Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, July 12, 2013

வார்த்தைகள்

 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
என்னைச் சுற்றிலும் வார்த்தைகள்.
 
 
என்னில் அவை வளர்கின்றன
இலைகளைப் போலவே.
 
 
உள்ளிருந்து
மெல்ல மெல்ல வளரும்
அந்த வார்த்தைகள்
வளர்வது நிறுத்தும்
என்று
எனக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால்,
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்.
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
அவற்றிடம் சற்றுக்
கவனத்துடனும்
எச்சரிக்கையுடனும்
இருந்தாக வேண்டும்.
 
 
அவை...
 
 
பலதரப்பட்ட
விஷயங்களாக
இருக்கக்கூடும்.
 

ஓடுகின்ற கால்கள்
சற்றே இளைப்பாறும்
அகன்ற வெளிகளாய்
இருக்கக்கூடும்.
 
 
உறைந்து நிற்கும்
கடல் அலைகளாய்க்
காட்சி தரக்கூடும்.

 
எரிசூட்டுக் காற்றின்
மிகப்பெரிய வீச்சாய்
வெடிக்கக்கூடும்.
 
 
உன்னுடைய
உயிர்த்தோழமையின் கழுத்தை
மனமுவந்து அறுக்கும்
கத்தியாய் இருக்கக்கூடும்.
 
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
ஆனாலும் அவை
மரத்தில் வளர்கின்ற
இலைகள் போல
என்மீது வளர்கின்றன.
 
 
மௌனத்திலிருந்தும்
உள்ளே எங்கேயோ
இனம்புரியாத ஆழத்திலிருந்தும்
முளைத்துக் கிளைத்து வளர்வதை
அவை
நிறுத்துவதாகத் தோன்றவில்லை.
 
 
ஆங்கில மூலம்: Words, Kamala Das
 
அதீதம் இதழில் வெளிவந்தது.

Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Tuesday, October 9, 2012

மனவறைச் சுத்தம்

மனவறைச் சுத்தம் - 1

சுருட்டிய கூந்தல்
உடைந்திட்ட கேசகவ்வி
ஜோடியற்ற ஒற்றைத்தோடு
காலியான வாசனை திரவியக் குப்பி
வீண் பொருட்கள்
அலங்கார மேசையில்..


எழுதாத பேனா
உதவாத கசங்கிய காகிதம்
உலர் பசை
எழுதிமுடித்த கவிதையின்
ஒத்திகை வரைவுகள்
வீண் பொருட்கள்
எழுது மேசையில்..


களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..


பொறாமை பழியுணர்வு
என்றோ கேட்டதொரு வசவு
எங்கோ பார்த்ததொரு
வேண்டாத காட்சி
யாரோ கிளறிய
குப்பை நினைவு
சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..
பழையன களை(ழி)யும் முன்னே
மீண்டும் புதிய குப்பைகள்
மனவறை மருங்கினில்..

*********************

மனவறைச் சுத்தம் - 2

கழிவுநீர்த் துளையின்
அடைப்பானில்
பிடிவாதமாய் ஒட்டியிருக்கும்
கழிவுணவுப் பிசுக்குகள்போல்


மரிக்காமல் மனதில்
மேடை போட்டு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
கழிவுணர்வுத் துகள்கள்.


விதியே என்றிருந்தால்
வியாதிதான்.


அருவியென
அடித்து ஊற்றி
நல் நினைவுகள்
நீர்தெளிக்க
சடுதியில் கழுவப்படும்
மனவழுக்குகள்.


களைகள் களைந்து
கழுவியெடுக்கும்
அருவியதனுக்குப்
பலரும் சூட்டிடும்
பலப்பல பெயர்கள்.


அன்பு
உதவி
ஈகை
நம்பிக்கை
சம்சாரம்
சந்நியாசம்
பக்தி
ப்ரார்த்தனை
.................
.................
 

Thursday, September 20, 2012

உன் கண்களால் நீ தேடிடும் வேளையில்..

