Thursday, October 6, 2011

அரசியல் மங்காத்தா!!

என்ன ஒரு பரிமாண வளர்ச்சி! டார்வின் கோட்பாடு கூறுவது உடற்கூறு தொடர்பான 'survival of the fittest'...ஆனால் நம் தற்கால..ஏன், வருங்கால அரசியலைக் கருத்தில் கொண்டால், டார்வின் கோட்பாடு உடற்கூற்றைத் தாண்டிய உளவியல் தொடர்பானதாக இருப்பது என்ன பெரிய கொடுமை.... யாரை மிதித்து யார் முன்னேறுவது..இதுவும் உளவியல் தொடர்பான survival of the fittest...

எந்த ஒரு கட்சி மீதும் நம்பிக்கையில்லை...எந்த ஒரு தலைவனுக்கும் / தலைவிக்கும் கொள்கைகளும் இல்லை..கொள்கை பெயரளவில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவதாக இல்லை...எதில் வேறுபட்டாலும் இதில் மட்டும் அரசியல்வாதிகளுக்குத்தான் என்ன ஒற்றுமை!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவது கொஞ்சம் மக்களுக்காக ஏதோ செய்து வந்தார்கள்..இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அதிசயங்களைப் பார்த்தால், உள்ளூர்த் திட்டங்கள் 10 சதவிகிதமாவது நிறைவேற்றப்படுமா என்று சந்தேகிக்க வைக்கின்றன...

  • வாக்காளர்கள் எண்ணிக்கையோ என்று மலைக்குமளவு வேட்பாளர் எண்ணிக்கை...
  • தேர்தல் அதிகாரி யார் என்று தெரியாத கட்சித் தலைவர்..
  • கூட்டணியை அவ்வப்போது கழற்றி, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதம்...
  • காசு வாங்கிக்கொண்டு வேட்புமனு திரும்பப் பெறும் வாங்கும் வேட்பாளர்..
  • தன்னையறியாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு வேட்பாளர்..
  • அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை சரியானதுதானா என்று நீதிமன்றத்தில் வரப்போகும் வழக்குகள்...
  • இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பாவர்கள் தொடர்கள் பார்ப்பவர்களைத் தூற்ற...

தொடர்கள் பார்ப்பவர்கள் செய்திகள் பார்ப்பவர்களைத் தூற்ற..

ஆட்சி அரசியலும் சரி..குடும்ப அரசியலும் சரி...

எதுதான் சரியாக இருக்கிறது?

சரிதான்...inky pinky ponky  முறையில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் என்னதான் ஆகப்போகிறது..

அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...

குறளின் குரல் - 33

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன் சொல் வழங்குவது?

விளக்கம்:

பிறர் பேசும் இனிமையான சொற்கள் தமக்கு இன்பம் தருகிறது என்று அனுபவித்து அறிந்தவர், ஏன்தான் பிறரிடம் கடுமையான சொற்கள்
பேசுகின்றாரோ?
------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 152

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

விளக்கம்:

தீங்கு செய்தவரைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போது மூன்று நிலைகளாய் வகைப்படுத்தலாம். அவர் செய்த தீங்கை ஒறுத்தல்(தண்டித்தல்), பொறுத்தல், மறத்தல் என்ற மூன்று நிலைகள்தாம் அவை.

ஒருவர் தீங்கு செய்த போது அவரைத் தண்டிக்க முடியும்; என்றாலும் அவ்வாறு செய்யாமல் அத்தீங்கைப் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது. அத்தீங்கை அப்போதே மறந்துவிடுவது என்பது பொறுத்தலை விடச் சிறந்ததாகும்.தண்டித்தலினும் சிறந்தது பொறுத்தல்;பொறுத்தலினும் சிறந்தது மறத்தல்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.


ஈர்ங் கை விதிரார், கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

விளக்கம்:

கயவர்கள், தம் கன்னத்தை உடைக்கும் அளவு வலிமையான முறுக்கி வளைந்த முரட்டுக் கரங்கள் வாய்க்காதவர்க்கு அல்லாது, வேறு எவர்க்கும் தன் எச்சிற்கையைக் கூட உதறமாட்டார்கள்.

தம் கன்னத்தை உடைத்துவிடுவார்களோ என்று அவர்கள் வலிமைக்குப் பயந்துதான் கீழ்மக்கள் ஈவர். உண்ட எச்சிற்கையில் மிஞ்சக்கூடியது சில
பருக்கைகள்தாம். அதைக்கூட ஈவதற்கு கீழ்மக்கள் விரும்பமாட்டார்கள்.

