Thursday, June 24, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 6

புகார்க்காண்டம் - மங்கலவாழ்த்துப்பாடல்


வாழ்த்து, வணக்கம்


திங்களைப் போற்றுவோம்!
திங்களைப்  போற்றுவோம்!
பூந்துகள் மணங்கமழ்
ஆத்திமாலை அணிந்த சோழனின்
குளிர் வெண்கொற்றக்கொடை போல,
அழகிய இவ்வுலகைக்
காத்து நிற்பதால்
திங்களைப் போற்றுவோம்!

கதிரவனைப் போற்றுவோம்!
கதிரவனைப் போற்றுவோம்!
காவிரி மன்னன்
ஆணைச்சக்கரம் போலப்
பொன்னிறம் கொண்ட
உச்சியை உடைய
மேருமலையை வலம் வருதலால்
கதிரவனைப் போற்றுவோம்!

சிறந்த மழையைப் போற்றுவோம்!
சிறந்த மழையைப் போற்றுவோம்!
அச்சம் தரும்
கடல்சூழ் உலகிற்குச்
சோழன் தன் அருள்கொண்டு
காவல் நிற்பது போல்...
கீழிருந்து விண்ணோக்கி
நகர்ந்து நின்று
அருட்காவல் நிற்பதால்..
சிறந்த மழையைப் போற்றுவோம்!

பூம்புகாரைப் போற்றுவோம்!
பூம்புகாரைப் போற்றுவோம்!
செறிந்த கடல்நீரதனை
வேலியாய்க் கொண்ட
இப்பூவலகில்,
சோழர் குலத்தோடு பிறந்து
காலம் காலமாய்ப்
புகழது பரவி
உயர்ந்து சிறந்து நிற்பதால்
பூம்புகாரைப் போற்றுவோம்!

புகார் நகரின் சிறப்பு

பொதிகை மலை,
இமய மலை,
தன்னைவிட்டுப் பெயராத
பழங்குடியினர் நிறைபுகழ்ப்
புகார் நகரம்....
இம்மூன்று இடங்களிலும்
சிறப்புமிக்க உயர்ந்தோர் வாழ்வதால்
அந்நகரம்
நடுக்கமின்றி நிலைபெற்று
வாழுமே தவிர
அழியக்கூடியதன்று....என்பர்
முதிர்ந்த கேள்விஞானம் பெற்ற
சான்றோர் பெருமக்கள்.

அதனால்,
நாகநீள் எனப்படும்
தேவரின் உலகத்தோடும்
நாகநாடு எனப்படும்
நாகர் உலகத்தோடும்
ஒப்பிடத்தக்க
பெருமையும் செல்வமும்
நீண்ட புகழும்
பொலிந்து நிற்கும்
புகார் நகரம்.

சிலம்பின் வரிகள் (1-22) இங்கே...

3 comments:

ஜீவி said...

வெகு இயல்பான உங்கள் வரிகள், நீங்கள் எடுத்துக் கொண்ட பணிக்கு
சிறப்பு கூட்டுகிறது. தொடர்ந்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//அச்சம் தரும்
கடல்சூழ் உலகிற்குச்
சோழன் தன் அருள்கொண்டு
காவல் நிற்பது போல்...
கீழிருந்து விண்ணோக்கி
நகர்ந்து நின்று
அருட்காவல் நிற்பதால்..
சிறந்த மழையைப் போற்றுவோம்! //

அருமை.

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!