ஒரு மெக்ஸிகன் கவிதையின் தமிழாக்கம்
 
ஆங்கிலத் தலைப்பு:  When you search with your eyes
 
 
 
 
உன் கண்களால்
நீ தேடிடும் வேளையில்
ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்;
என் இதயத்துள்ளேயும் கூட
யாருமே இருக்க மாட்டார்கள்...
எந்தப்பாதை நான் தேர்ந்தெடுத்தேன்
எந்த இடத்தில் உன்னை மறந்தேன்
என்று சொல்வதற்கு.

உன் கண்களை நீ திறந்திடும்
அந்த நாளில் ஒருபோதும்
நான் இருந்திட மாட்டேன்;
வேறொரு வழித்தடத்தில்
நான் போயிருப்பேன்;
உன்னை மறந்திருப்பேன்.
என்னை நீ தேடும்
அந்த ஒரு நாளில் ஒருபோதும்
என்னை நீ காண மாட்டாய்.

என்னை நீ தேடுவாய்
வடக்கேயும் தெற்கேயும்;
சூரியன் பிறந்த இடத்தேயும்
சூரியன் மறைந்திடும் இடத்தேயும்.

பாதைகளின் கரங்கள்
குறுக்கும் நெடுக்குமாகப்
போகும் இடங்களில் எல்லாம்
என் பாதச்சுவடுகளைத்
தேடிப் பைத்தியமாய்
நீ அலைந்திடுவாய்.

யாருக்குத் தெரியும்?
எந்தக் காற்று கலைத்தது
எந்த மழை அழித்தது
அச்சுவடுகளை என்று....
 

மூலக்கவிதை: When you search with your eyes
எழுதியவர்: Victor de la Cruz
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: David Shook
 
அதீதம் இதழில் 28.07.12 அன்று வெளிவந்தது.

Monday, September 10, 2012

என்னை நான் வெளிப்படுத்துகிறேன்...

ஓர் அரேபியக் கவிதையின் தமிழாக்கம்: ஆங்கிலத் தலைப்பு: I Reveal Myself


நான்...


கடல்வழித் தாக்குதல் நிகழ்த்தும்
மாலுமிகளின் வம்சத்தவள்;
மாவீரன் சாம்சனையே*
வலுவிழக்கச் செய்து வீழ்த்திய
பெண் மகளின் வாரிசு;
அலைகளுக்கும் நினைவுகளுக்கும்
மகளாகி நிற்பவள்;
பழமையின் சேகரிப்பில்
புதியதாக முளைத்திட்டவள்;


நான்...


என் கைகளை  விரிக்கும் தருணத்தில்
இந்தப் பிரபஞ்சம் தொடங்கும்.
சிரிக்கையில் என் கன்னி இதழ்களில்
தேன் ததும்பி நிற்கும்.
எடுத்து வைக்கும் ஓர் அடியில்
இந்தப் புவியே
தன் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும்.


என் சிரிப்பினில்
பூகம்பம் எதிரொலிக்கும்.
எரிமலைகள் பூமியின் பரப்புகளில்
விசையுடன் பீறிட்டெழும்.


நான்...


அறிவின்மைக்கும் அடக்கத்துக்கும்
மகளாகப் பிறந்தவள்;
துன்மார்க்கத்துக்கும் தூய்மைக்கும்
மகளாகப் பிறந்தவள்;
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
வாரிசாகி நிற்பவள்;


என் விரல் நுனிகள்
நட்சத்திரங்களைத் தட்டிச் சென்று
அவற்றைத் தடம்புரளச் செய்யும்.

மூடிக் கொண்ட என் கண்களை
நான் திறந்திடும் பொழுது வரை
உலகெங்கும் வியாபித்து நிற்கும்
கிரகண இருட்டு;
என் கண்கள் திறந்திடும் பொழுதினிலோ
உலகையே குளிப்பாட்டி நிற்கும் தங்கத் தகதகப்பு.


என் கூந்தல் கற்றைகளைச் சற்றே சுழற்றி நான்
பின்புறம் தள்ளி விட...
என் பலம் கண்ட இந்தப் பிரபஞ்சம்
அச்சத்தால் நடுநடுங்கி நின்றிடும்.


