும்?

காலம் காலமாக வழங்கி வரும் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் உடைந்து கொண்டுவருகின்றன..சம்பிரதாயங்கள் உடைந்தாலும் பண்பாடு பாக்கியிருக்கிறது...
உடைத்துவிட்டு நியாயமாக நடப்பது என்பது தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தது..கற்பு நெறி
இருவருக்கும் பொதுவில் வை என்று நாம் யாரைக் கேட்க முடியும் பாரதியைப் போல?
அடிமைக் காலத்தில் எழுந்த பொதுவான கேள்வி அது..இன்று தனி மனிதக் குடும்பங்களில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஒழுக்க நெறியால் விடை காணக்கூடிய கேள்வி...

தேசம், மொழி இவற்றை அன்னை என்னும் நாம் பெண்மைக்கென்று சமுதாயக் கட்டுப்பாட்டுக்காக சில அடையாளங்களை விட்டு வைத்துள்ளோம். ஆண், பெண் தனி இருக்கைகள், பொது இடங்களில் இருவரின் பழக்கவழக்கங்கள்....உடைகள் முதலியன..இவற்றில்
பெரும்பாலானவை மீறப்பட்டுள்ளன...நாகரிகமாக, பிறர் முகம் சுளிக்காவண்ணம் மீறப்பட்டுள்ளன..(மறுபடியும் சொல்கிறேன்..விதிவிலக்குகள் உண்டு..விழுக்காடு நம் நாட்டில் குறைவுதான்..)

பெண்ணியம், பெண் விடுதலை என்று என்னதான் பேசினாலும் இது போன்ற பாடல்கள் முகம் சுளிக்க வைக்கின்றன அநேகம் பெண்களை..அதுவும் என்னைப் போன்ற விடலைப் பருவத்தில் மகள் உள்ள தாய்களை..

நியாயமான சுதந்திரம் கிடைக்காத இடத்தில் போராடிப் பெற வேண்டியதுதான் புதுமைப்பெண்ணின் கடமை..இது போலப் பாடிக் கொண்டிருப்பதல்ல..

பாடிய கவிஞர் ஆண்தானே என்ற வாதத்துக்குச் சத்தியமாக நான் வரவில்லை..

ஆரோக்கிய, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் நம் தற்போதையத் தேவை. தனி மனித வாழ்வின் நெறியே மெல்ல மெல்ல சமுதாய நெறியாக மாறும் என்பது
வரலாறு உரைக்கும் உண்மை.

Friday, November 23, 2007

முடமாக்கும் மூடநம்பிக்கைதான் பேய்

முருங்கை மரத்துல பேய், வீட்டில் பேய், காட்டில் பேய், மரம் வெட்ட முடியவில்லை, ஏதோ தடுக்கிறது, கட்டிய பாலம் இடிகிறது..ஏதோ தடுக்கிறது...இன்னும் எத்தனை எத்தனை கதைகள், வதந்திகள் இந்த அறிவியல் உலகில் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்...

இதற்கெல்லாம் சற்று மேலே போய் சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளியில் பேய் உலாவுகிறது, பக்கத்திலுள்ள சுனாமிக் குடியிருப்பில் பேய் உலாவுகிறது (அதுவும் சுனாமி ஏற்பட்டு இவ்வளவு காலம் கழித்து..) என்று கதை கட்டியிருக்கிறார்கள்... மற்ற கதைகளை எல்லாம் ஓரங்கட்டி முன்னால் நிற்கும் முட்டாள்தனம்...அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியை சொல்கிறார்...கதவு அடிக்கிறதாம், சன்னல் அடிக்கிறதாம்...திறந்து பார்த்தால் யாரும் இல்லையாம்...என்னத்த சொல்றது போங்க..

பள்ளிக்குத் தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது...திரும்பவும் திறக்கும் போது எத்தனை மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கப்போகிறார்களோ..எத்தனை பேர் பயந்து கொண்டே வரப்போகிறார்களோ..பாவம் அந்தக் குழந்தைகள்..என்னதான் வதந்தி உண்மையில்லை என்று கூறினாலும் எத்தனை பேர் இதை நம்பப் போகிறார்கள்?

"வேப்பமர உச்சியில் நின்று பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே..."

என்று கூறவேண்டியவர்களே பயந்து போனால் மாணவர்கள் நிலைதான் என்ன?

முன்னேற்றத்தை முடமாக்கும் மூடநம்பிக்கைதான் விரட்ட வேண்டிய பேய் என்று உணர இன்னும் எவ்வளவு காலந்தான் ஆகும்?