கயமை - நற்குணங்கள் ஏதுமில்லாத கீழ்மக்களின் தன்மை
கயவர் - கீழ்மக்கள்
கொடிறு - கதுப்பு, கன்னம், யானை மதச் சுவடு, குறடு, பூச நாள்
விதிர்த்தல் - உதறுதல், சிதறுதல், தெறித்தல், அஞ்சுதல், நடுங்குதல், சொரிதல், அசைத்தல்
விதிரார் - உதறமாட்டார், சிதறவிடமாட்டார்

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 241

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.


அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம்:

அருளாகிய செல்வமே செல்வங்கள் அனைத்துள்ளும் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் என்பது பண்பற்ற இழிந்தவர்களிடத்தும் காணப்படும்.

ஆனால் அருளாகிய செல்வமோ மனிதப் பண்பில் உயர்ந்து சிறந்தவர்களிடம் மட்டுமே காணப்படும்.

பூரியார் - இழிந்தவர், கீழ்மக்கள், கொடியவர்
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 92. வரைவின் மகளிர் / வரைவு இல் மகளிர்
குறள் எண்: 919


வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு.


வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

விளக்கம்:

எந்தவிதப் பாகுபாடும், வரையறையும் இல்லாது, மாட்சிமை கருதாது, பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம் அழகை விற்கும் அழகிய அணிமணிகளைப் பூண்ட இளம் மகளிரின் மெல்லிய தோள்கள், உயர்வில்லாத இழிந்த கீழ்மக்கள் ஆழ்ந்து மூழ்கும் சேறாகும் / நரகமாகும்.

வரைவு - திருமணம், எல்லை, பிரிவு, அளவு, எழுதுதல்

திருமணம் என்ற பந்தம் ஒருவருக்கே உரியோர் என வரம்பு / எல்லை வகுத்துக் கொள்வதால் வரைவு எனப்படும். அத்தகைய வரைவு
வகுத்துக்கொள்ளாமல், பொருள் தருபவர்களுக்கெல்லாம் பயன்படும் பாலியல் தொழிலில் ஈடுபடும் மகளிரை வரைவு இல்லாத மகளிர் என்பர்.

மாண்- மாட்சிமை, மடங்கு, மாணவன், பிரமசாரி

இழை - அணிகலன், கையில் கட்டும் காப்பு, நூல், நூலிழை

புரை - உயர்ச்சி, பெருமை,குற்றம், குரல் வளை, விளக்கு மாடம், உள்ளோடும் புண், பூமி, கண் நோய் வகை, பொய், களவு, மடிப்பு, கூறுபாடு, ஆசிரமம்,
வீடு, தேவாலயம், அறை, மாட்டுத்தொழுவம், பழைமை, ஒப்பு

பூரியர் - கீழ்மக்கள், இழிந்தவர், கொடியவர்

ஆழும் - அமிழும், மூழ்கும்

அளறு - குழை சேறு, நரகம், குழம்பு நீர்
----------------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருள் செயல் வகை
குறள் எண்: 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.


பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது, இல்லை பொருள்.

விளக்கம்:

ஒரு பொருளாகக் கூடப் பிறரால் மதிக்கப்படாதவர் இருப்பர்; அவரின் தகுதியையும், பிறர் மதிக்கத்தக்கவராய் மாற்றிக் கொடுக்கக் கூடியது
பொருட்செல்வம் மட்டுமே. இப்படிப்பட்டவரையும் உயர்த்திக் காட்டும் பொருட்செல்வத்தைத் தவிர, ஒருவனுக்குச் சிறந்த பொருள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியது வேறேதுவும் இல்லை. இவ்வாறு பொருட்செல்வத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

தகுதியற்றவரையும் தகுதியுடையவராக்கிக் காட்டுவது அவரிடம் உள்ள பணமேயன்றி வேறெதுவும் இல்லை.

குறளின் குரல் - 32

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 936

அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்.


அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட் டார்.

விளக்கம்:

சூது என்னும் தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உணவு உண்ணும் வாய்ப்பின்றி வறுமைப்பட்டு, எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகி
வருந்துவர்.

இக்குறளுக்கு உரை சொல்ல வந்த பலரும் முகடி - மூதேவி என்றே கூறுகின்றனர். வள்ளுவம் இறைவனைப் பற்றிப் பேசுகிறது / பேசுவதில்லை என்ற வாதம் வருகையில் இக்குறளில் வரும் முகடி என்ற வார்த்தையும் சர்ச்சைக்குள்ளாகிறது.