இன்றையப் பொழுதும் நான் தான்
நாளையப் பொழுதும் நான் தான்
விண்வெளியின் அரியணையில்
முடிசூட்டிக் கொண்ட அரசியும் நான் தான்


ஒரு முறை நான் கண் இமைத்தால் போதும்;
வயல்கள் முழுவதும் பச்சையாய் நுரைத்தெழுந்து
கோதுமைப் பயிர்கள் நிறைத்து நிற்கும்.
கோதுமைப் பயிர்களும் நான் தான்.
பச்சை நிறமும் நான் தான்.
முதல் அறுவடையும் நான் தான்.
இறுதி அறுவடையும் நான் தான்.


குறிப்பு: சாம்சன் பைபிளில் வரும் ஒரு பாத்திரம். அதிக வீரம் கொண்டவனாகக் கடவுளால் படைக்கப்பட்டவன்.
மேலும் செய்திகளுக்கு: http://en.wikipedia.org/wiki/Samson

அரேபிய மொழியில் மூலக்கவிதை:  Fatena Al-Gharra
ஆங்கில மொழிபெயர்ப்பு: Fatena Al-Gharra


அதீதம் இதழில் 22.06.12 அன்று வெளிவந்தது.

Wednesday, July 18, 2012

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக

ஓர் உருதுக்கவிதையின் தமிழாக்கம்

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக.


உன்னிடம்
இறைஞ்சுகிறேன்.


ஒவ்வொரு பயணத்தின் போதும்
ஞாபகக்குறி ஒன்று
எடுத்து நீ வாருவாயாக.
களைத்துப் போய்விட்ட பாதங்களுடன்
பட்டாம்பூச்சியின் சிறகுகளையும்
எடுத்து நீ வருவாயாக.


உன்னுடனான தோழமை பற்றி
எழுதி வருகின்றேன் ஒரு கதை.
உனக்கு முடியுமானால்
நல்ல வார்த்தை ஒன்றை
எடுத்து நீ வருவாயாக.


நான் நம்புகின்றேன்.
நம் அன்பும் அது தரும் நம்பிக்கையும்
நம்மைக் களைத்து போகவிடாது.
நம்மால் முடியும்.
இந்தக் காதலைப்
புதுப்பித்துக் கொண்டே இருக்க .


தேவதைகளின் மாந்திரீக உலகுக்கு
நீ செல்ல நேரும்போது
நிலவொளிரும் அழகு முகமொன்றால்
நீ கவரப்பட்டால்
அதே போன்றதொரு முகம் செதுக்கி
எடுத்து நீ வருவாயாக.


பயணங்களில் உனக்கிருக்கும்
கட்டுக்கடங்காக் காதல்
உன்னை வீட்டிலிருந்து வெளியே
இழுத்துக் கொண்டுதான் செல்கிறது.


பயணப்பைகளில் சுமந்தே வரும்
தூசியது போலவே
வருத்தப் பட வைத்திடும்
எதையும் திரும்பவும்தான்
கொண்டு நீ வந்திடாதே.


வருத்தங்கள் சுமந்துவர நேரினும்
ஆத்மார்த்தமாகச் சுமந்தேதான்
எடுத்து நீ வருவாயாக


விசித்திரமான வேடிக்கையான
சூழல்கள் தன்னில்
வாழ்ந்துதான் வருகின்றோம்.
உன் பயணமது முடியும் தருணம்
காதலை நீ எழுதி வந்திருந்தால்
நனைந்த கண்களைத்தான்
எடுத்து நீ வருவாயாக.


உருது மொழியில் மூலக்கவிதை:  Noshi Gillani (பாகிஸ்தான் பெண் கவிஞர் )
ஆங்கில மொழிமாற்றம்: Noshi Gillani
ஆங்கில மொழிபெயர்ப்பு: Lavinia Greenlaw (லண்டன்)

அதீதம் மே, 2012 இதழில் வெளிவந்தது.

Monday, June 18, 2012

நிச்சலனமற்ற பொழுதுகளில்..

