Tuesday, May 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 41

புகாரக்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 227 - 240
 
மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
அகன்ற பெருந்தோள் கணவருடன்
ஊடல் பாராட்ட இயலாமல்
அவருடன் பொருந்தியிருந்து
வந்திட்ட விருந்தினரை
வரவேற்று உபசரித்தனர்
இல்லற மகளிர்.

வழிபாட்டு ஒழுக்கத்தில்
மேலோங்கிச் சிறந்த
அருந்ததி போலும்
கற்பில் சிறந்த
இல்லற மகளிரை
அவர்தம் கணவர் பெருமக்கள்
மதித்தேதான் போற்றினர்.

தம் நெஞ்சத்திடம்
தம் எண்ணம் உரைத்தனர்.

ஒளியும் அழகும் பொருந்திய
இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
நீலமணி ஒத்த இதழ்களையுடைய
குவளை மலர்கள்
புறங்கொடுத்துப் போயின.

மகளிரின் கரிய கண்களின்
கோபக் கருஞ்சிவப்பு
விருந்தினர் வரவால்
நீங்கியே போயிற்று.

இக்கோபச்சிவப்பு மட்டும்
நீங்காமல் போயிருந்தால்
இந்தப் பரந்த நிலவுலகம்
இவர்தம் ஊடல் நீங்கிட
வேறு ஒரு மருந்தைத்
தர வல்லதோ...

இங்ஙனம் எண்ணி எண்ணிச்
செயலற்று மயங்கினர்
கணவன்மாரும்
விழாவது நடந்திட்ட நாட்களில்..

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

இச்சிறப்புடை இந்திரவிழாவின்
நள்ளிரவுப் பொழுதொன்றில்
தன்னுள்ளே இருக்கும்
மணத்தாது மகரந்தங்கள்
தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

மேற்பரப்பில் இருக்கும்
கட்டு மெல்லவே அவிழ்ந்து
தேன் சொரியச் சொரிய
நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
உள்ளத்தின் நினைவை
உள்ளே மறைத்துக்
கண்ணீரைச் சொரிந்தன
இரு பெண்களின் கண்கள்.


கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
பிரிவுத்துயர் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
ஆனந்தம் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

(குறிப்பு:
  • பெண்ணின் இடக்கண் துடித்தல் - நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.
  • பெண்ணின் வலக்கண் துடித்தல் - தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)
(இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
அடுத்து வருவது கடல் ஆடு காதை)
 
வல்லமை 08.10.12 இதழில் வெளிவந்தது

Thursday, April 4, 2013

நான் அறிந்த சிலம்பு - 40

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 204 - 210


சிலம்பின் வரிகள் இங்கே: 211 - 227 
 

வீதியில் உலாவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

அகன்ற அழகிய வானில்
இராகு கேது பாம்புகளுக்கஞ்சிக்
கருமுகில் சுமந்து
முயற்கரை* ஒழித்துத்
திரியும் நிலவது போல்

(முயற்கரை - நிலவிலுள்ள கறை)

கருங்கூந்தல் சுமந்து
கயல்மீனான இருவிழிகளிடைக்
குமிழ்மலர் போன்ற மூக்கினையும் கொண்ட
அழகுப் பரத்தையர்
புகார் வீதிகளில் உலவுகின்றனரோ
என்றெண்ணியே
பரத்தையர் முகம் கண்டு
காமுற்று மயங்கினர் இளைஞர் சிலர்.

முன்பொருமுறை
சிவனால் எரிக்கப்பட்ட
மகரக் கொடி தாங்கிய மன்மதன்
தன் உடம்பினை மீண்டும் பெறுதல் பொருட்டு
ஈரம் நிறைந்த திங்களாகி
பெரிய நிலத்தே உள்ள
அமுதக் கலையின்
சீர்மை பொருந்திய துவலையுடைய
நீரைப் பருகி வளரும்படி
வளர்த்த மின்னல் கொடி ஒன்று
இந்நிலத்தே வந்ததோ...
என்றெண்ணியே
பரத்தையர் இடையழகில்
மயங்கிப் பிதற்றினர்
இன்னும் சில இளைஞர்.