இவ்விளக்கத்தில் முகடி என்னும் பதத்துக்குத் தீயசக்தி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

அகடு - வயிறு, உள், நடு, மேடு, நடுவு நிலை, பொல்லாங்கு
முகடி- முகட்டுத்தரத்தில் / மேல்கூரையில் உள்ள பேய், மூதேவி
---------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 707

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்?

விளக்கம்:

ஒருவர் மனதில் மகிழ்ச்சியுறும்/விருப்புறும் போதும், சினமுறும்/வெறுப்புறும் போதும், அவ்வுணர்ச்சிய அவருடைய முகம் முந்திக் கொண்டு காட்டி விடுகிறது. அப்படி முன்னறிந்து சொல்லவல்ல முகத்தை விடப் பேரறிவும், அனுபவ அறிவும் வாய்ந்தது வேறேதுவும் உண்டோ?

முதுக்குறை - பேரறிவு, அனுபவம் பெறுதல், பூப்படைதல், பேதைமை
----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17. அழுக்காறாமை
குறள் எண்: 165


அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.


அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.

விளக்கம்:

பொறாமை குணம் உடையவர்க்குத் துன்பம் விளைவிக்க அந்தக் குணம் ஒன்றே போதுமானது. அவர்க்குத் துன்பம் தர வேறு பகைவர்கள் யாரும்
தேவையில்லை. பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் கூட, அப்பொறாமை, அதனை உடையவர்களுக்கே முதலில் தீங்கு விளைவிக்கும்.

அழுக்காறு - பொறாமை
சாலும் - போதும்
ஒன்னார் - பகைவர்
வழுக்கு - கேடு, தோல்வி, சறுக்குகை, மறதி, தவறு, வழுவழுப்பானது
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 46

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

விளக்கம்:

ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு முறைப்படி நடத்தி வாழ்ந்து வந்தால், இல்லறத்திற்கு மாறான வேறு வழிகளில் போய்
அடையும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை.

அறநெறி கூடிய இல்வாழ்க்கையால் பெறும் பயனை, வேறு எந்த வாழ்க்கை நெறியாலும் அடைந்திட இயலாது.

போஒய் - போய் என்பதன் அளபெடை; ஏளனக் குறிப்பாக வந்துள்ளது.
----------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 133. ஊடல் உவகை
குறள் எண்: 1326

உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது.


உணலினும் உண்டது அறல் இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

விளக்கம்:

உணவு, மேலும் மேலும் உண்பதை விட, உண்டது செரிப்பது இனியதாகும். அது போல், காமத்தில் கூடியிருப்பதைக் காட்டிலும், இடையிடையே
ஊடலில் பிரிந்து நிற்பது மேலும் மேலும் காதலை வளர்த்து இன்பம் தருவதாகும்.

செரித்தபின் உண்டாகும் பசி, உணவின் இன்சுவை அதிகரிக்கும். ஊடலின்பின் வரும் கூடல் காதலின் சுவை அதிகரிக்கும்.

அறல் - இல்லாமல் போதல், கருமணல், நீர், நெறி, அறுதல், திருமணம், விழா
-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 106. இரவு (கேட்டுப்பெறுதல் / பிச்சை)
குறள் எண்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி.


இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி.

விளக்கம்:

பொருள் வேண்டிப் பிறரிடம் இரந்து நிற்பவன் பொருள் கிடைக்கவில்லையே என்று கோபப்படுதல் கூடாது. வேண்டிய போதெல்லாம் பொருள் கிடைக்காது; செல்வம் தேவையான சமயத்தில் உதவாது என்பதற்கு அவனது வறுமைத் துன்பம் ஒன்றே போதுமான சான்றாகும்.

கரி - சான்று, சாட்சியம், யானை, நஞ்சு, மிளகு, அடுப்புக்கரி, நிலக்கரி, கரிந்தது, பெண் கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்

Wednesday, August 24, 2011

தங்க நிமிடங்கள்



காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்

குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்

உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்

வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....

சுகமோ சுகம்
இதமோ இதம்

குற்றாலச் சாரலில்
நனையும் தங்க நிமிடங்கள்..

Monday, August 1, 2011

கல்மலைச் சுவடுகள்



இல்லறக் கனவுகள்
உன்னோடு மரிக்க
வீட்டு உறவுகள்
என்னோடு வசிக்க

பெண்பிள்ளையை உன் பெயரில் விளிக்க
கொண்டவளுடன் வாழ்க்கையது நடக்க

நம் காதல் பேசிய இடங்களுக்கு
என் குடும்பத்துடன் போகையில்

சோலைகள் கதை சொல்லிட
கோவில்தூண்கள் கோபம் கொண்டிட
பேருந்து இருக்கைகள் இழப்பை இகழ்ந்திட
திரையரங்குகள் தீண்டல்கள் பேசிட...