வரவு செலவுகள்
பார்த்தான பின்

இன்ப துன்பங்களில்
தோய்ந்தான பின்

களித்துக் களைத்து
ஓய்ந்தான பின்

மீதம் இருப்பது
நிச்சலனமற்ற
இன்றையப் பொழுதின்
இந்தக் கணம் மட்டுமே...

நிச்சலனமற்ற பொழுதுகளில்
கரைகின்ற வாழ்க்கை
சில சமயங்களில்
பிடித்துத்தான் போகிறது!

Friday, April 20, 2012

நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...

ஒரு ஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்

நான் பார்த்திருந்தேன்
என்னிலிருந்து மிகவும் தூரத்தில்
விண்மீன்களை.

நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்
அவற்றிலிருந்து எனக்கும்கூட
அதே தூரம்தான்.

கண்சிமிட்டிக் கடந்து போகும்
அவ்விண்மீன்கள்
கடந்து செல்லும்
காலமது போலவே.

நடு நிசிக்குப் பின்னான
மூன்றாம் ஜாமத்துப் பொழுது
இரவின் ஆழத்தினூடே
வேட்டையாடி விரட்டிச் செல்கிறது
விடியல்தனை.

முழுமையானதொரு தெளிவுக்கு
வரமுடியவில்லை என்னால்.

முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?

மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?
கனவுகளும்கூட நித்திரை குறித்த
வினாக்களைத்தான் வினவிடுமா
என்னைப் போலவே?

நான் நடந்தேன்
நீளமான மிகவும் நீளமான
நடை நடந்தேன்.

அப்போது நான் பார்த்தேன்.
நான் பார்த்த அந்தக்கணம்
எனக்கு மிக அருகில் விண்மீன்கள்.

இன்றைய பொழுது முழுவதும்
மழையது பொழிந்திட
உந்தன் முகத்திலிருந்து
கழுவப்பட்டுப்போயின வார்த்தைகள்.

அதீதம் ஏப்ரல் 09, 2012 இதழில் வெளிவந்தது...

ஹிந்திக் கவிதை

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर

और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !

क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में

दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को - देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से


After Midnight

I saw the stars far off -
as far as I from them:
in this moment I saw them -
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.

And I can't make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?

Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?

I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.


மூலம்: Theesra Pehar   Hindi poem by Mohan Rana
ஆங்கில மொழியாக்கம்: Lucy Rosensteinஆங்கிலக் கவிதையாக்கம்: After Midnight By Bernard O'Donoghue

Wednesday, April 4, 2012

தனித்த ஓர் இதயத்தின் கதவருகே...

1

நான் தனித்திருக்கவில்லை;
தனிமையை
என் நட்பாக்கிக் கொண்டிருக்கிறேன்.

2

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்..

அன்றாட உணவிலிட்ட
சிட்டிகை உப்பினில்;

குறுகிய
இரவதனில்;
குறுகிய பொழுதேனும்
நீ உடனிருக்கும் இரவதனில்;

குறுகிய கனவதனில்;
கனவின் தோள்களில்
ஆள்துயில் கொண்ட உன்னில்;

குறுகிய
உறக்கமதனில்;
உறக்கத்தின் கரைதனில்
நடைபயிலும் உன்னில்;

குழலதன்
கூரிய ஓசைக்கும்
ஆடுமாடுகள் கழுத்து மணியின்
கரகரப்பான ஓசைக்கும்
இடையே ஊஞ்சலாடியபடி..

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்.

3

நான் மட்டும்
ஒரே ஒருவனாய்
நின் ஒளிர்வைக்
கவனித்து வருகிறேன்.

சூரியனுக்காகவென
வாராந்திர விடுமுறையைக்
கடவுள் மட்டும் கொடுத்திருந்தால்..

அனைவரும்கூட
அறிந்திருப்பார்கள்
நீ எவ்வளவு ஒளிர்கிறாய் என்று.

4

வெற்றுச் சுவர்,
பழைய சுவர்,
வறட்சியாலும் களிமண்ணாலும்
கனமாக்கப்பட்ட இதயச்சுவர்.