பெருநிலம் ஆள்கின்ற மன்னர்க்குத்
தம் பெருவளம் காட்ட விரும்பிய
திருமகள் இங்குதான் வந்து புகுந்திருப்பாள்
என்றே கருதியது தாமரை மலர்.

அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
அழகு நங்கையின்
செந்நிற முகம் ஒத்தது.


எரிதழல் நிறமுடை இலவ மலர்
போன்ற அதரங்களையும்
வெள்ளை நிறமுடை முல்லை அரும்புகள்
போன்ற பற்களையும்
கருமை நி\றமுடை நீள்குவளை மலர்
போன்ற கண்களையும்
குமிழ்மலர்
போன்ற மூக்கையும்
தன்னுள் அடக்கிக் கொண்டு
வேற்று உருவம் தாங்கியே
திருமகளைச் சேரவென்று
அவளைத் தேடியே திரிந்த
கள்ளத் தாமரை
போன்றவள் இவ்வழகுப் பெண்.

ஒரே ஒரு தாமரை மலருக்குப்
பல மலர்களின் குணம் வாய்த்தது போல்
ஒரே ஒரு பெண்ணிடம்
பல்வகைப்பட்ட அழகும் அமைந்திருந்தது
கண்டு மயங்கித் திரிந்தனர்
இன்னும் சில இளைஞர்.

பல உயிர்களையும்
கவர்ந்து செல்லும்
எமன் அவனும்
ஆண் இயல்போடு உருவத்தோடு
தாம் திரிந்தால்
அச்செயல் மன்னனவன்
செங்கோல் மறுத்ததாகும்
பழி நேரும் என்றஞ்சியே


தன் உருவம் மாற்றிக்கொண்டு
நாணமுடைய தோற்றமும்
நகையுடைய முகமும்
திவவினையுடைய*
பண்ணிசைக்கும் யாழின் மொழியையும்
தன்னகத்தே கொண்டு
பெண்ணுருவம் தாங்கி
இவ்வீதியில் திரிகின்றான் போலும்
என்றெண்ணியே
அப்பரத்தையர் அழகில்
தம்முயிர் பறிபோவது போல்
பிதற்றி நின்றனர் இளைஞர் சிலர்.

(திவவு - யாழின் கோட்டிலுள்ள நரம்புக்கட்டு)

உருவம் ஏதுமில்லாக் காமனவன்
ஒப்பற்ற பெருஞ்சேனையெனத்
திகழ்ந்தது பரத்தையர் கூட்டம்.

அப்பொதுமகளிருடன் ஊடி
அவர்களைப் புகழ்ந்து
முன்போலவே ஊடல் வென்று
அவர்களை வேறெங்கும் போகவிடாது
தடுத்து நிறுத்திப் புணர்ந்தனர்.

அத்தருணத்தில்
அம்மகளிர் தோள்களில்
மார்புகளில் எழுதிய
தொய்யில் எனும் வரிக்கோலம்
ஆடவரின் மார்பிலும் தோளிலும்
எழுதப்பட்டது.

புதிதாய்ப் பதிந்திட்ட
இம்முத்திரை குறித்து
மனைவியர் தம்மோடு ஊடுவர்
என்றஞ்சியே
விருந்தினர் சிலருடன்
தம் வீடு சென்றனர் ஆடவர்.
 

வல்லமை 31.09.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 39

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
 

சிலம்பின் வரிகள் இங்கே: 189 - 203

இளவேனிலும் மலயத் தென்றலும் உலாவும் வீதி

தன்னால் காதலிக்கப்பட்ட
காதல் கணவன்கோவலனைப்
பிரிந்த கண்ணகி
அலர் (பழிச்சொல்) எய்தியவள்;
அங்ஙனம் காதலனைப் பிரிந்து
அலர் எய்தாத,
அழகிய வளைந்த
குழை அணிந்திருந்த
மாதவி மடந்தையோடும்;

இல்லம்தனில் வளர்கின்ற
முல்லை மல்லிகை இருவாட்சி;
தாழியுள் வளர்கின்ற
குவளை மலர்;
வண்டுகள் சூழும்
செங்கழுநீர்ப்பூ;
இவை
ஒருங்கே கொண்டு
நெருங்கத் தொடுத்த
மாலையில் படிந்தும்