அலைமணல் சுவடுகளாய்
அழிந்தே போயின
என்றெண்ணிய நினைவுகள்

மீண்டு வந்தன
மீண்டும் வந்தன
காலத்தால் அழியாத
கல்மலைச் சுவடுகளாய்..

'நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்'
என்றவளே!

இச்சுவடுகள்
மீட்டெடுத்த சுமைகள்
யாரிடம் பேசுவேன்?

உனக்கென்று ஒரு கணவன்
எனக்கென்று ஒரு மனைவி
என்றான பின்..

நீ அன்று
பேச நினைத்ததைப்
பேச முடியாதவன்..
நீ இன்று
பேசாதது கூடப்
பேசுகின்றேன்..

எங்கேயோ இருக்கும்
நீயும் கூட
நான் பேசுவதைத்தான்
நினைக்கின்றாயோ?

குறளின் குரல் - 31

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 208

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒருவன் மேற்கொண்ட தீய செயல்களால், அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களில் இருந்து அவன் தப்பிக்கவே இயலாது.

இது எத்தகையது என்றால், ஒருவன் தன் நிழல் அவன் பாதங்களின் கீழேயே எப்போதும் தங்கும் தன்மையுடையது. அப்படி அவன் பாதங்களின் கீழ் உறையும் நிழல், சமயம் வரும்போதெல்லாம் தவறாமல் வெளிப்பட்டே தீரும்.

நிழல் பாதத்தின் அடியே மறையாது தங்கியிருப்பது போல, தீய செயலால் வரும் துன்பங்களும் விலகாது கூடவே வரும். சமயம் வரும்போது வெளிப்படும் நிழல் போல, தக்க சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பங்கள் தவறாமல் வந்து சேரும்.

வீயாது - தவறாது, விலகாது, விடாது
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 604

குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.


குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.

விளக்கம்:

சோம்பலில் திளைத்து மூழ்குவதால், ஒருவர் வாழ்க்கையில் முயற்சி செய்யும் தன்மை குன்றிப் போகும். இதனால் சிறப்பு / மாட்சிமை தரக்கூடிய உழைப்பினையும் ஒருவர் கைவிட நேரிடும். இந்த நிலையில், அவர் குடியும் அழிந்து போகும்; குற்றங்களும் பெருகிப்போகும்.

மடி - சோம்பல்
மாண்ட - மாட்சிமை பொருந்திய, இறந்த
உஞற்று - முயற்சி, ஊக்கம், வழக்கு, தூண்டு, தவறு, முயற்சி செய்
---------------------
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

மனம் மகிழ்ந்து ஒருவருக்குப் பொருளை ஈவது நல்லதா? முகம் மலர்ந்து ஒருவரிடம் இன்சொல் பேசுவது நல்லதா?

பிறர்க்கு ஈவது என்பது தம்மிடம் இருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தே அமையக் கூடிய ஒரு சிறப்பாகும். பொருளின் இருப்பைப் பொறுத்து ஈயும் தன்மை மற்றும் அளவு, சூழலுக்கேற்றாற் போல மாறக் கூடும்.

ஆனால், இன்சொல் என்பது எப்போதும் ஒருவரிடம் இயல்பாய் இருக்க வேண்டிய தன்மையாகும். இது எந்த நிலையிலும் மாறாத இயல்புடன் விளங்கும். எப்போதும் குன்றி விடாமல், இன்சொல் பேசும் தன்மை நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு.
எனவே இன்சொல் பேசுவது, ஈவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
--------------------
பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறையழிதல்
குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.


செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்?

விளக்கம்:

என் மனதுக்கு நெருக்கமானவர் என்னை பிரிந்து சென்ற பின்னும், அவர் பின் செல்ல விரும்புகிறது என் நெஞ்சம். என்னை வாட்டுகிறது இந்தப் பிரிவுத் துயர். இந்தத் துயரம் எத்தன்மையது? அந்தோ! மிகக் கொடியது. இரங்கத்தக்கது.

நிறையழிதல் - மனதின் இரகசியம் மறைத்து அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவது நிறை; பிரிவாற்றாமையால் மனதை நிலைப்படுத்தமுடியாமல், வெளிப்படையாகப் பேசுவது நிறையழிதல்.

எற்று - எத்தன்மையது
அரோ - அசைச்சொல்
சேறல் - செல்லுதல்
செற்று - நெருக்கம்; செற்றவர் - நெருங்கியவர்
----------------------------
பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குறள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
--------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 41. கல்லாமை
குறள் எண்: 407

நுண்மா னுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.