இங்கே
உன் பெயரை
நீ எழுதிக் கொள்ளலாம்.

ஆனால்,
நகங்களால் மட்டும்
கீறி விடாதே.

5

அவன் அங்கங்களில்
கவனமாய் இருந்திடு.

உயர்தர நூல்வகையால்
அவனைத் தைத்திடு.

மடித்துத் தைத்திட்ட
விளிம்புப் பகுதிகளைக்
கிழிக்காமல் இருந்திடு.

அலைந்து திரியும்
அவன் நூல் இழைகளைச்
சேகரித்து வைத்திடு.

நீர் அவனைச்
சூழ்ந்திடும் போது
கொஞ்சம் நெருக்கிப் பிழிந்திடு.

வெறுமனே
ஒரு சட்டை
போலத் தோன்றினாலும்,
உண்மையில்
அவன் ஓர் இதயம் தானே.

6

சுதந்திர நாடுகளில்
பறந்திடும் கொடியது போல்
என் மனதுள் நீ
அசைந்தாடுகின்றாய்.

7

யாருடைய நெஞ்சில்
யார் சாய்ந்து அழுதாரோ?
நனைந்திட்ட சட்டை மட்டுமே
அறிந்திடும் விடைதன்னை.

At the Door of a Lonely Heart -  Arabic poem by: Abboud al Jabiri 
                                                       Translated by: Worod Musawi
1
I am not alone -
the truth is
I befriended my loneliness

2
He's satisfied with a pinch of salt on his daily bread
with a little of you at night
with a short night
with you asleep on dream's shoulder
with a brief dream
with you walking on sleep's shore
with a light sleep
that sways between the keening of the naiand the clanging of goat bells

3
If God gave the sun the weekend off
people would know how you shine all the time
even though I am the only one who notices

4
It is a blank wall,
an old wall -
a heart burdened by drought and clay:
write your name here,
but don't pierce it with nails

5
Be careful with his limbs:
mend him with fine yarn
and don't rip his hem,
gather up his stray threads,
and squeeze him gently
when he is wet -
even if he seems like just an old shirt,
really, he is a heart

6
Like a flag
flying in a free country
you are waving in my heart

7
Who wept on the breast of the other?
Only the wet shirt
knows the answer

ஓர் அரபுக்கவிதையின் மொழிபெயர்ப்பு தமிழின் தன்மைக்கேற்ப சிறு மாற்றங்களுடன்..-அதீதம் இதழில் 13.03.12 அன்று வெளியானது..

Wednesday, March 28, 2012

வெள்ளைச் சூரியன்

பார்த்துப் பார்த்து,
கேட்டுக் கேட்டு,
நுகர்ந்து நுகர்ந்து,
ஸ்பரிசித்து ஸ்பரிசித்து,
சுவைத்துச் சுவைத்து,
சலித்துக் களைத்து
இளைப்பாறத்துடிக்கும்
புலன்கள் போலவே

தீச்சிவப்பாய் எரிந்து
தங்கத்தகடாய்த் தகதகத்து
இளஞ்சிவப்பில் மினுமினுத்துக்
களைத்துப்போனதொரு மாலை
வெள்ளைச் சூரியன்.

புனரமைப்பு தேவைப்படுகிறது.
புலன்களுக்கும்
சூரியக்கோளுக்கும்.


(கத்தார் - சவூதி நெடுஞ்சாலைப் பயணமொன்றில் மறைந்துவிடத் துடித்த சூரியனை கார் கதவின் கண்ணாடி கூடத் திறக்க நேரமின்றி எடுத்த புகைப்படம்...)

Monday, March 19, 2012

வடிகால் இரவல்கள்



உறவாட
விளையாட
துணை தேட
பாசநேசம் பழக
காதல் பேச
ஊடலாட

உணர்வுகளுக்கு வடிகால்
இங்கு உயிர்களல்ல.
உயிரற்ற
உணர்வற்ற
பெட்டிகளாய்ப் பொருட்கள்.

