Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Monday, March 5, 2012

ராட்சதப் பூ








ராட்சதப் பூ

உன்னுடனான
என்
பிணக்குகளினால்
ராட்சதப் பூவாய்
மலர்ந்தெழுந்த
கோப மணம்தான்
என்னமாய்க் கமழ்கிறது!


Tuesday, January 31, 2012

உயிரின் ஏழாவது சுவை


உயிரின் எந்த உணர்வும்
உணர்வின் எந்தக் கோணமும்
கோணத்தின் எந்தக் கூர்ப்பும்
கூர்ப்பின் எந்தக் கீறலும்
கீறலின் எந்த வலியும்
வலியின் எந்தத் துளியும்
துளியின்   எந்தச் சுகந்தமும்
சுகந்தத்தின் எந்த நுகர்வும்
நுகர்வின் எந்தப் பகிர்வும்
பகிர்வின்  எந்தச் சுவையும்.....

அந்தாதியாய்
என்றென்றும் தொடரும்
உயிரின் ஏழாவது சுவை
காதல்...

Sunday, December 11, 2011

சொல் மயக்கம்

வான வில்லின்
வண்ணங்கள் 
வகைபிரியும்
ஏதோவோர் இழை

நீலக்கடலும்
நீலவானும்
நீளச் சந்திக்கும் கோட்டின்
ஏதோவொரு புள்ளி

முதல் அலையை
முன்னேறும் அலை
முத்தமிட்டுச் செல்லும்
ஏதோவொரு துளி

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வெடித்துச் சிதறும்
காதல் பூகம்பத்தின்
ஏதோவொரு துகள்

அனுபவங்களால் மட்டுமே
நுகரப்படுவதாய்...
புலன்களுகெல்லாம்
புலப்படாத புதிராய்..

சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.

Monday, August 1, 2011

கல்மலைச் சுவடுகள்



இல்லறக் கனவுகள்
உன்னோடு மரிக்க
வீட்டு உறவுகள்
என்னோடு வசிக்க

பெண்பிள்ளையை உன் பெயரில் விளிக்க
கொண்டவளுடன் வாழ்க்கையது நடக்க

நம் காதல் பேசிய இடங்களுக்கு
என் குடும்பத்துடன் போகையில்

சோலைகள் கதை சொல்லிட
கோவில்தூண்கள் கோபம் கொண்டிட
பேருந்து இருக்கைகள் இழப்பை இகழ்ந்திட
திரையரங்குகள் தீண்டல்கள் பேசிட...

அலைமணல் சுவடுகளாய்
அழிந்தே போயின
என்றெண்ணிய நினைவுகள்

மீண்டு வந்தன
மீண்டும் வந்தன
காலத்தால் அழியாத
கல்மலைச் சுவடுகளாய்..

'நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்'
என்றவளே!

இச்சுவடுகள்
மீட்டெடுத்த சுமைகள்
யாரிடம் பேசுவேன்?

உனக்கென்று ஒரு கணவன்
எனக்கென்று ஒரு மனைவி
என்றான பின்..

நீ அன்று
பேச நினைத்ததைப்
பேச முடியாதவன்..
நீ இன்று
பேசாதது கூடப்
பேசுகின்றேன்..

எங்கேயோ இருக்கும்
நீயும் கூட
நான் பேசுவதைத்தான்
நினைக்கின்றாயோ?

Sunday, June 26, 2011

ஊடலாடல்




மலர மறுத்து
இதழ்களை
இறுக்கி
இழுத்துப் பிடிக்கும்
பூவுக்கும்
புயலின் வேகம்..

மலர மறுக்கும்
இதழ்க் கதவுகளைத்
தட்டித் திறக்க
முட்டி மோதும்
தென்றலுக்கும்
புயலின் வேகம்..

ஆணவங்களுக்குள்
அவசர மோதல்;
அகம்பாவங்களுக்குள்
அளவற்ற அளவளாவல்;

ஊடலாடும் பொழுதுகள்..

கத்தியின்றி
இரத்தமின்றி
சத்தமின்றி
முத்தமின்றி
நடந்தேறும் ஒரு
தற்காலிகத்
தனியுத்தம்;

வென்றவர் தோற்றிட
தோற்றவர் வென்றிட..
அதிசய யுத்தம்;

காதல் உணர்வுகள்
ஊசலாடும் உள்ளங்கள்
ஊடலாடும் பொழுதுகள்
உன்னதமானவை;

வாழ்க்கைப் பூவுக்கு
வாசம் தரும்
சுவாசம் தரும்
காதல் வேர்கள்..

காதல் வேருக்கும்
வாசம் தந்து
ஆழமாய் அழுத்திப்பிடிக்கும்
ஊடல் பூக்கள்..

Monday, December 20, 2010

காதல் கொள்!

நிகழ்வுகள்
கிடுக்கிப்பிடியில்
கழுத்தை நெரிக்கும்.

காதல் கொள்.
அது
கழுத்து நீவிக்
கவலைகள் சுத்திகரிக்கும்.

உணர்வுகள்
உடலெங்கும்
ஊசிகள் குத்தும்.

காதல் கொள்.
அது
ஊசிகள் பிடுங்கி
உபாதைகள் நீக்கும்.

குழப்பங்கள்
கடலில் அலையெனச்
சுழன்று தொடரும்.

காதல் கொள்.
அது
எதிர்நீச்சல்
கற்றுக் கொடுக்கும்.

வாழ்வில்
வெற்றி கொள்ள..
வாழ்வை
வெற்றி கொள்ள...

காதல் கொள்.

Friday, June 18, 2010

ஒற்றைச் சிவப்பு ரோஜா


நந்தவனச் சோலையில்
பதமான சூழலில்
இதமான நறுமணத்துடன்
வானவில் நிறத்துடன்
ஆயிரமாயிரமாய்ப்
பூத்து நிற்கும்
ரோஜாக்கூட்டமாய் உறவுகள்..

பாலைவனச் சோலையில்
பதப்படுத்தப்பட்ட சூழலில்
மிதமான மணத்துடன்
சிவப்பு நிறத்துடன்
தனிமையில்
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்க் காதல்...

Tuesday, May 4, 2010

இன்னுமோர் உலக அதிசயம்!

வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...

மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...

சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...

நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...

ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....

இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!

Tuesday, March 30, 2010

சரிக்குச் சரி

முள்ளானலும்
மலரானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் பாதையில்
மட்டுமே
சாத்தியமாகின்ற
விந்தை.

அடிகளானாலும்
முத்தங்களானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் போதையில்
மட்டுமே
சத்தியமாகின்ற
வித்தை.

Thursday, July 9, 2009

உவமை உருவகம்


காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்.

Friday, June 19, 2009

காதல் குழல்



வேய்ங்குழலின்

சிறுதுளையில்

நாபிக் காற்றின்

உயிர்த்துளிகள்

விரவி நிற்க

மெல்ல எழும்

இசையின் குரலில்

நம் காதல்.