நுண் மான் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மான் புனை பாவை அற்று.

விளக்கம்:

நுண்மை மற்றும் மாட்சிமை பொருந்திய பல நூல்களை ஆராய்ந்து கற்காதவனின் புறத்தோற்றம் வேண்டுமானால் அழகாக இருக்கக் கூடும். ஆனால் அகத்துக்கு அழகு தரும் கல்வி ஒளி பெறாத அவன், அழகான வண்ணம் தீட்டப்பெற்ற மண் பொம்மைக்கு ஒப்பானவன்.

அழகிய வண்ணங்கள் அணி சேர்த்தாலும், மண் பொம்மைக்கு உயிரோட்டம் வாய்க்காது. அதே போல் கல்வி என்னும் உள்ளொளி இல்லாதவனின் எழிலான புறத்தோற்றமும் ஆளுமை தராது.

நுழை - புத்திநுட்பம், நுண்மை, பலகணி, குகை, துளை, சிறுவழி
புலம் - அறிவு, நூல், வயல், இடம், திக்கு, பொறி, துப்பு, வேதம்
பாவை - பொம்மை, பதுமை, அழகிய உருவம், கருவிழி, பெண், குரவ மலர், நோன்பு வகை, திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள், இஞ்சிக்கிழங்கு, மதில்

Sunday, July 31, 2011

நான் அறிந்த சிலம்பு - 10

புகார்க்காண்டம் - 2: மனையறம் படுத்த காதை

கண்ணகியும் கோவலனும் இணைந்து இன்புற்றிருத்தல்

வண்டுகள் சுவைக்கும்
வாசனைப் பூம்படுக்கையில்
சென்றமர்ந்தனர்
கண்ணகியும் கோவலனும்.

கோவலன் அவனும்
கண்ணகியவளின்
பெரிய தோள்களில்
வரிக்கோலமாய் எழுதினான்
கரும்பையும் வல்லிக்கொடியையும்...

எத்தகையது அக்காட்சி?
முதிர்ந்த கடல் கொண்ட
உலகம் முழுதையும்
தம் கதிர்களால் ஒளியேற்றும்
கதிரவனும் வெண்மதியும்
ஒருசேர இருந்த
காட்சியை ஒத்திருந்தது..

கண்ணகி சூடியிருந்த
மலர்மாலையில் இருந்த
நிலவையொத்த
வெண்மல்லிகைப்பூக்கள்
வண்டுகளின் பாடல்
செவிமடுத்து
மொட்டவிழ்ந்து திறந்தன...

கோவலன் சூடியிருந்த
மாலையில் இருந்தன
இதழ்முறியாத
செங்கழுநீர்ப்பூக்கள்...
 
மல்லிகைமாலையும்
செங்கழுநீர்த்தாரும்
கலந்து முயங்கின..

செயலற்ற நிலையில்
கலந்து மகிழ்ந்தனர் தம்பதியர்..

தீராத காதலுடன்
கண்ணகியின் திருமுகம் நோக்கிய
கோவலன் தானும்
முன் எப்போதும்
சொல்லப்பட்டிராத
பொருள்நிறை உரையுடன்
கண்ணகி நலம் பாராட்டத் தொடங்கினான்..

கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டுதல்

தேவர்கள் போற்றும்
சிவன் தான்
சூட்டிய பெருமைக்குரியது
அழகிய இளம்பிறை நிலவது..
உன்னுடன் பிறந்த பிறப்பு என்பதால்
பெருமான் தந்தானோ உனக்கு
அப்பிறையை நெற்றியாக?

போர்க்களத்தில் தம்மை
எதிர்க்கும் பகைவர்க்கும்
படைக்கலன்கள் வழங்கிப்
போர் புரியச் சொல்லும் பண்புண்டு.
அதைப்போலவே
மன்மதன் தானும்
தம் பெரிய கரும்புவில்லை
இரண்டாகப் பிளந்து தந்தானோ
உன் இருபுருவங்களாக?

தேவருண்ணும்
அமிழ்தின் முன்னே பிறந்த
இலக்குமியானவள் நீ என்பதால்
தேவர் கோமான்
இந்திரன் தானும்
வச்சிரப்படையைத் தந்தானோ
உன் அழகிய இடையாக?

ஆறுமுகம் கொண்ட
முருகன் தான்
உனக்குத் தரும்
உரிமையைப் பெற்றிலன்
என்ற போதும்
உன்னைக் கண்டு நான்
துன்புற வேண்டுமென்று
தன் சுடர்நெடு வேல்தனைத் தந்தானோ
கடை சிவந்து
குளிர்ச்சி பொருந்தி நிற்கும்
நின் இரு கண்களாக?