தகவல் தொடர்புகள்
கூடத்
தமக்குத் தாமே.

இறைவனை தரிசிக்கவும்
இயற்கையை ரசிக்கவும்
இரவல் கண்களை
இறைஞ்சுகின்ற
இலகுவான தேடல்கள்.

தொழில்நுட்பங்கள்
மனநுட்பங்களை
மென்று தின்று
ஏப்பம் விட்டுப் போகின்றன.

வாழ்க்கைச் சூட்சுமங்கள்
வளைந்து கொடுத்துக் கொடுத்து
வலையில் வீழ்ந்து போகின்றன.

Wednesday, March 14, 2012

அலையின் விலை


ஆழ அளவறியா
ஆதியினின்று
பொங்கிப் பிரவகித்துப்
பிணங்கிப் பிளிறித்
திமிருடன் திமிறி
ஊழிக் கூத்தாடும்
ஆழியதன் அலை

வெயிற் காய்ந்து
மழை உறிஞ்சி
மோனத் தவமிருந்து
பொறுமை பொதிந்து,
காலத்தேயும்
காலந்தாழ்ந்திடினும்
பரந்து பாய்விரித்துச்
சோராது காத்திருக்கும்
மணல் முன்னே

மண்டியிட்டு மடிகிறது;
மணல் தந்த முத்தத்தில்
மீண்டு உயிர் பெறுகிறது.

கரையின் மணலுக்கு
விலையாகிப் போகிறது
கடலின் அலை.

ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.

Monday, March 5, 2012

ராட்சதப் பூ








ராட்சதப் பூ

உன்னுடனான
என்
பிணக்குகளினால்
ராட்சதப் பூவாய்
மலர்ந்தெழுந்த
கோப மணம்தான்
என்னமாய்க் கமழ்கிறது!


Sunday, March 4, 2012

திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும் - 'வல்லமை'யில்

வல்லமை மகளிர் வாரச் சிறப்பிதழில்...

ஓர் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்க முயற்சி..தமிழின் தன்மைக்கேற்ப, சில மாறுதல்களுடன்..

திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும்

திடமான பெண்
கட்டுடலை வடிவமைக்க
வளைந்து நெளிந்து
உடற்பயிற்சிகள் செய்வாள்;



பலமான பெண்
ஆழமான தன் உள்நோக்குடன்
ஆன்மாவை வடிவமைப்பாள்.



திடமான பெண்
எந்தவொன்றுக்கும்
அஞ்சுவதேயில்லை.



வலிமையான பெண்
பயம் சூழும் தருணங்களில்
மனவுறுதியில் நிலைத்திருக்கத்
தவறுவதேயில்லை.



திடமான பெண்
தன்னுள் சிறந்த
எந்தவொன்றையும்
பிறர் கொள்ள விடுவதில்லை;



வலிமையான பெண்
தன்னுள் சிறந்தவற்றை
அனைவருக்கும்
கொடுக்காமல் இருப்பதில்லை.



திடமான பெண்
தவறுகள் செய்வாள்;
வருங்காலத்தில்
அத்தவறுகள் தவிர்ப்பாள்.



வலிமையான பெண்
நேரும் தவறுகளையும்
வரங்களாய் உணர்ந்து
அவற்றின் பலங்களைச் சுவீகரிப்பாள்.



திடமான பெண்
உறுதியான

தன் கால்களால்
தானே அடியெடுத்து வைப்பாள்;



வலிமையான பெண்
உதவி கோரும் தருணங்களை
நன்கு உணர்ந்திருப்பாள்.



திடமான பெண்
தன் முகத்தில்
நம்பிக்கையின் சாயல்
அணிந்திருப்பாள்.



வலிமையான பெண்
தன் முகத்தில்
கருணையருளின் சாயல்
அணிந்திருப்பாள்:



திடமான பெண்
தன் பயணத்துக்கான பலம்
தன்னில் உள்ளதென
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.



வலிமையான பெண்
தன் பயணத்தில்தான்
தனக்கான பலம் கிடைக்கிறதென்று
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.