காமமாகிய கள்ளினை
உண்டு களித்தும்
நறுமணம் செறிந்த
அழகுப் பூம்பொழிலில்
விளையாட விரும்பியும்
நாள்தோறும் மகிழ்ச்சி
மட்டுமே நிறைந்திருக்கும்
நாளங்காடியதனில்
பூக்கள் விற்கும் இடங்களில்
நறுமணப்பூக்களின்
இடையே புகுந்தும்
நகைத்து விளையாடும்
பெண்கள் கூட்டத்தின்
காமம் வழியும் மொழிகள்
கேட்டுக் களித்தும்


குரல் எனும்
பாட்டிசைக்கும் பாணரோடும்
நகரிலுள்ள பரத்தையரோடும்


இன்புற்று உலா வரும்
கோவலன் அவன் போல்
இளி எனும்
இசை இசைக்கும் வண்டோடும்


இனிமை சுமந்த
இளவேனிலோடும்
பொதிகைமலையில் இருந்து
புறப்பட்ட இளந்தென்றலாம்
மலயமாருதம்
புகார் நகர்தன்னின் வீதிகளில்
புகுந்தேதான் விளையாடியது.
 

வல்லமை 24.09.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 38

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 

சிலம்பின் வரிகள் இங்கே: 176 - 188
 
 

கடவுளர் திருவிழா

நால்வகைத் தேவருக்கும்
மூவாறு பதினெட்டுவகைக் கணங்களுக்கும்
வேற்றுமைகள் பிரிவுகள் அறிந்து கொண்டு
வகுக்கப்பட்ட வெவ்வேறு தோற்றமுடைய
தனித்தனிக் கடவுளர் பலர்க்கும்
மற்றொரு புறத்தில்
சிறப்பாக விழா எடுக்கப்பட்டது.

நால்வகைத்தேவர்: வசுக்கள் - 8; ஆதித்தர் - 12; உருத்திரர் - 11; மருத்துவர் - 2
நால்வகைப்பட்ட முப்பத்து மூன்று தேவர்.
பதினெட்டுவகைக்கணங்கள்: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர்,
கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம்,
ஆகாசவாசிகள், போக பூமியோர்

அறவுரை பகர்தல்

அறவோர் பள்ளியாகிய புத்தர் பள்ளிகளிலும்
அறத்தினைக் காக்கும் அறச்சாலைகளிலும்
மதிற்புறங்களில் உள்ள புண்ணியத்தலங்களிலும்
அறத்தின் கூறுபாடுகள் நன்கறிந்த
சான்றோர் நவிலும் அறவுரைகள்
ஒரு புறத்தில் சிறப்பாக நடைபெற்றன.

சிறைவீடு செய்தல்

கொடியணிந்த தேரினையுடைய
சோழ அரசனுக்குப் பகையாகிச்
சிறைப்படுத்தப்பட்ட அரசர்களின்
கைவிலங்குகளை அகற்றி
அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்த
கருணைச்செயல் ஒரு புறம் நிகழ்ந்தது.

இசை முழக்கம்

கூத்தருடன் குயிலுவக் கருவியாளரும்
பண்ணமைத்து யாழ் இசைக்கவல்ல
புலவருடன் இசைபாடும் பாணரும்.....
இவர்களின் அளந்து கூறுவதற்கியலாத
சிறப்பினையுடைய இசைநிகழ்ச்சிகள்
ஒரு புறம் நடந்தேறின.

விழா மகிழ்ச்சி

இரவும் பகலும் இடைவிடாது
தொடர்ந்து நடந்த விழா நிகழ்வுகளால்
முரசுகளும் கூடக் கண்துயிலாது
மாறி மாறி ஒலித்தன.
இங்ஙனம்
குறுந்தெருக்களிலும் பெருவீதிகளிலும்
விழாமகிழ்வில் களித்துத் திளைத்தது
அகன்ற ஊராம் புகார் நகரம்.
 

வல்லமை 17.09.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 37

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 157 - 175

இந்திரனை நீராட்டுதல்

அரசனின் ஐம்பெருங்குழுவினர்,
எண்பேராயத்தினர்,
அரச குமரர், வணிக குமரர்,
கண்டவர் வியக்கும் வண்ணம்
குதிரைகளை இயக்கும் வீரர்,
யானை மீது ஏறி வரும்
திரள்கூட்டத்தினர்,
விரைவாகச் செல்லும்
குதிரைகள் பூட்டிய தேர்கள் உடையோர்
அனைவரும் ஒன்றாய்க் கூடினர்.

