Sunday, July 22, 2012

நான் அறிந்த சிலம்பு - 24

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 36-46


காதலரைக் கூடிய மகளிரின் களிமகிழ்வு


மேற்குத் திசையதனில் கிடைத்திடும்
நறுமணத்துக்கெனப் புகைத்திடும்
வெண்மையான கண்டு சருக்கரையோடு


கிழக்குத் திசையதனில் கிடைத்திடும்
கருமையான அகில் முதலியவற்றுடன்
புகைக்கும் புகையைத்
துறந்திட்டனர் மகளிர்
வேனிற்காலம் என்பதாலே.


வடக்குத் திசையதனின் கண்ணமைந்த
இமயமலையினின்று கொண்டு வந்திட்ட
சந்தனம் அரைத்திடும்
ஒளிபொருந்திய வட்டக்கல்லில்


தெற்குத் திசையதனின் கண்ணமைந்த
பொதிகைமலைப் பிறந்த
சந்தனக்கட்டையைச்
சுழற்றி இழைத்திட்டுச்
சந்தனக் குழம்பதனை
மேனியெங்கும் பூசினர்.


அழகிய சுண்ணப்பொடியுடன்
பூக்களும் சிதறிக்கிடந்த
பூம்படுக்கை தன்னில்
மந்த மாருதம் வீசியதில் மயங்கி
நீலோற்பவ மலரின் கண்களை ஒத்த
தம் கண்களைக்
காதலர் தம் மார்பில் பொருத்தியே
காதல் மகளிர் தாமும்
இன்பக்களிப்புடன் துயின்றனர்.


(மந்த மாருதம் - இளந்தென்றல்)


வல்லமை 11.06.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, July 18, 2012

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக

ஓர் உருதுக்கவிதையின் தமிழாக்கம்

ஞாபகக் குறி ஒன்று எடுத்து வருவாயாக.


உன்னிடம்
இறைஞ்சுகிறேன்.


ஒவ்வொரு பயணத்தின் போதும்
ஞாபகக்குறி ஒன்று
எடுத்து நீ வாருவாயாக.
களைத்துப் போய்விட்ட பாதங்களுடன்
பட்டாம்பூச்சியின் சிறகுகளையும்
எடுத்து நீ வருவாயாக.


உன்னுடனான தோழமை பற்றி
எழுதி வருகின்றேன் ஒரு கதை.
உனக்கு முடியுமானால்
நல்ல வார்த்தை ஒன்றை
எடுத்து நீ வருவாயாக.


நான் நம்புகின்றேன்.
நம் அன்பும் அது தரும் நம்பிக்கையும்
நம்மைக் களைத்து போகவிடாது.
நம்மால் முடியும்.
இந்தக் காதலைப்
புதுப்பித்துக் கொண்டே இருக்க .


தேவதைகளின் மாந்திரீக உலகுக்கு
நீ செல்ல நேரும்போது
நிலவொளிரும் அழகு முகமொன்றால்
நீ கவரப்பட்டால்
அதே போன்றதொரு முகம் செதுக்கி
எடுத்து நீ வருவாயாக.


பயணங்களில் உனக்கிருக்கும்
கட்டுக்கடங்காக் காதல்
உன்னை வீட்டிலிருந்து வெளியே
இழுத்துக் கொண்டுதான் செல்கிறது.


பயணப்பைகளில் சுமந்தே வரும்
தூசியது போலவே
வருத்தப் பட வைத்திடும்
எதையும் திரும்பவும்தான்
கொண்டு நீ வந்திடாதே.


வருத்தங்கள் சுமந்துவர நேரினும்
ஆத்மார்த்தமாகச் சுமந்தேதான்
எடுத்து நீ வருவாயாக


விசித்திரமான வேடிக்கையான
சூழல்கள் தன்னில்
வாழ்ந்துதான் வருகின்றோம்.
உன் பயணமது முடியும் தருணம்
காதலை நீ எழுதி வந்திருந்தால்
நனைந்த கண்களைத்தான்
எடுத்து நீ வருவாயாக.


உருது மொழியில் மூலக்கவிதை:  Noshi Gillani (பாகிஸ்தான் பெண் கவிஞர் )
ஆங்கில மொழிமாற்றம்: Noshi Gillani
ஆங்கில மொழிபெயர்ப்பு: Lavinia Greenlaw (லண்டன்)

அதீதம் மே, 2012 இதழில் வெளிவந்தது.