ஆங்கிலக் கவிதை:

A strong Woman Versus A Woman of Strength

A strong woman works out every day
to keep her body in shape
but a woman of strength looks deep inside
to keep her soul in shape

A strong woman isn't  afraid
of anything
but a woman of strength shows courage
in the midst  of her fear

A strong woman won't  let anyone
get the best of her
but a woman of strength gives the  best
of her to everyone

A strong woman makes  mistakes
and avoids the same in the future
but a woman of strength realizes life's mistakes
can also be blessings and capitalizes on them

A strong woman walks
sure footedly
but a woman of strength knows
when to ask for  help

A strong woman wears  the look
of confidence on her face
but a woman of strength
wears  grace

A strong woman has  faith
that she is strong enough for the journey
but a woman of strength  has faith
that it is in the journey that she will become  strong

Sunday, February 19, 2012

விளைகள நீரும் விண்புல நீரும்






நிறமிகள் குறுகி
இதழ் வறண்ட
வெளிர் ரோஜாவொன்று
பச்சையம் வேண்டி
இலையிடம் முறையிட

அடுப்பிலுறங்கும் பூனையை
விரட்டியடிக்கும் முகமாய்
ஒளிச்சேர்க்கை வேண்டி,
சூரியக் கோட்டினைப்
பற்றிக் கொண்டு
சர சரவென்று கீழிறங்கிய
இலையின் நரம்புகளுக்குச்
செவிமடுத்து

விளைகள வெளியில்
நீர் தேடித்
திசையெங்கும்
அஞ்ஞான வேர்கள்
படர்ந்து பரவிய
அதே வேளை..

விண்புல நிலவில்
நீர் தேடிச்
சீறிப் பாய்கின்றதொரு
விஞ்ஞான எறிகணை.

நிறமிகள் - pigments
பச்சையம் - chlorophyll
ஒளிச்சேர்க்கை - photosynthesis
எறிகணை - rocket

Tuesday, February 14, 2012

மிடாஸின் காதல் தொடுகை


Midas /மிடாஸ் : The most famous King Midas is popularly remembered in Greek mythology for his ability to turn everything he touched into gold. This came to be called the Golden touch, or the Midas touch.


கற்களை எடுத்து வீசுவாயோ
அமிலத்தை அள்ளித் தெளிப்பாயோ

என்னை உரசிச் செல்லும் அவ்வலித்துளிகள்
சட்டென்று மொட்டவிழ்ந்து மலர்கின்றன
வாசம் வழியும் மலர்களாய்...

பதப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவாயோ
நெஞ்சில் நிராகரிப்பை நிறைத்திருப்பாயோ

என்னைக் கடந்து செல்லும் அவ்வுணர்வுகள்
கவரி வீசிச் செல்லும் இதமான தென்றலாய்...

உன் எதிர் நடவடிக்கைகள் கடினமாய் இருக்குமோ
உன் இயல் நடவடிக்கைகள் கொடூரமாய் இருக்குமோ

என்னை  வருடிச் செல்லும் அத்தாக்குதல்கள்
உரு மாறுகின்றன இனிமையான முத்தங்களாய்...

நியாயமற்ற தண்டனைகள் உன்னிடமிருந்து கிடைக்குமோ
வார்த்தைகளற்ற உணர்வுகள் என் மனதில் தேங்குமோ

ஒன்றின் மேல் ஒன்றாய் அவை குவிந்து குவிந்து
பொதிந்து வைக்கப்படுகின்றன மதிப்பற்ற பொக்கிஷமாய்...

இதயம் நிறைந்த வெறுப்புதனை வெளிப்படுத்துவாயோ
பழ்வாங்கும் படலமாய் மௌனத்தை அனுசரிப்பாயோ

என்னைக் குத்திச் செல்லும் அவ்வலிகள்
மீண்டும் மீண்டும் மலர்ந்தெழுகின்றன
என்றென்றும் வாழ்ந்திருக்கும்
பசுமையான காதலாய்..

