Wednesday, April 21, 2010

பாவேந்தருக்கு நினைவாஞ்சலி!








தமிழே!
தமிழால் வணங்குகின்றேன்!

பள்ளிப் பருவத்தில்
செய்யுள் பயிலுகையில்
இலக்கியத்தேனூட்டி
வளர்த்த ஆசிரியையைதான்
அத்தனை பாடல்களையும்
இயற்றியவர் என்றெண்ணி
வாய்பிளந்து பார்த்திருந்த பருவமது;

நின் தலைவனாம்
மீசைக்காரனின் முழக்கத்தினுக்கும்
அவன் அடியொற்றிய தாசனாம்
உன் வார்த்தைகட்கும்
அர்த்தங்கள் அறிய ஆரம்பிக்க....

எத்துணை துயரங்கள்
கடந்து வந்திருக்கிறோம்
என்றுணர்த்தித்
தமிழ்ச் சாட்டை சொடுக்கிச்
சரித்திரம் போதித்தவர்கள் நீங்கள்!

புரட்சி
வீரம்
விவேகம்
விடுதலை
தத்துவம்
குடும்பம்
பெண்..............

சமூகத்தின் பன்முகங்களில்
எதைத்தான் விட்டுவைத்தாய் நீ!

தமிழ்பால் தணியாத தாகம்
என்னுள்ளே தான் வளர்த்து
எளிய வார்த்தைகளில்
தெள்ளுதமிழ் அள்ளித்தந்து
தாலாட்டியவன் நீ!

இன்று யாம்
இன்னமும்
தமிழ்பேசி,
தமிழ்படித்துத்
தரணியில் உலவுகிறோம்..........

இதற்கெல்லாம்
இன்றியமையாக் காரணமாய்
இலங்குகின்ற
இலக்கியச் சோலையில்
அழியாத மரமாய்
வேரூன்றி நீ!

தமிழே!
நின் தமிழுக்குத்
தலைவணங்குகின்றேன்!
நின் தமிழால் வணங்குகின்றேன்!

தமிழே!
நானறிந்த தமிழ்கொண்டு
எண்ணமலர்கள் தூவி
நான் செய்கின்ற
அஞ்சலி ஏற்றிடு!
எம் தமிழ்
என்றென்றும் காத்திடு!

Monday, April 19, 2010

என் புதிய வலைப்பூக்கள்:

நட்பு செஞ்சங்களுக்கு,


சமையலுக்காகவென்று என் புதிய வலைப்பூக்கள்:

ஆங்கிலத்தில்...Malar's Kitchen

http://malar-kitchen.blogspot.com/ 


தமிழில்...சமையலும் கைப்பழக்கம்


http://www.maiyaludansamaiyal.blogspot.com/ 

Tuesday, April 13, 2010

தெருக்காட்சியும் தொலைக்காட்சியும்

குப்பைத் தொட்டியில்
வாழ்க்கை தேடும்
அழுக்குப் பெண்,
கூலி வேலையில்
பள்ளிப் பருவம் தொலைத்த
பசித்த சிறுவன்,
நடுத்தெருவில் மனைவியை
நையப் புடைக்கும்
இந்தியத் திருக் 'குடி'மகன்

தெருக்காட்சியைப்
பார்த்துப் பரிதவித்து
இல்லம் நுழைய...

ஐபிஎல் அட்டவணை
சானியா திருமணம்
சந்தை நிலவரம்

மந்திரி அறிக்கை
கல்லூரிச் சேர்க்கை
புதுப்பட விமர்சனம்

மெய்யான கதைகள்
பொய்யான புனைவுகள்........

தொலைக்காட்சியைப்
பார்த்துப் பல்லிளித்துப்
பரவசமடைந்ததில்
தெருக்காட்சியது
தேய்ந்தே போனது.

Saturday, April 10, 2010

குறளின் குரல் - 3

அதிகாரம்: 113. காதற்சிறப்புரைத்தல்

குறள் எண்: 1127

கண்ணுள்ளார் காத லராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.


கண் உள்ளார் காதலவராக, கண்ணும்
எழுதேம், கரப்பாக்கு அறிந்து.

விளக்கம்:

எப்போதும்
என்
கண்ணிலேயே
உள்ளார்
என் காதலர்.
அவர்
கண்ணைவிட்டு
மறைய நேருமே
என்றஞ்சுவதால்
மையெழுதும்
பழக்கத்தையே
கைவிட்டுவிட்டேன்.

-----------------
அதிகாரம்: 35. துறவு
குறள் எண்: 341

யாதனின் யாதனி நீங்கியா னோத
லதனி னதனி னிலன்.


யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம்:

எவ்வெப்
பொருள் மீது
ஆசை கொள்வதை
ஒருவன்
விடுக்கிறானோ,
அவ்வப்
பொருள் குறித்து
அவன்
துன்பமடைவதில்லை.
-------------------
அதிகாரம்: 2. வான் சிறப்பு
குறள் எண்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
துப்பார்க்குத் துப்பு, ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்
துப்பு ஆய தூஉம் மழை.
விளக்கம்:

(துப்பு - உணவு)

உண்பவர்களுக்கு
உணவுப் பொருள்களை
உண்டாக்கித் தருகிறது;
உண்பவர்களுக்குத் தானே
உகந்த
உயர்ந்த
உணவாகவும் ஆகி
உற்ற தாகம் தணித்து
உய்ந்து நிற்கிறது..
உயிர்களை
உய்வித்து
உயிர்தரும் மழை.
------------------
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
சார்புஉணர்ந்து, சார்புகெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா, சார்தரும் நோய்.

விளக்கம்:

அனைத்திற்கும்
சார்பான
செம்பொருளின்
மெய்யறிந்து
யான் எனது என்ற
பொய்ப்பொருள் மீது
பற்றை விடுத்து
ஒருவன் ஒழுகுவானாயின்
அவனைப் பிற துன்பங்கள்
சார்ந்து வாரா..
-------------------

அதிகாரம்: 5. இல்வாழ்க்கை
குறள் எண்: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப ரலை.


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

விளக்கம்:

தன் குல முன்னோர்
தான் வழிபடும் தெய்வம்
தன் விருந்தினர்,
தன் சுற்றத்தார்,
தான், தன் குடும்பம் போற்றிக் காத்தல் --
தப்பாமல் இவை ஐந்திடத்தும்
தளராத அறத்தைப் பேணுதல்
தலைவனாம் இல்லறத்தானுக்குத்
தலையாய கடமையாகும்.