ஐம்பெருங்குழுவினர் - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர்
எண்பேராயத்தினர் - கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி(குதிரை) மறவர்

அங்கே கூடிய அனைவரும்
தம் அரசனை மேம்படுத்த எண்ணியே
"புகழ்நிறைந்த மன்னன் வெற்றி கொள்வானாக"
என்றே வாழ்த்தினர்.

மிகப்பெரிய இப்புவியின்கண் வாழும்
ஆயிரத்தெட்டு சிற்றரசர்,
தம் வளத்தால் உலகைக்காக்கும்
குளிர்ந்த காவிரியின்
பூந்தாது நிறைந்த
பெரிய சங்கமத்துறையில் இருந்து
புண்ணிய நன்னீரைப்
பொற்குடங்களில் ஏந்தியே வந்து
மண்ணில் இருப்பவர் மருட்சியுறவும்
விண்ணில் இருப்பவர் வியந்துபார்க்கவும்
வானவர்க்கு அரசனாகிய இந்திரனை
ஆயிரத்தெட்டு கலச நீரைக் கொண்டு
திருமஞ்சன நீராட்டினர்.

கோயில்களில் வேள்வி

தாய்வயிற்றில் பிறக்காத
திருமேனியன் மாதவன்
சிவபெருமான் கோயிலிலும்,
ஆறுமுகமும் அழகுறக்கொண்ட
அழகன் முருகன் கோயிலிலும்,
வெள்ளிய சங்கு போன்ற நிறமுடையான்
பலதேவன் திருமால் கோயிலிலும்,
முத்துமாலைகள் அணிசெறிந்த
வெண்கொற்றக்குடையுடைய
இந்திரன் கோயிலிலும்,
யாக ஓம குண்டங்கள் அமைத்து
மிகவும் மூத்த இறைவன் அருளிய
நால்வேதங்கள் ஓதி
யாகத்தீ வளர்த்து
விழா எடுக்கப்பட்டது.
 

வல்லமை 10.09.12 இதழில் வெளிவந்தது.

Friday, March 8, 2013

நான் அறிந்த சிலம்பு - 36

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 141 - 150


சிலம்பின் வரிகள் இங்கே: 151- 156
விழாவின் தொடக்கமும் முடிவும் முரசறைந்து அறிவித்தல்

விழாவின் தொடக்கமும்
என்று எப்போது என்ற விளக்கங்களை
வள்ளுவன் முரசறைந்து அறிவிப்பது வழக்கம்.

அம்மரபதன்படி
வச்சிரக்கோட்டத்து மங்கல முரசை,
அலங்காரம் செய்த கச்சினையணிந்த
யானையின் பிடரியில் ஏற்றி,
தூய வெண்மையான யானை நிற்கும்
இந்திரன் தோட்டத்துச் சென்று
அங்கிருந்தபடியே
விழாவின் தொடக்க நாளும்
முடியும் நாளும்
முரசறைந்து முறையே அறிவிக்கப்பட்டது.

கொடியேற்றம்

இப்பூமியில் இந்திரன் வந்து
தங்கிய இடம் என்ற பெருமை உடைத்து
கற்பகத்தரு நின்ற கோட்டம்;
அக்கோட்டத்துக்குச் சென்று
ஐராவதம் எழுதிய
மங்கல நெடுங்கொடியை
வானின் உயரத்துக்குப்
பறக்குமாறு ஏற்றினர்.

வீதியின் மங்கலத் தோற்றம்

பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தன
விழாவீதிகளில் இருந்த
பெரிய மாளிகைகளின் திண்ணைகள்.

மரகதமணிகள் வைரமணிகள் இழைத்திருந்த
பவளத்தூண்கள் நின்றிருந்தன
அத்திண்ணைகளில்.