இந்த மாயப் பின்னல்
எங்ஙனம் மீட்டெடுக்கிறது
என் மனதின் தேக்கத்தை?!
மனம் சொருகி லயிக்கவைக்கும்
இந்தக் காதல் தாலாட்டுக்கு
என்னதான் ராகம்?!

உனக்குப் புரியவில்லையா
என் மிடாஸ்!

என்னை இயக்கிச் செல்லும்
என்றும் இயக்கிச் செல்லவிருக்கும்
என் மிடாஸ்!

உன் காதல் தொடுகை என்ற
வரம் வாய்க்கப்பெற்றிருக்கிறேன்!


என்னுடைய Rainbow Wings என்கிற வலைப்பூவில் உள்ள  Love Touch of my Midas என்ற கவிதையின் தமிழாக்க முயற்சி

Throw pieces of stone
Pour jars of acid

When they brush me
They bloom as fragrant flowers.

Brew anger
Rear rejection

When they fan me
They blow as gentle breeze..

React hard
Act violent

When they hit me
They turn to sweet kisses..

Unjust punishment I may get
Unspoken feelings I may store

When they pile up and up
They shape themselves as treasurable rewards..

Display heartful hatred
Vengeful silence

When they prick me
They flourish as everfresh eternal love...

What is this magical spell
That lures me out of depression
What is this magical tune
That lulls me with a love lullaby?

Don't you know my Midas?

I am blessed with
Love touch of my Midas..
Which keeps me going
Will keep me going..


Wednesday, February 8, 2012

பின்னோக்கி நகரும் நாட்கள்






சிம்னி விளக்கொளியில்
சிறுவரின் தேர்வுக்கான கல்வி
ஓயாமல் உழைத்த களைப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன
கணினி ஐபேட் இத்யாதிகள்


அம்மிக்கல் ஆட்டுரலில்
சிறப்புச் சமையல்
விசேடச் சலுகையில்
சிலாகிக்கின்றன
நாவின் சுவைமொட்டுகள்

பேட்டரி வானொலியில்
ஐயாக்கள் செய்திச்செவிமடுப்பு
தொடரின் ஓட்டத்துடன்
தொடர்ந்து ஓடிய
அம்மணிகள் பரிதவிப்பு

வறுமையின் வாசங்கள்
பழகிக் கொண்டு
மெல்லப் பின்னோக்கி 
நகர்ந்து செல்கின்றன
நம் நாட்கள்!

Tuesday, January 31, 2012

உயிரின் ஏழாவது சுவை


உயிரின் எந்த உணர்வும்
உணர்வின் எந்தக் கோணமும்
கோணத்தின் எந்தக் கூர்ப்பும்
கூர்ப்பின் எந்தக் கீறலும்
கீறலின் எந்த வலியும்
வலியின் எந்தத் துளியும்
துளியின்   எந்தச் சுகந்தமும்
சுகந்தத்தின் எந்த நுகர்வும்
நுகர்வின் எந்தப் பகிர்வும்
பகிர்வின்  எந்தச் சுவையும்.....

அந்தாதியாய்
என்றென்றும் தொடரும்
உயிரின் ஏழாவது சுவை
காதல்...

Sunday, December 11, 2011

சொல் மயக்கம்

வான வில்லின்
வண்ணங்கள் 
வகைபிரியும்
ஏதோவோர் இழை

நீலக்கடலும்
நீலவானும்
நீளச் சந்திக்கும் கோட்டின்
ஏதோவொரு புள்ளி

முதல் அலையை
முன்னேறும் அலை
முத்தமிட்டுச் செல்லும்
ஏதோவொரு துளி

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வெடித்துச் சிதறும்
காதல் பூகம்பத்தின்
ஏதோவொரு துகள்

அனுபவங்களால் மட்டுமே
நுகரப்படுவதாய்...
புலன்களுகெல்லாம்
புலப்படாத புதிராய்..

சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.

Wednesday, August 24, 2011

தங்க நிமிடங்கள்



காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்

குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்

உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்

வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....

சுகமோ சுகம்
இதமோ இதம்

குற்றாலச் சாரலில்
நனையும் தங்க நிமிடங்கள்..