Showing posts with label அர‌சிய‌ல். Show all posts
Showing posts with label அர‌சிய‌ல். Show all posts

Monday, February 18, 2008

பெண்களின் அரசியல் அறிவு

"இந்த ஆம்பளங்களுக்கு என்ன வேல..ரெண்டு பேரு கூடினாப் போதும்..அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க.."
"ஆரம்பிச்சுட்டீங்களா..செய்திகள் வந்தா சேனல் மாத்த மாட்டிங்களே..எந்தக் கட்சி வந்தா நமக்கு என்ன செய்யப் போறாங்க.."

பெண்கள் என்றாலே அரசியல் பேசமாட்டார்கள் என்பதுதான் நிலவரம். சமையல், சீரியல், நகை, சினிமா,குழ‌ந்தைப் ப‌ராம‌ரிப்பு, புத்தகம் என்று பல விஷயங்களிலும் பெண்கள் பெயர் இணைத்துப் பேசப்படுவது போல் அரசியலுடன் இணைத்துப் பேசப்படுவதில்லை.

இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் ஒரு வகையில் பெண்களாகவேதான் இருக்கின்றோம். வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துவதோடு நம் அரசியல் தொடர்பு நின்று போகிறது.(எத்தனை பெண்களை வீட்டில் உள்ள ஆண்கள் இதற்காகக் கூட வற்புறுத்த வேண்டிய நிலைமை உள்ளது தெரியுமா?) பெண்களின் அரசியல் அறிவுக்குத் தடைபோடும் சில ஆண்களும் ஒரு காரணம்தான்.

வீட்டின் சூழலும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது அறிவு, பாட‌ அறிவு இத‌னுட‌ன் சேர்த்து நாட்டு ந‌டப்பு ப‌ற்றியும் சிறு வ‌ய‌திலேயே அறிமுகமாகும் சூழலில் வ‌ள‌ர்த்த‌ பெண்க‌ளுக்கு அர‌சிய‌ல் அறிவும் சாதார‌ண‌ விஷ‌ய‌மாகி விடுகின்ற‌து. இன்னும் சில‌ வீடுக‌ளில் க‌ண‌வ‌ர் இதில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கிறார். இந்த‌ச் சூழ‌ல் இல்லாம‌ல் வ‌ள‌ரும்போதுதான் அர‌சிய‌ல் என்ப‌து ந‌ம‌க்குச் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ விஷ‌ய‌ம் என்ற‌ போக்கு பெண்க‌ளிட‌ம் வ‌ள‌ர்ந்து, தங்கியும் விடுகிற‌து.

தாய்க்குலங்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே அரசியல் மூலம் பிரபலமானதுதானே?வாக்களிப்பதோடு கடமை நின்றுவிடுவதில்லை..அவ்வப்போது நம் நாட்டில், ஏன் உலக அளவு அரசியல் நிலவரங்கள் அறிந்து கொள்வது நம் தார்மீகப் பொறுப்புகளில் ஒன்றாய் விளங்க‌ வேண்டும்.

அரசியல் கட்சியில் இருக்கும் பெண்கள் கூட மகளிரணி உறுப்பினர்கள் என்று சேர்க்கப்பட்டு மந்தைக்குள் இருக்கும் ஓர் ஆடாய் இருக்கிறார்களே ஒழிய, தான் சார்ந்திருக்கும் கட்சியென்ன, அதன் கொள்கையென்ன முற்றிலும் அறிந்து ஈடுபடுகிறார்களா என்றால் அநேகமாக‌ இல்லையென்றே சொல்ல வேண்டும்.

தொலைக்காட்சி என்ற ஊட‌க‌ம், இந்த விஷ‌ய‌த்தில் உண்மையிலேயே பெரும்ப‌ங்கு வ‌கிக்கிற‌து. அன்றாடம் செய்தித்தாள் ப‌டிக்காத‌ பெண்க‌ள் கூட‌ தொலைக்காட்சித் தொட‌ர்க‌ள் பார்க்கும் போதும், திரைப்ப‌ட‌ம் ம‌ற்றும் சில‌ நிக‌ழ்ச்சிக‌ள் பார்க்கும் போதும் ஏதோ ஒரு சமயம் செய்திக‌ள் காதால் கேட்டே ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் நில‌வுகிற‌து. இது போன்ற‌ சூழ‌ல் சற்றே வயது முதிர்ந்த, அல்லது நடுத்தர வயதுப் பெண்மணிகளிடம் அதிக‌ரித்திருப்பதை நாம் அண்மைக்கால‌ங்க‌ளில் க‌ண்கூடாக‌க் க‌ண்டு வ‌ருகிறோம். இது வரவேற்கத்தக்கதொரு நல்ல மாற்றமே.