கிம்புரி எனும் பூணுடன் கூடிய கொம்பையும்
முத்துச் சிப்பிகளைப் பிளந்து பெற்ற
ஒளிபொருந்திய முத்துக்களையும்
மங்கலம் பொருந்திய அழகிய ஓவியங்களையும்
மாலை வடிவில் வளைத்து அமைக்கப்பட்ட
மகரத் தோரணங்கள் அலங்கரித்தன
அம்மாளிகைகளின் வாயில் தோறும்.

மாசற்ற பசும்பொன்னால் ஆன
பூரண கும்பங்கள்,
பொலிந்து விளங்கும்
முளைப் பாலிகைகள்,
பாவை விளக்கு,
பசும்பொன்கொடி,
வெண்சாமரம்,
சுந்தரமான சுண்ணம் --
இவையனைத்தும் நெருக்கமாக
வீதியெங்கும் வைக்கப்பட்டு
இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன.
 

வல்லமை 03.09.12 இதழில் வெளிவந்தது.

Sunday, March 3, 2013

நான் அறிந்த சிலம்பு - 35

புகார்க்காண்டம் - 05, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 118 - 140
 
 
ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் - பகுதி 2

கூனர் குள்ளர் ஊமையர் செவிடர்
அழுகும் நிலையிலுள்ள
உடலையுடைய தொழுநோயாளர்
மூழ்கி எழுந்த நிலையிலேயே
உடற்பழுது இல்லாமல் நீங்கி
பார்ப்பதற்கு இனியவராய்க் காட்சியுற்று
ஊர்வலம் வரச் செய்யும்
பொய்கையைக் கொண்ட மன்றம்
இலஞ்சி மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

பிறரின் வஞ்சனையதன் காரணமாய்
அவரால் மருந்தூட்டப் பெற்று
மனதில் பித்து ஏறியவர்கள்,
நஞ்சினை உண்டு
நடுங்கவைக்கும் துயர் உற்றவர்கள்,
நெருப்பு நிகர்த்த நஞ்சுடைய
பாம்பின் கூரிய பற்கள்
நன்கு அழுந்தக் கடிப்பட்டவர்கள்,
முழி பிதுங்கிக் காணப்படும்
பேயினால் பிடிக்கப்பட்டுக்
கடுந்துன்பப் பட்டவர்கள் --

இவர் அனைவரும்
ஒருமுறை சுற்றி வந்து
தொழுது நின்|ற அளவிலேயே
அவர்தம் துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகும்பொருட்டு
ஒளிவீசும் நெடிய கல் நாட்டி நின்ற மன்றம்
நெடுங்கல் மன்றம் என்றே அழைக்கப்பட்டது.

தவக்கோலத்தில் மறைந்து திரியும்
தகாத தன்மையுடைய போலித்துறவிகள்,
கணவன் அறிந்திடாவண்ணம் மறைந்து
தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்
ஒழுக்கங்கெட்ட பெண்கள்,
தம் அரசனுக்கே உட்பகை
விளைவிக்க எண்ணும் அமைச்சர்கள்,
பிறர் மனைவியை விரும்புபவர்கள்,
பொய்சாட்சி சொல்பவர்கள்,
புறங்கூறித் திரிபவர்கள் --

"இவர்கள் யாவரும் நான் வீசும்
என் கைக்கயிற்றுக்குள் அகப்படுவர்"
என நாற்காததூரமும் கேட்கும்படிக்
கடுங்குரலில் எச்சரித்து,
அவரைத் தரையில் அறைந்து கொன்று உண்ணும்
பூதம் நின்ற மன்றம்
பூத சதுக்கம் என்றேதான் அழைக்கப்பட்டது.

அரசனவன் செங்கோல்
சற்றே தவறிடினும்
அறமது உரைக்கப்படும் அவைதனில்
நீதிநூல் நெறி வழுவ
ஒரு பக்கம் சார்ந்த தீர்ப்பு கூறப்படினும்
தன் நாவால் அத்தவறுகளை நவிலாது
தன் கண்களில் நீர் உகுத்து வருந்தியே
பாவை ஒருத்தி நின்று அழுகின்ற மன்றம்
பாவை மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

உண்மையான வாழ்வியல் நெறியை
உணர்ந்த சான்றோரால் போற்றப்படும்
ஐவகை மன்றங்களிலும் அரும்பலி இடப்பட்டது.
 
 
வல்லமை 27.08.12 இதழில் வெளிவந்தது.